காப்பியங்களும் புராணங்களும்

Saturday, October 1, 2011
பிறவகை இலக்கியங்கள்

மேற்கண்ட காப்பியங்கள், புராணங்கள் தவிர இக்காலக்
கட்டத்தில் வேறு சில சிற்றிலக்கியங்களும், தோன்றின. அவை
சமயம் சார்ந்த நிலையிலும், சமயம்சாரா நிலையிலும் அடங்கும்.

சமயம் சார்ந்தவை

சமயம் சார்ந்த நிலையில் திருப்புகழ், திருஆனைக்காஉலா,
திருவாய்மொழி நூற்றந்தாதி, திருக்கலம்பகம் போன்றவை
உள்ளிட்ட பல நூல்களாகும்.
திருப்புகழ்

இதனைப் பாடியவர் அருணகிரிநாதர். சைவ இலக்கியங்களில்
திருப்புகழுக்குச் சிறப்பான இடம் உண்டு. பண்டைய ஆசிரியர்கள்
திருப்புகழ் பாடல்கள் 16,000 என்பர். தோன்றிய காலம் முதல்
திருப்புகழ் தமிழ் மக்களின் உள்ளத்தைக் கொள்ளை
கொண்டுவிட்டது.

திருப்புகழைக் கேட்கத் திருப்புகழைக் கற்கத்
திருப்புகழை நித்தந் தியானிக்கத் - திருப்புகழை
உற்றிருந்து கேட்பாருக் குற்ற வினையிரண்டும்
அற்றிருக்கத் தானே யறும்

நூலின் பெயர் திருப்புகழாய் அமைந்திருப்பதோடு மட்டுமன்றி,
நூலில் அமைந்துள்ள 1307 பாடல்கள் ஒவ்வொன்றுமே திருப்புகழ்
என்றே வழங்கப்படுகின்றன. இதுவே இதன் சிறப்பாகும். முருகப்
பெருமானின் பெருமைகளை இந்நூல் கூறுகிறது. இந்நூலில் சபாஷ்,
சலாம், ராவுத்தன் போன்ற முகமதியச் சொற்கள் கலந்திருப்பது
நோக்கத்தக்கது. அக்கால ஆட்சிப்போக்கினையும், மொழிப்
போக்கினையும் இது உணர்த்துகிறது. இதைப் போலவே அளவுக்கு
மீறிய வடசொற்களும் இதில் கலந்துள்ளன. இந்நூலாசிரியர் பாடிய
பிற நூல்கள் கந்தர் அலங்காரம், கந்தரனுபூதி,
திருஎழுகூற்றிருக்கை, கந்தரந்தாதி போன்றவையாகும்.
கல்வியில் குறைந்தவர்கள்கூட இவரது பாடல்களில் ஆர்வம்
செலுத்துவர். முருகனைப் போற்றும் பாடல்கள் இக்காலக்
கட்டத்தில் அதிகம் தோன்றியுள்ளன.
திருஆனைக்காஉலா

இந்நூலும் சமயம் சார்ந்த நூல்களில் ஒன்றாகும்.
ஆனைக்காவில் உள்ள வெண்ணாவலீசர் மீது பாடப்பெற்றது.
தலச்சிறப்பில் இங்குப் பேறு பெற்றவர்களின் செய்தி கூறப்பட்டுள்ளது.

இந்நூலைப் பாடியவர் காளமேகப்புலவர். நினைத்தவுடன்
தங்குதடையின்றி எப்பொருளைப் பற்றியும், எவ்விதமாகவும்
சாமர்த்தியமாகப் பாடும் ஆற்றல் இவருக்கு இருந்தது. கார்மேகம்
போல இவர் கவிதை மாரி பொழிந்தமை கண்ட பெரியோர்
இவரைக் காளமேகம் என்றனர். இந்நூலிலுள்ள கண்ணிகள் 461,
வெண்பாக்கள் 2 ஆகும். இந்நூல் சிறந்த பக்திச்சுவை கொண்டது.
இறைவனின் பெயரைக் கூறும் போது இவர் பயன்படுத்தும்
தொடர்கள் திருமுறைகளில் இவருக்கு உள்ள ஈடுபாட்டைக்
காட்டுகின்றன. இவர் இயற்றிய பிற நூல்கள் சித்திர மடல்,
சமுத்திர விலாசம் போன்றவை ஆகும்.
திருவாய்மொழி நூற்றந்தாதி

