கடவுளின் பெயரால் விக்கிரகங்கள் செய்து வைத்து வணங்குவதும்,
அவைகளுக்குத் தினசரி பூசைகள், திருவிழாக்கள் செய்வதும் தொன்று
தொட்டு நடந்து வருபவை. இவைகளையெல்லாம் மூடப்பழக்கங்கள்
என்று சாடுவதென்றால் எவ்வளவு துணிவு வேண்டும்? புனிதமான
அடிப்படைக் கொள்கையையே ஆட்டிப் பார்ப்பதென்றால் அதனை
அறிந்து சொல்லும் பக்குவமும் வேண்டுமல்லவா?
இங்கு உருவ வழிபாடு தவறா என்ற வினாவுக்கும் ஒரு விளக்கம்
தேவைப்படுகின்றது.
ஆழ்ந்த அறிவில்லாத பாமர மக்களை ஒரு கட்டுக்கோப்பிற்குள்
கொண்டுவர, நல்வழிப்படுத்த உருவ வழிபாடு தேவைப்படுகின்றது.
சட்டத்துக்கும், சான்றோர் உரைகளுக்கும் கட்டுப்படாத சிந்தைத்
தெளிவில்லாத மனிதர்களுக்கு, ஒரு வடிவத்தைக் காட்டி இதுதான்
கடவுள், இவர் உனது பாவச் செயல்களைக் கண்காணித்து தண்டனை
தரக் காத்திருக்கின்றார். ஆகவே தவறு செய்யாதே என்று கண்டிப்
போமானால் அந்தக் கட்டளைக்கு அவர்கள் பணிகிறார்கள். மனதில்
கடவுள் கட்டளையை மீறி நடக்கக் கூடாது என்றும் நினைக்கிறார்கள்;
கடவுளின் கட்டளை என்று சொல்லப்படும் வார்த்தைகளுக்குக் கட்டுப்
படுகிறார்கள். அதனால் உருவ வழிபாடும் ஒரு வகையில்
பயனாகிறது. பலரை நல்வழிப்படுத்த உதவுகிறது. இதனால் உருவ வழிபாடு
தவறல்ல என்று ஆத்திகர்கள் வாதிடுவர்.
ஆனால், அறிவார்ந்த சித்தர்களோ இக்கருத்தை ஏற்றுக்கொள்வதில்லை.
உருவ வழிபாடு ஒரு மூட நம்பிக்கை. அதனால் மக்களிடம் அறிவு மயக்கம்
ஏற்படுகின்றது. எங்கும் நிறைந்த கடவுளைக் கல்லில் இருப்பதாகவும், செம்பில்
இருப்பதாகவும், மண்ணில் இருப்பதாகவும், மரத்தில் இருப்பதாகவும்,
உருவமைத்துக் காட்டுவது கடவுளையே அவமதிப்பதாகும் என்று
வாதிடுகின்றனர்.
சித்தர்களின் இந்தக் கருத்தையொட்டியே சிவவாக்கியரும் மேற்கண்ட
வாறு உருவ வழிபாட்டை எள்ளி நகையாடினார். கல்லில் கடவுளின் வடிவம்
செய்து அதைப் பல பெயர்களால் அழைப்பது அறிவின்மை; அறிவற்ற
மூடர்கள்தாம் இவ்விதம் செய்வார்கள். உலகைப் படைத்துக் காத்து,
அழிக்கவும் வல்ல ஒரு பொருள் கல்லிலா இருக்கிறது? இல்லை அந்தக்
கடவுளின் வடிவம் உள்ளத்தில் மட்டுமே இருக்கிறது. அதனை உள்ளத்தால்
அல்லவோ வழிபட வேண்டும் என்று அறிவுரை கூறுகின்றார்.
