திருமந்திரம்

Monday, December 20, 2010
பரம்பொருளான இறையுடன் ஒன்றிணை யும் நிலையே முக்தி நிலை. இவ்வாறு ஜீவாத்மாபரமாத்மாவுடன் இணையும்போதுதான் எல்லையற்ற ஆனந்த நிலை உருவாகும். இதையேபரமானந்த நிலை என்கிறோம். இதுவே இறையனுபவம். இந்த இறையனுபவம் குறித்துதிருமூலர் பாடியுள்ள சில திருமந்திரப் பாடல்களைக் காணலாம்.

"உரை அற்று உணர்வு அற்று, உயிர்பரம் அற்று

திரையற்ற நீர்போல் சிவமாதல் தீர்த்துக்

கரையற்ற சத்தாதி நான்கும் கடந்த

சொரூபத்து இருத்தினான் சொல்இறந் தோமே."



பரமனோடு இணையும் இறையனுபவம் கிடைக்கும்போது முதலில் பேச்சு நின்றுபோகும். இதையே முதல் வரியில் "உரை அற்று' என்கிறார் திருமூலர். மனிதனின்பிரச்சினைகள் அனைத் திற்கும் மூல காரண மாக அமைவது அவனது நாக்கும்அதிலிருந்து உருவாகும் பேச்சுமே ஆகும்.

ஓயாத வீண் பேச்சே மனிதனின் முதல் எதிரி. மௌனம் ஞானப்பாதையின் முதல் படி.இறையனு பவத்தின் முதல் அனுபவம் அல்லது விளைவு என இந்த "உரை அற்ற'நிலையைக் குறிப்பிடுகிறார் திருமூலர்.

அடுத்த அனுபவம் உணர்வு அறுந்த நிலை (உணர்வு அற்று). சிலர் வாரம் ஒரு நாள்அல்லது மாதம் ஒரு நாள் மௌன விரதம் இருப்பார்கள். வாய் மட்டும்தான்மூடியிருக்கும். மனதிற்குள் ஆயிரம் சிந்தனைகள் புயலடித்துக்கொண்டிருக்கும். இத்தகைய மௌன விரதத்தால் எந்தப் பலனும் கிட்டுவதில்லை.

பேச்சுக்கு மூலமாக அமைவது உணர்வுகளும் சிந்தனைகளுமே. நாக்கும் உதடுகளும்ஒலியை உண்டு பண்ணும் கருவிகள் மட்டுமே. உரை (பேச்சு) உருவாவதுசிந்தனையில்தான். நமது உணர்வு நிலையின் அடிப்படையிலேயே சிந்தனைகள்எழுகின்றன. ஆக, உரைக்கு ஆதிமூலம் உணர்வுகளே. இறையனுபவம் கிடைக்கும்போதுஇந்த உணர்வுகளும் அற்றுப் போகும்.

அடுத்த வார்த்தையைக் கவனியுங்கள்- "உயிர்பரம்' (அற்று). உயிர்பரம் என்பதைஉயிர் அற்று, பரம் அற்று என்று இரண்டாகப் பிரித்துப் பொருள் கொள்ளவேண்டும்.

உயிர் என்பது ஜீவாத்மாவையும், பரம் என்பது பரமாத்மாவையும் குறிக்கும் சொற்களாகும். உயிர் என்பது ஜீவாத்மாவின் உள்ளி ருக்கும் "தான்' எனும்அகந்தையை- ஆணவத் தைக் (ஆணவ மலம்) குறிக்கிறது. இறையனு பவம் கிடைக்கும்போதுஜீவாத்மாவின் இந்த அகந்தை அழிந்து போகும். (உயிர் அற்று). பரம் அற்று என்றசொல்லில் ஒரு சூட்சுமம் உள்ளது. சில உரையாசிரியர்கள் உயிர் பரம் அற்றுஎன்ற சொற்களுக்கு, "பரமனை அடையத் தடையாக இருக்கும் தான் எனும் அகங்காரம்அற்றுப் போய்' என்று பொருள் எழுதியுள்ளனர். இது மிகவும் ஏற்புடையதே.

ஆனால் இதை சற்றே ஆழமாகச் சிந்தித்துப் பார்க்கும்போது, இதைவிட மேலான ஒருசூட்சுமம் உள்ளே பொதிந்து கிடப்பது தெரியும். உயிர் அற்று- தான் எனும்அகந்தை அழிந்து என்றே கொள்ளலாம்.

அது என்ன பரம் அற்று? ஜீவாத்மா முக்தி நிலையடைய சதா பரமனின் நினைவாகவேஇருந்து, அவனது தாள்களைப் பற்றிக் கொண்டு, முக்தி நிலை அடைவதற்கானமுயற்சிகளில் ஈடுபட வேண்டும். ஆக, முக்தி நிலையை அடையும் வரையில் பரமனின்திருவடிகளே ஜீவாத்மாவின் சிந்தனை முழுவதும் நிறைந்திருக்க வேண்டும்.

ஆனால் இறையனுபவம் எனும் முக்தி நிலையை அடையும்போது, அங்கே உயிர் என்றும்பரம் என்றும் பேதங்கள் இல்லை. இரண்டும் ஒன்றாக இணைந்த நிலையே அந்தபேரானந்த நிலை. அந்த நிலையில் உயிர் அற்றுப் போகும்; பரமும் அற்றுப்போகும். ஒரு பேரானந்த நிலை மட்டுமே எஞ்சி நிற்கும். எனவேதான் திருமூலர்இந்த இறையனுபவத்தை "உயிர்பரம் அற்ற நிலை' என்கிறார். இனி இரண்டாவதுவரியைக் காண்போம்.