மணவாள முனிகளால் இயற்றப்பட்டது. இவர் பல
பிரபந்தங்கள் செய்தவர். முருகன் மீதான நூல்கள் எழ
அருணகிரிநாதர் காரணமாக இருந்தார். அதுபோல வைணவ
நூல்கள் இக்காலத்தில் எழுதப்பட இவரே முக்கிய காரணமாகும்.
நம்மாழ்வார் பாடிய திருவாய்மொழிப் பதிகங்கள் அனைத்தையும்
எடுத்து, பதிகத்துக்கு ஒரு வெண்பா வீதம் 100 வெண்பாக்கள்
பாடியுள்ளார். ஒவ்வொரு பதிகத்தின் முதற்பாட்டின்
முதற்சொல்லையும், கடைசிப்பாட்டின் கடைசிச் சொல்லையும் தாம்
பாடிய ஒவ்வொரு வெண்பாவுக்கும் முதலும் முடிவுமாக வைத்துப்
பாடியுள்ளார். இவருடைய பிற நூல்கள் உபதேச ரத்ன மாலை,
ஆர்த்திப் பிரபந்தம் போன்றவையாகும்.
திருக்கலம்பகம்

திருக்கலம்பகம் இக்காலத்தில் தோன்றிய சமண நூலாகும்.
இதன் ஆசிரியர் உதீசித்தேவர். இந்நூல் அருகனின் தோத்திர
நூலாகும். 110 பாடல்களையுடையது. கலம்பக இலக்கணங்கள்
கொண்டது. ஒரு தலம் குறித்துப் பாடப் பெறாமல் பொதுவாய்
அருகனைத் துதிக்கின்றபடியால், தலத்தைச் சுட்டியதாக வழங்காமல்
திருக்கலம்பகம் என்று பெயர்பெற்றது. நீயே சிவபிரான், நீயே
திருமால், நீயே பிரமன், நீயே முருகன், உனது சக்தியே அம்பிகை
எனப் பலவாறாக அருகனைப் போற்றிய வகையில் பாடல்கள்
உள்ளன. இக்காலக் கட்டத்தில் தோன்றிய பிற சமண நூல்கள்
ஆதிநாதர் பிள்ளைத் தமிழ், அனந்தகவி உரை
போன்றவையாகும்.

சமயம் சாராதவை

சமயம் சாராத நூல்களாக இக்காலக் கட்டத்தில் தோன்றியவை
வருணகுலாதித்தன் மடல், சித்திர மடல், கபிலரகவல்
போன்றவையாகும்.
வருணகுலாதித்தன் மடல்

96 வகைச் சிற்றிலக்கியங்களில் ஒன்றான மடல் வகையைச்
சார்ந்தது இந்த நூல். தலைவன் தான் காதலித்த தலைவியைப்
பெறாத நிலையில், அவளை அடைய, பனங்கருக்கால் குதிரை
போல் ஓர் ஊர்தி செய்து ஊர்தலே இந்நூலின் வடிவமாகும்.
நாகையில் வாழ்ந்த வள்ளல் மீது காளிமுத்து என்னும் தாசி
பாடியது. சொல் நயம், அடுக்கு, எதுகை, மோனை, தொடை நயம்,
முரண் தொடை, மடக்கு முதலிய அனைத்துச் செய்யுள்
நலன்களையும் இம்மடலில் காணலாம். வருணனை, சந்த நடை
சிறப்பாக அமையப் பெற்றது. சிறப்பான இலக்கிய நடையும், சில
சமயம் பேச்சு நடையும் இதில் இழைந்து வருவதைக் காணலாம்.
சித்திர மடல்

இது, மடல் வகையைச் சார்ந்த மற்றொரு நூலாகும். 174
கண்ணிகளும், ஒரு காப்புச் செய்யுளும் உடையது. பின்னர்த்
தோன்றிய மடல் பாட்டுடைத் தலைவனின் சிறப்பை விரித்துக்
கூறும். அக்கூற்றுகள் இதில் காணப்படாதது இதன் சிறப்பம்சமாகும்.
மடல் மரபைக் கூறும் திருக்குறளைக் கேளுங்கள்

காமம் உழந்து வருந்தினார்க்கு ஏமம்
மடல் அல்லது இல்லை வலி
(1131)

(காமத்தால் துன்புற்று (காதலியின் அன்பு பெறாமல்)
வருந்தினவர்க்கு மடலூர்தல் அல்லாமல் வலிமையான துணை வேறு
எதுவும் இல்லை என்பது இதன் பொருளாகும்).
# கபிலரகவல்

