பிரபஞ்சம் தோன்றியது

Saturday, August 7, 2010
நம்முடைய பிறந்த நாளை நம்முடைய பெற்றோர்கள் கூறித்தான் நமக்குத் தெரியும். இது போலவே, அவர்களின் பிறந்தநாளை அவர்களது பெற்றோர் கூறி அவர்களுக்குத் தெரியும்.
இப்படியே கூறிக்கொண்டே போகலாம். என்றாலும், நமது மூதாதையர்களைப் பற்றிய வரலாற்றை இரண்டு அல்லது மூன்று தலைமுறைக்கு மேல் நாம் அறிந்திருக்க முடியாது!
நமது மூதாதையர்களுக்கும் முன்னோடியாக குரங்கு இனம் இருந்து வந்ததாக அறிவியல் கூறுகிறது. (சார்லஸ் டார்வின் தமது ஆய்வில் குறிப்பிடுகிறார்) இதையே நாம் ஒப்புக்கொண்டு மேலும் விவரங்கள் அறிய முற்படுவோமேயானால்:
இவர்கள் காலத்திற்கும் முன்னால் நமது உயிர்த்தோற்றம் அமீபாக்கள் என்று கூறப்படும் சின்னஞ்சிறு உயிர்களில் தோன்றி, காலப்போக்கில் இரு கால்களும், அவற்றில் பத்து விரல்களும், இவைகளை இயக்கும் நரம்புத் தொடர்களும், இவைகளின் மூலம் இயக்கப்படும் ஒரே ஒரு மூளையும், இந்த மூளையில் அடங்கப்பெற்ற செல்களைத் துளைத்தெடுக்கும் பல்வேறு கேள்விகளும், அதற்குப் பதில்களும் கூறக்கூடிய மனித இயந்திரமாக இன்று மனிதன் உருவகப்பட்டிருக்கிறான்.
பிரபஞ்சத்தில் நிகழப்பெற்ற எந்த ஒரு கேள்விகளுக்கும் – பிரச்சினைகளுக்கும் பதில் கூறும் ஒரே ஒரு உயிர் “மனிதன்” மட்டும்தான் என்பதை பெருமையோடு ஒப்புக்கொள்வோம்.
இன்று நம் முன்னே தோன்றப்படும் எந்த ஒரு பொருளை எடுத்துக்கொண்டாலும் அது எப்படித் தோன்றியது என்ற வினா எழுப்பி, அதற்குப் பதில் கூறும் நிலையில் இன்று அறிவியலில் வளர்ந்திருக்கிறான் மனிதன்.

அந்த அடிப்படையில் இப்பிரபஞ்சப் பொருட்களின் தோற்றம் எப்படித் தோன்றியது? என்று பல்வேறு அறிஞர் பெருமக்கள் தமது ஆராய்ச்சி மூலம் கருத்துகளை வெளியிட்டுக் கொண்டு இருக்கிறார்கள்.
அந்தக் கருத்துகளை இங்கே பகிர்ந்து கொள்வதுடன், நமது கருத்துகளையும் முன்வைக்க கடமைப்பட்டுள்ளோம்.

பிரபஞ்சம் உருவான கட்டத்தில் மிகப் பெரிய வெடிப்பு ஏற்பட்டிருக்க வேண்டும்; அப்படி ஏற்பட்ட வெடிப்பின் மூலம் சிதறி ஓடப்பெற்ற பொருட்கள் இந்த நிமிடம் வரை விண்வெளியில் தொடர் ஓட்டமாக நிகழ்ந்து கொண்டிருக்கிறது என்று கூறுகிறார் பெல்ஜிய வான ஆராய்ச்சியாளர் ஷேர்த் லேமாத்ரே (Georges Lemaitre) என்ற அறிஞர்.

நினைத்துப் பார்க்க முடியாத அமுக்கத்தில்; அதாவது, ஒரு தேக்கரண்டி அளவுள்ள பொருள் கிட்டத்தட்ட 10 கோடி டன் எடையுள்ளதாக இருந்தால் எந்த அளவுக்கு அமுக்கம் நிறைந்திருக்குமோ அந்த அளவு திணிவு கொண்ட பொருளாக இருந்து, “பெரும் டமார்” என்ற சத்தத்துடன் வெடித்துச் சிதறியிருக்க வேண்டும்; என்று கூறும் அவர்,
இந்நிகழ்வு ஏற்பட்டு கிட்டத்தட்ட எழுநூறு கோடி ஆண்டுகள் கடந்திருக்கும் என்கிறார்.