"திரையற்ற நீர் போல் சிவமாதல் தீர்த்து'

"திரையற்ற நீர்' என்பதற்கு அலைகள் இல்லாத கடல் என்று பொருள். ஓயாமல்அலையடித்துக் கொண்டிருப்பதுதான் கடலின் இயல்பு. ஜீவாத்மாவின் மனமும்சிந்தனைகளும் எப்போதும் ஓய்வின்றி அலை பாய்ந்து கொண்டேயிருக்கும்.எனவேதான் ஜீவாத்மாவை கடலுக்கு ஒப்பிடுகிறார் திருமூலர்.

கடலின் கரைகளில்தான் அலைகள் அடித்துக் கொண்டேயிருக்கும். கடலின் உள்ளேசெல்லச் செல்ல ஆழம் அதிக மாகும்; அலைகள் இராது. மனிதர்களுக்கும் இதுபொருந்தும். புற வாழ்க்கை மட்டுமே வாழ்க்கை என வாழ்ந்து கொண்டிருக்கும்மனிதர்கள் அலையடிக்கும் கடற்கரை போன்றவர்கள். உடலிலும் மனதிலும் அமைதிஇராது. இவர்களது வாழ்க்கை யிலும் ஆழமோ பொருளோ இராது. ஒரு அர்த்தமற்றவாழ்க்கை.

ஞானத் தேடலில் உள்நோக்கிச் செல்லச் செல்ல அலைகள் அடங்கும்; அமைதிபிறக்கும். உள்ளே இருக்கும் இறையெனும் ஜோதியைத் தரிசிக்க முடியும். இந்தஉள்நோக்கிய பயணத்திற்கான வழிமுறையாக திருமூலர் தந்திர யோகத்தைக் குறிப்பிடுகிறார்.

இந்தப் பயிற்சிகளின் மூலம் தங்களின் உள்ளே இருக்கும் பரமனோடு இணைந்தஅனுபவம் கிடைக்கும்போது, மனமும் உடலும் திரையற்ற நீர் போல் அமைதி யாகும்;மனம் சிவமயமாகும்.

"கரைஅற்ற சத்தாதி நான்கும் கடந்த'

இந்த மூன்றாவது வரியில் ஒரு நுட்ப மான தந்திர யோக சூட்சுமம் பொதிந்துகிடக்கிறது. சத்தாதி என்பது ஓசையைக் குறிக்கும் சொல்லாகும். "சத்தாதிநான்கும் கடந்த' என்றால், நான்கு வகையான ஓசை களையும் கடந்த நிலை என்றுபொருள். அது என்ன நான்கு வகையான ஓசைகள்?

தந்திர யோகத்தில் ஓசைகளை நான்கு வகையாகப் பிரிக்கிறோம்.

* செவி ஓசை

* மிடற்றோசை

* நினைவோசை

* நுண் ஓசை

"செவி ஓசை' நாம் அனைவரும் அறிந்ததே. ஒவ்வொரு கணமும் பலவிதமான ஓசைகள் நம்சுற்றுப்புறத்திலிருந்து நம் காதுகளை வந்தடைகின்றன. இந்த ஓசைகள்செவிப்பறையைத் தாக்கும்போது உருவாகும் அதிர்வுகள் செவி நரம்புகளில்மின்காந்த அலைகளாக மாற்றப்பட்டு மூளையைச் சென்றடைகின்றன. நமது மூளையே அந்தஓசைகளின் அர்த்தங்களைப் பகுத்துணர்ந்து அறிகிறது. நமது செவிகளின் மூலமாகநாம் உணர்ந்து கொள்ளும் ஓசைகள் செவி ஓசை எனப்படும். இறையனுபவம் கிடைக்கும்போது இந்த செவி ஓசைகள் எதுவும் நம்மை வந்தடையாது. செவி எனும் புலன்அடங்கிப் போகும்.

அடுத்த ஓசை "மிடற்றோசை'. இது நம் உள்ளிருந்து உருவாவது. தொண்டைப்பகுதியில் உருவாகும் ஓசையை காது நரம்புகள் நேரடியாக உணர்ந்துகொள்வது.உதாரணமாக ஒரு பாடலை நாம் வாய் திறந்து பாடாமல், வாய்க்கு உள்ளேயேபாடும்போது நமது செவிகள் அதை உணர்ந்து கொள்கின்றன அல்லவா.

பக்கத்தில் இருப்பவர்களால் இந்த ஒலியை- ஓசையை உணர முடியாது. வாயிலிருந்துவெளியே வரும் ஓசைகளே காற்றில் ஒலி அலைகளாகப் பரவி செவிப்பறையை அதிர வைக்கமுடியும். மிடற்றோசை வெளியில் வராத ஓசை. தொண்டைப் பகுதியிலுள்ள குரல்நாண்களின் அதிர்வை செவி நரம்புகள் நேரடியாக உணர்ந்து கொள்ளுதல்.

மூன்றாவது ஓசை "நினைவோசை.' எந்தவிதமான ஒலி அலைகளையும் உருவாக்காமல், நமதுநினை வில் மட்டுமே ரீங்காரமிடும் ஓசை. உதாரணமாக உங்களுக்கு மிகவும்பிடித்த ஒரு பாடலை அல்லது இசையை நீங்கள் நினைத்துப் பார்க்கும்போது, அதுஉங்களது நினைவில் ரீங்காரமிடும்.

இந்த நினைவோசை நமது நினைவில் மட்டுமே உருவானது. ஒலி அலைகள், செவிப்பறைகள்,செவி நரம்புகள் என எதுவுமே இந்த ஓசைக்குத் தேவை யில்லை. முழுக்க முழுக்கநமது மூளையில் உருவாகி, மூளையால் உணர்ந்து கொள்ளப்படும் ஓசை இது.