கபிலர் அகவல், சமூகப்புரட்சியைக் கவிதை வடிவில்
வெளிப்படுத்தியது எனலாம். கடவுளுக்குச் சாதி வேற்றுமை
இல்லை, அவருடைய மெய்யடியார்களுக்கும், ஞானிகளுக்கும்
சாதிவேற்றுமை இல்லை என்பதை நாயன்மார்கள் மற்றும்
ஆழ்வார்களின் வரலாறுகள் காட்டுகின்றன. மக்களாய்ப்
பிறந்தோர் இரப்பவர்க்கு இட்டு, புலையும் (ஊன்), கொலையும்,
களவும் தவிர்த்து அறத்தில் நிற்பார்களாக என்று இவர்
அறிவுரை கூறுகிறார். எக்காலத்திலும் பொருந்தும் வகையில்
கபிலரகவல் கூறும் அறிவுரையைக் கொஞ்சம் கேளுங்கள்:

குலமு மொன்றே குடியு மொன்றே
இறப்பு மொன்றே பிறப்பு மொன்றே

இதைப் போலவே சாதியால் உயர்வு கூறுவோரைக்
கண்டிக்கும் மற்றொரு நூல் பாய்ச்சலூர்ப்பதிகம் எனப்படும்.
அது ஒரு நாடோடிப்பாடல் ஆகும்.
Read more ...

காப்பியங்களும் புராணங்களும்

Saturday, October 1, 2011
காப்பியங்களும் புராணங்களும்

இக்காலக் கட்டத்தில் பல காப்பியங்களும், புராணங்களும்
தோன்றின. அரிச்சந்திர புராணம் , உதயண குமார காவியம்,
காதம்பரி போன்றவை இக்காலத்தில் தோன்றிய குறிப்பிடத்தக்க
இலக்கியங்களாகும்.

காப்பியங்கள்

பெருங்கதையில் இடம் பெற்ற உதயணன் பற்றிய ஒரு
காப்பியமும், காதம்பரி போன்ற மொழி பெயர்ப்புக் காப்பியங்களும்
தோன்றின.
உதயண குமார காவியம்

இது, கௌசாம்பி நாட்டு மன்னனான உதயணனின்
வரலாற்றைக் கூறுகிறது. ஆறு காண்டப் பாகுபாடு உடையது. 369
விருத்தப்பாக்களைக் கொண்டது. பெருங்கதையின் முற்பகுதியும்,
பிற்பகுதியும் கிடைக்காமையால் உதயணனின் வரலாற்றை அறிய
இது உதவுகிறது. (பெருங்கதை காலத்தால் மிகவும் முற்பட்டது -
உதயணனின் வரலாற்றைக் கூறுவது). பெயர்தான் காவியமே தவிர,
இதில் காவிய இயல்புகள் இல்லை. பெருங்கதையை அடியொற்றியே
இக்காவியம் செல்கிறது. இக்காவியம் போற்றப்படாததற்குக் காரணம்
இதில் இலக்கியச் சுவை குறைந்திருப்பதே என்பது அறிஞர் கருத்து.
# காதம்பரி

மொழிபெயர்க்கப்பட்ட காவியங்களில் குறிப்பிடத்தக்க ஒரு
நூல், காதம்பரி. இது, கந்தர்வப்பெண் காதம்பரியை உச்சயினி
மன்னன் சந்திராபீடன் மணந்த வரலாற்றைக் கூறுகிறது.
ஹர்ஷருடைய சபையில் கவிஞராக இருந்த பட்டபாணர்
வடமொழியில் வசன நடையில் இதனை எழுதியுள்ளார். அதன்
மொழிபெயர்ப்பே இந்நூல். இதன் ஆசிரியர் ஆதிவராக கவி
ஆவார்.

புராணங்கள்

கி.பி 11 முதல் 15-ஆம் நூற்றாண்டு வரையிலான இக்காலக்
கட்டத்தில் புராணங்களும் தோன்றின. தமிழில் தோன்றிய
புராணங்களைப் புராணங்கள் எனவும், புராணக் காப்பியங்கள்
எனவும் இரு வகையாகப் பிரிக்கலாம். முதற்புராணம்
பெரியபுராணம் ஆகும். புராணம் என்பது பழமையான
நிகழ்வுகளைக் கதை வழியாகக் கூறும் முயற்சியாகும்.
இந்நூற்றாண்டில் தோன்றிய குறிப்பிடத்தக்கப் புராணங்களாக,
திருவாதவூரடிகள் புராணம், ஸ்ரீபுராணம் போன்றவற்றைக்
கூறலாம்.
அரிச்சந்திர புராணம்