பண்ணிவைத்த கல்லையும் பழம் பொருளது என்றுநீர்
எண்ணம் உற்றும் என்னபேர் உரைக்கின்றீர்கள் ஏழைகாள்
பண்ணவும் படைக்கவும் படைத்துவைத்து அளிக்கவும்
ஒண்ணும் ஆகி உலகு அளித்த ஒன்றை நெஞ்சில் உன்னுமே
கல்லுருவம் நம்மால் செய்து வைக்கப்பட்டது. அதைப் பழமையான
பொருள், அழியாத இறை என்று எண்ணுகிறீர்கள். அதற்கு என்னென்னமோ
பேர் சொல்லுகிறீர்கள். உங்கள் மனதில் தோன்றும் பெயர்களையெல்லாம்
இட்டு அழைக்கின்றீர்கள். உங்களின் அறியாமை காரணமாகத்தான் இப்படி
யெல்லாம் கடவுளின் பெயரைக் கல்லுக்கு வைத்து
அழைக்கின்றீர்கள். இந்த உலகைப் படைத்த ஒன்று எல்லாவற்றையும் செய்ய
வல்லது; உலகையும், உலகப் பொருள்களையும் படைக்க வல்லது. தாம்
படைத்த பொருளை அறியாமல் வைத்திருக்கவும் காப்பாற்றவும் வல்லது.
அதுமட்டுமல்ல; அவைகளைத் தேவைப்படாத பொழுது அழிக்கவும் வல்லது.
இப்படி படைத்து, காத்து, அழிக்கும் பரம்பொருளை நீங்கள் கல்லிலே காண
இயலாது. உங்கள் நெஞ்சினில் மட்டுமே உணர முடியும். மனதில் மட்டுமே
உணர முடியும் என்று உண்மையை உரைக்கின்றார் சிவவாக்கியர்.
இதில் எங்கும் நிறைந்த கடவுளை உருவ வழிபாட்டின் மூலம் வழி
படுவது தவறு என்றும், அப்படி வழிபடுபவர்கள் அறியாமையை உடைய
ஏழைகள் என்றும் சாடுகின்றார்.
உருவ வழிபாட்டையே மறுக்கும் சிவவாக்கியர் அவ்வுருவ வழிபாட்டின்
பெயரால் நடைபெறும் திருவிழாக்களை மட்டும் ஏற்றுக்கொள்வாரா என்ன?
“ஊரில் உள்ள மனிதர்காள் ஒருமனதாய்க் கூடியே
தேரிலே வடத்தை விட்டு செம்பை வைத்து இழுக்கின்றீர்
ஆரினாலும் அறியொணாத ஆதிசித்த நாதரை
பேதையான மனிதர் பண்ணும் புரளி பாரும் பாருமே”
ஊரிலே வாழும் பெரிய மனிதர்களே, நீங்கள் உங்களுக்குள் உள்ள
கருத்து வேற்றுமைகளைக் களைந்து ஒரே மனதாக நின்று பெரிய தேரினை
அலங்காரம் செய்து அதில் செப்புச் சிலையை வைத்து, அத்தேரின் வடத்தை
இழுக்கிறீர்கள். ஒரு சிறிய உருவத்திற்கு இவ்வளவு பெரிய தேரா?
நூற்றுக்கணக்கான மக்கள் உடல் வியர்வை சிந்தி, உள்ளம் வருந்தி இப்படி
இருப்பது அறிவுடையமையாகுமா? இதனால் எவ்வளவு பொருள் விரயம்?
எவ்வளவு நேரம் வீணாகிறது?
யாருக்கும் புலனாகாத கடவுள் அறிவின் வடிவானவர். அவரே
ஆதிசித்தநாதர், அவரை சித்தத்தினால் மட்டுமே அறிதல் கூடும். அப்படி
யிருக்கையில் அவரை வழிபட என்னவெல்லாமோ செய்கிறீர்களே! தேராம்,
திருவிழாவாம், கொட்டாம், முழக்காம் - இவையெல்லாம் வெறும் புரளி.
அறிவற்றவர் செய்யும் புரளி. இதனை அறிவுடைய மக்களே ஏற்றுக்
கொள்ளுங்கள் என்று அழைக்கிறார்.
ஆனால் அவரது கொள்கையை இவ்வுலக மக்கள் ஏற்றுக்
கொண்டார்களா என்பதுதான் விளங்காத புதிர்.
Read more ...