ஒலி அலைகள் எதுவும் உள்ளே புகா வண்ணம் காதுகளை இறுக மூடிக் கொண்டால்செவியோசை கேட்காது. நமது குரல் நாண்களின் அசைவை நிறுத்திக் கொண்டால்மிடற்றோசையும் கேட்காது. ஆனால் தந்திர யோகப் பயிற்சிகள் மூலமாக மட்டுமேமூளையையும் மனதையும் அமைதிப்படுத்தி, நினைவோசையை நிறுத்த முடியும்.

இந்த நினைவோசையும் அடங்கிய நிலையில் மட்டுமே ஆழ்நிலை தியானங்கள் கைகூடும்.தியானத்தின் ஆழ்நிலைகளுக்குச் செல்லச் செல்லத்தான் உள்ளே இருக்கும் இறைவனைஉணர்ந்து கொள்ள முடியும். அவனோடு இணைய முடியும்.

நான்காவது ஓசை "நுண் ஓசை'. நமது உடலில் ஒவ்வொரு கணமும் பல்லாயிரக் கணக்கானநிகழ்வுகள் தொடர்ந்து நடந்து கொண்டேயிருக்கின்றன. பல நிகழ்வுகள் பலவிதமானஓசைகளையும் உடலினுள்ளே உருவாக்குகின்றன. சாதாரண மனிதர்களால் இந்த ஓசைகளைஉணரவோ, கேட்கவோ முடியாது.

உதாரணமாக, நமது இதயம் துடிக்கும் "லப்-டப்' என்ற ஓசை, மூச்சுக்குழலினுள்ளே மூச்சு செல்லும் ஓசை, ரத்தக் குழாய்களினுள்ளே ரத்தம் பாயும்ஓசை, நாடிகளில் பிராண சக்தி பயணிக்கும் ஓசை என பல ஓசைகளை நம்மால் கேட்கவோஉணரவோ முடிவதில்லை. (சில விஞ்ஞானக் கருவிகள் மூலம் மட்டுமே இந்த ஓசைகளைக்கேட்க முடியும்.)

தந்திர யோகப் பயிற்சிகளைத் தொடர்ந்து செய்து பிற மூன்று ஓசைகளும் அடங்கியநிலையில், உடலில் உருவாகும் இந்த நுண் ஓசைகளை நம்மால் உணர்ந்து கொள்ளமுடியும்.

தந்திர யோகப் பயிற்சிகளைத் தொடர்ந்து செய்து வரும்போது, இதன் அடுத்தநிலையில் இந்த நுண் ஓசைகளும் அடங்கிப் போகும். குண்டலினி சக்தி விசுக்தி,ஆக்ஞை ஆகிய சக்கரங்களை அடைந்து அந்த சக்கரங்கள் திறந்து கொள்ளும்போது வேறுபலவிதமான நுண் ஓசைகளை நம்மால் உணர முடியும்.

பிற லோகங்களில் இருப்பவர்களின் குரல்கள், அமானுஷ்ய சக்திகள் உருவாக்கும்ஓசைகள் ஆகிய நுண் ஓசைகளை இந்த நிலை யில் உணரலாம். ஒரு பூ விரியும்ஓசையைக்கூட உணரலாம். இந்த நிலை ஒரு வகை சித்தி நிலையாகும். பிறரது மனதில்ஓடும் நினைவோசைகளையும் (எண்ணங்களையும்) இந்த நிலையில் கேட்க முடியும்.

தொடர்ந்து பயிற்சிகளைச் செய்து வந்தால் இந்த நுண் ஓசையும் அடங்கிப் போக, நுண் ஓசையின் இறுதி நிலையை அடையலாம்.

இந்த நிலை ஆக்ஞை சக்கரம் திறந்து கொண்டபின் உருவாகும். பல தெய்வீக ஓசைகள்நாள் முழுவதும் உடலுக்குள் கேட்டுக் கொண்டே இருக்கும். வீணை ஒலி, புல்லாங்குழல் இசை, நீர் வீழ்ச்சியில் தண்ணீர் கொட்டு வது போன்ற ஓசை, மணி ஒலி எனஒவ்வொரு வருக்கும் ஒவ்வொரு விதமான ஓசைகள் கேட்கும். இது அதிகபட்சமாக ஓரிருவாரங் களே நீடிக்கும். பின்னர் இந்த ஒலிகள் அனைத் தும் அடங்கி, "ஓம்' என்றபிரணவ மந்திரத்தின் ரீங்காரம் உடலில் ஒலித்துக்கொண்டே இருக்கும்.

இதுவே நுண் ஓசைகளில் கடைசி ஓசை யாகும். இறையனுபவம் கிடைக்கும்போது இந்தஓசையும் அடங்கிப் போகும். ஆக ஜீவாத்மா, பரமாத்மாவோடு ஒன்றிய நிலையைஅடையும்போது, செவி ஓசை, மிடற்றோசை, நினைவோசை, நுண் ஓசை ஆகிய நான்கு விதமானஓசைகளும் அடங்கிப் போகும். இனி பாடலின் கடைசி வரியைக் காணலாம்.

"சத்தாதி நான்கும் கடந்த

சொரூபத்து இருத்தினான் சொல் இறந் தோமே.'

நான்கு வகையான ஓசைகளையும் கடந்த நிலையில் (சொரூபத்து) இறைவன் என்னைக்கொண்டு இருத்தினான். அந்த ஆனந்த நிலையில் எனது பேச்சும் நின்று போயிற்று(சொல் இறந்தோமே) என்பதே இந்த கடைசி அடியின் பொருள்.

"சொல் இறந்து போதல்' தந்திர யோகப் பயிற்சிகளில் முக்தி நிலைக்கு முற்பட்டநிலையாகும். தாமச நாடி தூண்டப்படும்போது இது நிகழும். இது குறித்துஏற்கெனவே விரிவாகக் கண்டோம். அதை நினைவுபடுத்திக் கொள்ளுங்கள்.