அரிச்சந்திர புராணம் எனப்படும் அரிச்சந்திர சரித்திரம்,
தமிழ் மக்கள் நன்கு அறிந்த இதிகாசக் கிளைக் கதையாகும்.
இதனுடைய முதற்பதிப்பு இதனை அரிச்சந்திர சரிதம் எனக்
கூறுகிறது. இதனைப் பாடியவர் நல்லூர் வீரை ஆசு கவிராயர்.
நூலின் பாக்கள் சுவையுடையன. எடுத்துக்காட்டாக, அரிச்சந்திரன்
தன் மனைவியின் கழுத்தை வெட்ட வேண்டிய நேரத்தில்
கூறுவதாவது:

உலகுயிர்க்கெலாம் பசுபதி ஒருமுதல் ஆயின்
அலகில் சீர்உடை அவன்மொழி மறையெனின் அதன்கண்
இலகுஅறம் பலவற்றினும் வாய்மை ஈடுஇலதேல்
விலகு உருமல் அவ் வாய்மையை விரதமாக்கொளின்யான்

(அரிச்சந்திரபுராணம், மயான காண்டம், 135)்

(பசுபதி = உயிர்களின் தலைவனாகிய சிவபெருமான்; ஒருமுதல் = தனிப்பெருந்தெய்வம்; அலகில் - அலகுஇல் = அளவில்லாத; இலகு = விளங்கும்; வாய்மை = உண்மை)

சிவபெருமான்தான் முழுமுதற் கடவுள் என்பதும்,
அப்பெருமான் உரைத்ததே வேதம் என்பதும், அவ்வேதத்தில்
கூறப்பட்டுள்ள அறங்களில் இணையற்றது, உயர்ந்தது உண்மை
பேசுதலே என்பதும், அந்த அறத்தை நான் இடைவிடாமல்
கடைப்பிடிக்கிறேன் என்பதும் உண்மையானால், இவ்வாள்
இவளைக் கொல்லாது இருக்கட்டும் என்பது இதன் பொருள்.
# திருவாதவூரடிகள் புராணம்

கடவுள் மாமுனிவர் இயற்றிய திருவாதவூரடிகள் புராணம்
545 செய்யுட்களைக் கொண்டது. அளவில் இது சிறிய நூல்.
சுந்தரரும், சேக்கிழாரும் மாணிக்கவாசகரைப் பாடவில்லை. பின்னர்
வந்த கடவுள் மாமுனிவர் அக்குறையைச் சரி செய்யும் வகையில்
மாணிக்கவாசகர் வரலாற்றைப் பாடியதாகக் கொள்ளலாம். இதன்
முக்கியச் சிறப்பு இதுவேயாகும். மந்திரிச்சருக்கம், திருப்பெருந்துறைச்
சருக்கம், குதிரையிட்ட சருக்கம், மண் சுமந்த சருக்கம், திருவம்பலச்
சருக்கம், புத்தரை வாதில் வென்ற சருக்கம், திருவடி பெற்ற
சருக்கம் என்ற பல பகுதிகள் இப்புராணத்தில் அடங்கியுள்ளன.
சைவசித்தாந்தக் கருத்துகள் இதில் அதிகமாகக் காணப்படுகின்றன.
இந்நூல் ஒரு தலபுராணமே ஆயினும் மாணிக்கவாசகரின்
பெருமையைக் கூறுவதால் பெருமை பெறுகிறது எனலாம்.
# ஸ்ரீபுராணம்

இக்காலத்தில் தோன்றிய மற்றொரு சமணப்புராணமாகும். இது
மகாபுராண சங்கிரகத்தின் மொழிபெயர்ப்பாகும். இதன் ஆசிரியர்
பெயர் கிடைக்கவில்லை. இவர் வடமொழிப்புலமையும்,
தமிழ்ப்புலமையும் மிக்கவர் என்பது இந்நூல் மூலம் தெரிய வருகிறது.
இந்நூல் 23 தீர்த்தங்கரர்களின் வரலாற்றைக் கூறுகிறது. இராமாயண,
பாரத, பாகவதக் கதைகள் இதில் பல் வகையான வேறுபாடுகளுடன்
கூறப்பட்டுள்ளன. இந் நூல் மணிப்பிரவாள நடையில் எழுதப்பட்டது.
இது உரைநடையாக உள்ளது. கவிதைக்குரிய வருணனைகள்
இந்நூலில் சேர்க்கப்படவில்லை. சமண நூல்களில் இது அளவில்
பெரியது.

இக்காலக் கட்டத்தில் திருப்புத்தூர்க் கோயிலிலுள்ள
சிவபெருமானின் திருவிளையாடல்களைக் கூறும் ஓங்குகோயில்
புராணம் (கி.பி. 1484) எழுந்தது. இப்புராணம் தற்போது
கிடைக்கவில்லை.
Read more ...