பிரபஞ்சம் மேலும் மேலும் பெரிதாகி வரும் நிகழ்வினை கவனிக்கிற போது, அது புறப்பட்ட ஆரம்பம் என்று ஒன்று இருந்து அதிலிருந்து தொடர் ஓட்டமாக விரிந்துகொண்டே செல்கிறது என்று கூறுகிறார்.
பிரபஞ்சம் உருவாகி எழுநூறு கோடி ஆண்டுகள் இருக்கலாம், என்ற இக்கருத்தில் சில தவறுகள் தொக்கிக் கொண்டிருக்கின்றன.

ஒரு ஆண்டு என்பதே பூமியின் 365 சுற்றுக்களுக்குள் நிறைவடையும் ஒரு அலகு. பொருள் வெடித்து, அது சிதறி ஓடி, ஓடிய பாதையில் ஆங்காங்கே நட்சத்திரங்களாகவும், கிரகங்களாகவும் இடம் பெற்று அது தன்னைத் தானே சுற்றிக்கொண்டதில் கணிக்கப்பட்டது தான் நமது பூமியின் தோற்றம். ஒரு ஆண்டு கணக்கு.

பூமியின் 365 சுழற்சி கொண்டதுதான் ஒரு வருடம் என கணக்கிட்டு, அதை நமது நடைமுறைக்கு வழமையாக்கி வருகிறோம்.

எனவே இந்தச் சுழற்சி கணக்கீட்டின் மூலம் பிரபஞ்சத் தோற்றம் ஏற்பட்ட காலக்கணக்கை வகைப்படுத்துவது என்பது எப்படிப் பொருந்தும்? எனவே,
இக்கருத்து சரியானது இல்லை.

திணிவு மிக்க மொத்தை உருவம் ஒன்று வெடித்துச் சிதறி, ஓடியதின் தொடரில் தான் பிரபஞ்சப் பொருள் அனைத்தும் உருவாகியிருக்க வேண்டும் என்ற இக்கருத்து அமெரிக்கப் பவுதீக விஞ்ஞானி ஜார்ஜ் காமோவ் (George Gamow) என்பவரும் ஒப்புக்கொள்கிறார்.

* இன்று காணப்படும் பிரபஞ்சப் பொருள் அனைத்தும் அடர்த்திக்கொண்ட மொத்தையாக ஒரு கட்டத்தில் இருந்திருக்கிறது.
* இந்த மொத்தை 2500 கோடி டிகிரி பாரன்ஹைட் வெப்பத்தில் வெடித்துச் சிதறியிருக்கிறது.
*வெப்ப நிலை 50 லட்சம் டிகிரி பாரன்ஹைட்டாகக் குறைந்து மூலகங்கள் உருவாகி இருக்கிறது.

* வாயு நிலையில் இந்த பொருட்கள் ஒன்றோடு ஒன்று இணைந்து, ஈர்த்து, முகில்களாகப் பிரியச் செய்து நட்சத்திரங்களாகவும், கிரகங்களாகவும் உருப்பெற்றிருக்கின்றன என்ற இக்கருத்தை ஜார்ஜ் காமோவும் ஒப்புக்கொள்கிறார்.

மேற்கண்ட இக்கருத்தின் மூலம், பரிணாம வளர்ச்சியின் பல படிக்கட்டுகளை கடந்து இன்று, ஏன்? எதற்கு? எப்படி? என்ற கேள்விகளுக்குப் பதில் கண்டுபிடிப்பவர்களாக இருக்கிறோம்.
பெரும் பிண்டம் வெடித்துச் சிதறியதன் மூலம் அண்டங்கள் விரிவடைகின்றன என்ற கருத்தை ஒப்புக் கொள்வதாக இருந்தால், வெடித்துச் சிதறியதற்கு முந்தைய கட்டம் மற்றும் ஆரம்ப இடம் எங்கிருக்கிறது என்ற வினா எழுகிறது.

தவிர, வெடிப்புக்கு முந்தைய கட்டத்தில் விண்வெளி முழுமையும் வெறும் வெற்றிடமாக இருந்ததா? அவை வெடித்துச் சிதறி ஓடும் பாதைகளில் தடுப்பலைகள் இருந்து அதையும் கடந்து சென்றனவா என்பன போன்ற நியாயமான கேள்விகளுக்கு விடை கண்டுபிடிக்கின்ற இடத்திலே இருக்கிறோம். வேறு சில விஞ்ஞானிகள் தூசுப் படலம் தோன்றி, காலப் போக்கில் அவைகள் ஒன்றோடொன்று திரண்டு, திரட்சிகளாகி அதுவே, நட்சத்திரங்களாகவும், கிரகங்களாகவும் உருப்பெற்றிருக்கலாம் என்ற கருத்தை முன் வைக்கின்றனர்.

அறிவியல் வளர்ச்சியின் வேகம் புதிர்களுக்கு விடை காண்பதுதான் என்பதிலே பெருமை கொள்வோம்.

No comments:

Post a Comment