"சொரூபத்து இருத்தினான்' என்ற சொல்லாடலிலும் ஒரு சூட்சுமம் உள்ளது.முக்தியை நோக்கிய பயணத்தில் நாம் எத்தனை முயற்சிகள் செய்தாலும், தந்திரயோகப் பயிற்சிகளைத் தொடர்ந்து மேற்கொண்டாலும் அந்த முக்தி எனும் பரமானந்தநிலையில் நாம் போய் இருந்துவிட முடியாது.

பரமன் அருள் இருந்தால் மட்டுமே நாம் அந்த இறையனுபவ நிலையை அடைய முடியும்.அந்த சத்தாதி நான்கும் கடந்த சொரூபத்தில் இறைவன்தான் நம்மைக் கொண்டுஇருத்த முடியும்.
Read more ...

திருமூலர்

Monday, December 20, 2010
திருமூலர் காலத்திலும் சைவத்திற்கும் வைணவத்திற்குமான சண்டை, சச்சரவுகள் அரங்கேறிக்கொண்டிருந்தன. திருமூலர் தீவிரமான சைவர், சிவனே தன் தலைவன் என்ற கொள்கையில் ஆழமான பிடிப்புள்ளவர். எனவேதான் அவர் சைவ நாயன்மார்களில் ஒருவராகக் கொண்டாடப்படுகிறார். ஆனால் மதத் தீவிர வாதத்திற்கு எதிராகக் குரல் கொடுத்த ஒரே நாயனார் திருமூலர்தான். இந்தக் கூற்றிற்குச் சாட்சியாக திருமந்திரத்திலிருந்து இரு பாடல்களைக் காணலாம்.

“ஒன்றது பேரூர் வழி

ஆறு அதற்குள்

என்றது போல இருமுச் சமயமும்

நன்றிது தீதிது என்றுரை யாளர்கள்

குன்று குரைத்தெழு நாய் ஒத்தார்களே”

திருமந்திரம் பாடல் எண்-1543

ருமூலர் வாழ்ந்த காலத்தில் ஆறு சமயங்களே முக்கியமானவையாக இருந்தன. இப்பாடலின் இரண்டாம் வரியில் இருமுச் சமயமும் என அந்த ஆறு சமய நெறிகளையே குறிப்பிடுகிறார் திருமூலர்.

பாடலின் முதல் இரண்டு வரிகளில் வீடுபேறு எனும் முக்தி நிலையை ஒரு பெருநகரமாகவும், ஆறு சமயங்களையும் அந்த நகரத்தைச் சென்றடையும் ஆறு வீதிகளாகவும் உருவகப் படுத்துகிறார் திருமூலர். பெரும்பாலான கிராமங்களுக்கு ஒரே ஒரு வழிதான் இருக்கும். கிராமத்தின் உள்ளே செல்லும் அந்த வீதியில்தான் வெளியே வரவும் முடியும்.

ஆனால் பெரு நகரங்களைப் பொறுத்தவரையில் பல வீதிகள் பல இடங்களிலிருந்து அங்கே வந்து சேரும் நகரத்தின் அளவும் முக்கியத்துவமும் அதிகமாக அதிகமாக, அதில் வந்து சேரும் வீதிகளின் எண்ணிக்கையும் அதிகமாகும்.

ஒரு காலத்தில் உலகின் மிகப் பெரிய சாம்ராஜ்ஜியமாக ரோம சாம்ராஜ்ஜியம் திகழ்ந்தபோது, அதன் தலைநரான ரோம நகரமே உலகின் மிக முக்கியமான நகரமாகக் கருதப்பட்டது. எனவேதான் எல்லா வீதிகளும் ரோம் நகரையே வந்தடைகின்றன என்ற பிரபலமான சொற்றொடர் உருவாகியது.

மனிதப் பிறவியின் அர்த்தம் அல்லது நோக்கம் வீடுபேறு எனும் முக்தி நிலையை அடைவதே. இந்த நிலையை ஒரு பெரிய நகரம் வீதி என்று வர்ணிக்கிறார் திருமூலர். இந்த நகருக்கு நம்மைக் கொண்டுசெல்லும் ஆறுகளாக ஆறு சமயங்களும் இருக்கின்றன என்பதே முதல் இரண்டு வரிகளின் அர்த்தமாகும். ஒன்றது பேரூர் வழி ஆறு அதற்குள் என்றது போல இருமுச் சமயமும், ஆறு சமயங்களும் முக்திநிலை என்ற இலக்கை நோக்கியே நம்மை வழிநடத்துகின்றன. வழிமுறைகள் வெவ்வேறு¡க இருந்தாலும் இலக்கு ஒன்றுதான். இந்த உண்மையைப் புரிந்துகொள்ளாத மூடர்களே இது நல்ல சமயம், இது தீய சமயம் என தங்களுக்குள் வாதித்து மண்டையை உடைத்துக்கொள்கின்றனர். ‘நன்றிது தீதிது என்றுரை யாளர்கள்’ என்ற மூன்றாவது வரி இதையே எடுத்துரைக்கின்றது.

இவ்வாறு வீண் வாதங்களில் ஈடுபடும் வீணர்களை வர்ணிக்க ‘நாய்’ என்ற கடுமையான வார்த்தையை உபயோகிக்கிறார் திருமூலர்.

‘குன்று குரைத்தெழு நாய் ஒத்தார்களே’

குரைத்து குரைத்தே ஒரு பெரிய மலையை வீழ்த்திவிட முடியும் என்று நினைக்கும் நாய்களுக்கு ஒப்பானவர்கள் இவர்கள் என்பதே இந்த நான்காவது வரியின் பொருளாகும். மலை (குன்று) என்ற உவமையில் ஒரு அற்புதமான சூட்சுமம் ஒளிந்து நிற்கிறது. வழக்கமாக கவிஞர்கள் ‘சூரியனைப் பார்த்து நாய் குரைத்தாற்போல்’ என்று கூறுவதுதான் வழக்கம்.

திருமூலர் சற்றே மாறுபட்டு மலையைப் பார்த்துக் குரைக்கும் நாய்கள் என்கிறார். ஏன்? சூரியன் என்பது பூமியில் உயிர்கள் வாழ ஆதாரமான ஒரு சக்தி. வெப்பம், தகிப்பு, ஜொலிப்பு, சுட்டெரித்தல் போன்ற பல குணங்களை சூரியனுக்குக் கூறலாம். இவை தவிர பகலில் தோன்றி இரவில் மறையும் தன்மையும் சூரியனுக்கு உண்டு. மலைகள் இதற்கு எதிரான தன்மைகளைக் கொண்டவை.

வெப்பம், தகிப்பு, ஜொலிப்பு போன்ற எந்த ஆரவாரங்களும் மலைகளுக்குக் கிடையாது. அவை நிரந்தரமானவை. சூரியனைப் போல் தோன்றி மறைவது இல்லை. உறுதியானவை. நிலைத்தன்மை கொண்டவை. மனதிற்கு இதமளிக்கும் குளிர்ச்சியே மலைகளின் விசேஷத் தன்மை. (எனவேதான் கோடையை வெல்ல மலை வாசஸ்தலங்களுக்குச் செல்கிறோம்)

மதங்கள் மலைகளைப் போன்றவை. அன்பு, அகிம்சை (குளிர்ச்சி) ஆகியவற்றை போதிப்பவை. மனதிற்கு இதத்தையும் ஆறுதலையும் அளிப்பவை. உண்மையான மதங்களில் வெப்பம், தகிப்பு, ஜொலிப்பு ஆகியவற்றிற்கு இடமில்லை. எனவேதான் மதங்களுக்கு உவமையாக மலைகளைக் கூறுகிறார் திருமூலர்.

இதுதவிர வேறு ஒரு சூட்சுமமும் உள்ளது. சூரியனின்றி எந்த உயிரும் பூமியில் உயிர்வாழ முடியாது. மலைகள் இன்றி உயிர் வாழலாம். அதுபோன்றே மதங்கள் இன்றியும் மனிதன் உயிர்வாழ முடியும்.

இந்தச் சிறிய உவமையை மனதில் அசைபோட, அசை போட மேலும் பல சூட்சுமங்கள் உங்கள் உள்ளத்தில் உதிக்கும். திருமந்திரப் பாடல்களின் தனிச்சிறப்பே இதுதான். சுவைக்கச் சுவைக்க பேரின்பம் ஊற்றெடுக்கும். இதே கருத்தை வலியுறுத்தும் வேறொரு திருமந்திரப் பாடலையும் காணலாம்.

‘இத்தவம் அத்தவம் என்று இரு பேரிடும்

பித்தரைக் காணில் நகும் எங்கள் பேர்நந்தி

எத்தவம் ஆகில் என் எங்கு பிறக்கில் என்

ஒத்து உணர்வார்க்கு ஒல்லை ஊர் புகலாமே.

-திருமந்திரப் பாடல் எண் – 1153.

சமயங்கள் கூறும் வழிமுறைகளையும் நெறிமுறைகளையுமே ‘தவம்’ என்ற சொல்லால் குறிப்பிடுகிறார் திருமூலர். அனைத்து சமயங்களும் நல்வழிகளையும் நன்நெறிகளையுமே போதிக்கின்றன.

எந்த சமயமும் தீய வழிகளைப் போதிப்பதில்லை. இந்த அடிப்படை உண்மையைப் புரிந்துகொள்ளாமல் இந்த நெறி, அந்த நெறி (இத்தவம், அத்தவம்) என்று வெவ்வேறு பெயர்களைச் சூட்டி எது உயர்ந்தது என வாதித்தும் போரிட்டும் நேரத்தைக் கழிப்பவர்களை பித்தர்கள் என்கிறார் திருமூலர்.

இத்தகைய பித்தர்களைக் காணும் போது நந்தி தேவன் நகைப்பான்.

‘இத்தவம் அத்தவம் என்று இரு போரிடும்

பித்தரைக் காணில் நகும் எங்கள் பேர்நந்தி’

நந்திதேவன் சிவனின் ரூபவடிவம் என்பது சைவக் கோட்பாடு. தன் தலைவனான சிவனை திருமந்திரத்தின் பல பாடல்களில் நந்தி என்றே குறிப்பிடுகிறார் திருமூலர். இந்த வழி, அந்த வழி என்று பேதம் பிரித்துப் பார்க்கும் பேதைகளைக் கண்டு நகைப்பானாம் சிவன். நகும் என்ற சொல்லிலும் ஒரு சூட்சுமம் உள்ளது.

சிரிப்பு என்பது சந்தோஷ த்தில் கூட வரும், ஆனால் நகைப்பு என் பது ஒரு முட்டாள் தனமான செயலைப் பார்த்து வருவது, பிறரை கேலி செய்து சிரிப்பதையே நகைப்பு என்கிறோம். நகைப்புக்கிடமான செயல் என்று கூறுகிறோம் அல்லவா?

சமயங்களை வேறுபடுத்தி, பேதப்படுத்திப் பார்ப்பதும் ஒரு முட்டாள்தனமான, நகைப்புக்கிடமான செயல் என்பதாலேயே இந்த இடத்தில் நகும் என்ற சொல்லைப் பயன்படுத்தியிருக்கிறார் திருமூலர்.

இந்தப் பாடலின் மூன்றாவது வரிதான் மிக மிக முக்கியமானது. சமுதாய மறுமலர்ச்சிக்கான ஒரு விதையை இந்த வரியில் தூவியிருக்கிறார் திருமூலர். எத்தவம் ஆகில் என் எங்கு பிறக்கில் என்!

எந்த சமயத்தைச் சார்ந்திருந்தால் என்ன? எங்கு பிறந்திருந்தால் என்ன? திருமூலர் வாழ்ந்த காலகட்டத்திற்கு இந்த வரி மிக மிக புரட்சிகரமான ஒன்று.

எனது சமயமே உயர்ந்தது என ஆறு சமய வாதிகளும் தமக்குள் வாதிட்டுக் கொண்டும், ஒருவரை ஒருவர் அழித்துக்கொண்டுமிருந்த ஒரு காலகட்டத்தில் (கி.பி. 6 ஆம் நூற்றாண்டு) எந்த சமயத்தைப் பின்பற்றினாலும் தவறில்லை என்ற கருத்து மிக மிகப் புரட்சிகரமான ஒன்று.

இதைக் கூறுவது சைவத்தையே தனது உயர் மூச்சாகக் கொண்ட ஒரு நாயனார் என்பதை நினைக்கும்போது நமது வியப்பு பன்மடங்காகிறது.

‘எம்மதமும் சம்மதமே’ என்று கூறிய பெரியவர்களில் மிகமிக முக்கியமானவர் திருமூலர்! மதம் என்பது மனிதர்களது மனதைப் பண்படுத்துவதாக இருக்கவேண்டும். எந்த மதமும் பிறர் மனதைப் புண்படுத்தச் சொல்லுவதில்லை.

சைவத்தின் மீது திருமூலர் கொண்டிருந்த ஆழ்ந்த ஈடுபாடே எத்தவம் ஆகில் என்? என்று அனைத்து மதங்களும் நன்றே என ஏற்றுக்கொள்ளும் மனப் பக்குவத்தை அவரிடம் உருவாக்கியிருக்கிறது. ‘எங்கு பிறக்கில் என்’ எம்மதமும் சம்மதம் என்ற கருத்தைவிடவும் ஒரு படி மேலான கருத்து இது! பிறப்பால் உயர்சாதி, கீழ்சாதி என்ற வர்ண பேதங்கள் திருமூலர் காலத்தில் தமிழகத்தில் வேரோடியிருந்தது.

சைவ சமயத்தில் சாதி பாகுபாடுகளுக்கு இடமில்லை என்றாலும், ஆரியர்களின் ஆதிக்கத்தால் சைவ சமயத்தினுள்ளும் சாதி எனும் நஞ்சு திருமூலர் காலத்திற்கு சில நூற்றாண்டுகளுக்கு முன்னரே பரவியிருந்தது.

‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’ என்ற திருவள்ளுவரின் பாடல்கூட, திருவள்ளுவர் காலத்திலேயே (சுமார் கி.பி. 1 ஆம் நூற்றாண்டு) தமிழகத்தில் சாதி எனும் பேய் தலைவிரித்தாடியிருக்க வேண்டும் என்பதையே நிலை நிறுத்துவதாக உள்ளது.

கீழ்சாதியில் பிறந்த நந்தனார் ஒரு சைவ நாயனாராக ஏற்றுக்கொள்ளப்பட்டாலும்கூட, நந்தனார் சரித்திரம் அக்காலத்தில் ‘தீண்டாமை’ இருந்ததற்கும், கீழ்சாதியினர் கோவிலுக்குள் நுழைய தடை இருந்தது என்பதற்கும் சாட்சியமாக உள்ளது! ஆக, சைவ சமயத்திலும் சாதிப் பேய் வேரூன்றியிருந்த ஒரு காலகட்டம் அது.

எங்கு பிறக்கில் என் என்ற கருத்து அந்த காலகட்டத்திற்கு மிக மிகப் புரட்சிகரமான ஒன்று. சித்தர் இலக்கியங்கள் அனைத்திலும் இந்தக் கருத்து முன்னிறுத்தப்படுவதைக் காணலாம். சித்தர்களுக்கெல்லாம் பெருஞ்சித்தர் திருமூலர்.

இனி பாடலின் இறுதி வரியைக் காண்போம்.

‘ஒத்து உணர்வார்க்கு ஒல்லைஊர் புகலாமே’

அனைத்து சமயங்களும் ஒன்று; பிறப்பால் மனிதர்களிடையே ஏற்றத்தாழ்வுகள் இல்லை என்று உணர்பவர்களுக்கு விரைவாக (ஒல்லை) வீடுபேறு (முக்தி நிலை) கைகூடும் என்பதே இந்த இறுதி வரியின் பொருளாகும்.

இறை எனும் சக்தியோடு இணைந்த நிலையே முக்தி. அதற்கான ஒரே வழி ‘மனம் பண்படுவதே’ என்பதே. இந்த திருமந்திரப் பாடலின் சுருக்கமான- புரட்சிகரமான கருத்தாகும்.

பண்பட்ட மனமே ஞானக் கண்களைத் திறக்கும். நம் அகத்தில் எரியும் சோதியைக் காண இது ஒன்றே வழியாகும்.
Read more ...

வைகுண்ட ஏகாதசி

Monday, December 20, 2010
வைகுண்ட ஏகாதசி

காயத்ரிக்கு நிகரான மந்திரமில்லை; தாய்க்குச் சமமான தெய்வமில்லை; காசியை மிஞ்சிய தீர்த்தமில்லை; ஏகாதசிக்கு ஈடான விரதமில்லை!' என்பது ஆன்றோரின் அருள்வாக்கு.

ஒவ்வொரு மாதமும் அமாவாசை, பௌர்ணமி நாட்களிலிருந்து 11-ஆம் நாள் ஏகாதசி எனப்படுகிறது. அவை சுக்லபட்ச ஏகாதசி, கிருஷ்ணபட்ச ஏகாதசி எனப் படுகின்றன. அந்த நாட்களில் முழு உபவாசம் இருந்து, மறுநாள் துவாதசியில், பூஜை முடித்த பின்பே காலை உணவு உட்கொள்ள வேண்டும்.

ஒரு வருடத்தில் 24 அல்லது 25 ஏகாதசிகள் வரும். அனைத்து ஏகாதசி களிலும் விரதமிருந்து வழிபடுவோர் பிறவித்துயர் நீங்கி வைகுண்ட பதவி அடைவர் என்பது நம்பிக்கை. வருடம் முழுதும் ஏகாதசி விரதம் அனுஷ்டிக்க இயலாதவர்கள், மார்கழி மாதத்தில் வரும் வைகுண்ட ஏகாதசியில் மட்டுமாவது விரதம் மேற்கொள்வது சிறப்பான பலன் களைத் தரும். மூன்று கோடி ஏகாதசிகளில் விரதம் இருந்த பலனைத் தரக்கூடியது என்பதால் வைகுண்ட ஏகாதசி "முக்கோடி ஏகாதசி' என்றும் அழைக்கப்படுகிறது.

முரன் என்ற அரக்கன் தேவர்களையும் முனிவர்களையும் துன்புறுத்தி வந்தான். அவர்கள் ஸ்ரீவிஷ்ணு பகவானிடம் சென்று முறையிட, பகவான் முரனுடன் போரிட்டு அவனது படைகளை அழித்தார். பின்னர் பத்ரிகாசிரமம் சென்று அறிதுயில் கொண்டார். அவரைத் தேடிச் சென்ற முரன் பள்ளிகொண்டிருந்த பெருமாளைக் கொல்ல வாளை ஓங்கியபோது, அவர் தன் உடலிலிருந்து ஒரு மோகினியைத் தோற்று வித்தார். அவள் ஒரு ஹூங்காரம் செய்ததில் முரன் எரிந்து சாம்பலானான். முரனை எரித்த மோகினிக்கு "ஏகாதசி' என்று பெயர் சூட்டிய திருமால், அன்றைய தினம் ஏகாதசி என வழங்கப்படும் என்றும்; அன்று தன்னை வழிபடுவோர்க்கு வைகுண் டப் பதவி அளிப்பதாகவும் கூறி அருளி னார். அந்த தினமே வைகுண்ட ஏகாதசி என்று சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.

ஒரு வருடத்தில் வரும் ஏகாதசிகளின் பெயர்களையும் அவற்றை அனுஷ்டிப்ப தால் கிடைக்கும் பலன்களைப் பற்றியும் புராணங்கள் பல செய்திகளைக் கூறுகின்றன.

சித்திரை மாத வளர்பிறை ஏகாதசி "பாபமோஹினி' என்றும்; தேய்பிறை ஏகாதசி "காமதா' என்றும் அழைக்கப்படுகிறது. இந்த ஏகாதசி தினங்களில் விரதமிருப்பவர்களுக்கு விரும்பிய பேறுகள் கிட்டும்.

வைகாசி மாத வளர்பிறை ஏகாதசி "வருதினி' என்றும்; தேய்பிறை ஏகாதசி "மோகினி' என்றும் குறிப்பிடப்படுகிறது. இந்த தினங்களில் விரதம் அனுஷ்டிப்பவர், இமயமலை சென்று பத்ரிநாத்தை தரிசித்த பலனைப் பெறுவர்.

ஆனி மாதத்தில் வரும் "அபரா', "நிர்ஜலா' ஏகாதசிகளில் விரதம் இருந்து வழிபடுவோர் சொர்க்கம் செல்வர்.

ஆடி மாதத்து "யோகினி', "சயன' ஏகாதசிகளில் விரதம் அனுஷ்டிப்பவர்கள், பலருக்கு அன்னதானம் செய்த பலனைப் பெறுவர்.

ஆவணி மாத வளர்பிறை ஏகாதசியான "காமிகை'யிலும் தேய்பிறை ஏகாதசியான "புத்திரதா'விலும் விரதமிருப்போருக்கு நன்மக்கட்பேறு கிட்டும்.

புரட்டாசி மாத ஏகாதசிகள் "அஜா', "பரிவர்த்தினி' எனப்படுகின்றன.

ஐப்பசி மாத வளர்பிறை ஏகாதசி "இந்திரா', தேய்பிறை ஏகாதசி "பராங்குசா' என அழைக்கப்படுகின்றன.

கார்த்திகை மாத ஏகாதசிகள் "ரமா', "பிரமோதினி'.

மார்கழி மாத ஏகாதசி "வைகுண்ட ஏகாதசி' என சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. மனிதர்களின் ஓராண்டு தேவர்களுக்கு ஒரு நாள் ஆகும். அதன்படி மார்கழி மாதம் தேவர்களுக்கு விடியற்காலை நேரம் ஆகும். இம்மாதம் மகாவிஷ்ணு அறிதுயிலிலிருந்து விழித்தெழும் மாதம். ஆகவேதான் இந்த மாதத்தில் வரும் ஏகாதசி சிறப்பு பெறுகிறது. மார்கழி மாதத்தில் வரும் தேய்பிறை ஏகாதசி "உத்பத்தி' ஏகாதசி எனப்படுகிறது.

தை மாத ஏகாதசிகள் "சுபலா', "புத்ரதா' எனப்படுகின்றன. பித்ருக்களுக்குச் செய்ய வேண்டிய தர்ப்பணம், திவசம் போன்றவற்றைச் செய்யாமல் அவர்கள் சாபத்திற்கு ஆளானவர்கள், புத்ரதா விரதம் அனுஷ்டித்தால், பித்ருசாபம் நீங்கி நலம் பெறுவர்.

மாசி மாத வளர்பிறை ஏகாதசியான "ஜெயா'வில் விரதமிருப்போர் தங்கள் பாவம் நீங்கி நன்மை அடைவர். தேய்பிறை ஏகாதசியான "ஷட்திலா' தினத்தில் விரதம் அனுஷ் டிப்பவர்கள் பிரம்மஹத்தி தோஷம் முதலான அனைத்து தோஷங்களும் நீங்கி நலம் அடைவர். பங்குனி மாத ஏகாதசிகள் "விஜயா', "விமலகி' எனப்படுகின்றன. இராமபிரான் கடலைக் கடந்து இலங்கைக்குச் செல்லும்முன், விஜயா ஏகாதசி விரதம் அனுஷ்டித்தார் என்பது புராண வரலாறு.

தசமியிலும், துவாதசியிலும் ஒரு வேளை உணவு உண்டு, அதிகாலையில் எழுந்து நீராடி, நித்திய கடமைகளை முடித்து, அதன் பிறகு முறைப்படி விரதம் அனுஷ்டிக்க வேண்டும். அன்று முழுவதும் உணவு கொள்ளாமல் இருப்பது சிறப்பானது. இயலாதவர்கள் நிவேதனம் செய்த பழங்களை சிறிதளவு உண்ணலாம். பகலிலும் அன்று உறங்காமல் பரந்தாமனை பஜனை, நாமஸ்மரணை செய்தும், வழிபாட்டுப் பாடல்களைப் பாராயணம் செய்தும் வழிபட வேண்டும்.

அடுத்த நாள் துவாதசியன்று அடியார்களுக்கு உணவளித்து அதன் பின்னரே உண்ண வேண்டும்.

அம்பரீஷன், ருக்மாங்கதன் போன்ற மன்னர்கள் ஏகாதசி விரதம் அனுஷ்டித்து நற்பலன்களைப் பெற்றனர்.
Read more ...

சும்மா இரு

Monday, December 20, 2010
""நமக்கு எதிர்காலத்தைக் காணும் திறமை இல்லை. இடைவிடாது ஆராயும் மனிதனுடைய மனக்கண் முன் இன்னும் என்னென்ன அதிசயங் கள், என்னென்ன தெய்வீகக் காட்சி கள் தோன்றப் போகின்றன என்பதை நாம் கூற முடியாது. ஆனால் ஒன்று மட்டும் நிச்சயமாகக் கூறலாம். எந்தப் புதிய வழிகளை எதிர்காலத் தத்துவ ஆராய்ச்சி கண்டுபிடித்தாலும் உப நிஷதங்கள் கூறும் "தத்வமஸி', "அஹம் பிரும்மாஸ்மி' என்னும் பேருண்மையை ஒரு நாளும் அசைக்க முடியாது. அதில் சிறிதேனும் மாறுதல் ஏற்படுத்த இயலாது. இவ்வுலக இயற்கையானது விடுவிக்க முடியாத ஒரு புதிர் போன்றது. நமது அறிவு வளர வளர இந்தப் புதிர் எவ்வளவு கடினமானது என்பதுதான் தெளிவுபடுகிறது. இதற்கு ஒரு விடை கண்டுபிடிக்க வேண்டு மானால் அதற்குரிய திறவுகோலை, அது ரகசியமாக வைக்கப்பட்டுள்ள இடத்தில் தேட வேண்டும். அந்த இடம் நமது உள்ள மாகிய கோவில். அதைத் திறந்து பார்த்தால் இயற்கையின் ரகசியத்துக்கான திறவுகோலைக் காண முடியும். இங்குதான் முதன் முதலில் உபநிஷத ரிஷிகள் அதைக் கண்டுபிடித்து ஆத்மதரிசனம் பெற்று அழியாப் புகழ் அடைந்தனர்.''

நாம் குறியீடுகளுக்கே முதலிடம் தருகி றோம். அந்தக் குறியீடு எதைக் குறிக்கிறதோ அதைப் புறக்கணித்து விடுகிறோம். "கடவுள்' என்ற சொல்லை ஆராய்கிறோம். கடவுளின் உண்மையை அலட்சியப்படுத்துகிறோம்.




ஒருவர் கதவை மூடிக்கொண்டு பூஜை செய்கிறார். கதவு தட்டப்படுகிறது. "யார்' என்று கேட்கிறார். "நான்தான் கடவுள்' என்று பதில் வருகிறது. "சற்று நேரம் இருங்கள். நான் பூஜையை முடித்துக்கொண்டு வந்து கதவைத் திறக்கிறேன்' என்கி றார் அவர்.

எவரைக் குறித் துப் பூஜை செய்கி றோமோ அவரை விட்டுவிட்டு புற பூஜையைத்தான்- குறியீட்டு முழக்கத்தை தான் நிஜமாகக் கருதி உண்மையை மறக்கிறோம். வார்த்தைக்கு முக்கியத்துவம் தரும் நாம் வார்த்தை கள் உணர்த்தும் உண்மையை மறக்கிறோம். வார்த்தை ஜாலங்களிலேயே நாம் சண்டை போடுகிறோம்.

புத்த பகவான் சொல்லும் ஒரு கதை...

ஓரிடத்தில் வெள்ளம் வந்துவிட்டது. மக்கள் தவிக்கின்றனர். அங்கு ஒரு படகு வருகிறது. மக்கள் படகில் ஏறி அமர்ந்து வெள்ளத்தைக் கடந்து கரை சேர்கின்றனர். கரை சேர்ந்ததும் அந்தப் படகைத் தலையில் சுமந்து கொண்டு திரிகிறார்கள்.

கரை சேர்ந்தபின் படகு தேவையில்லை; படகையே தூக்கி வைத்துக்கொண்டு திரிவது மடைமை.

தூண்டில்மேல் கவனம் செலுத்த வேண்டும். எதுவரை? மீன் தூண்டிலில் சிக்கும்வரை. மீன் பிடித்ததும் தூண்டிலைச் சுமந்து திரிவது மடைமை. "வார்த்தைகள்' தெய்வத்தை உணர்வதற்கே... உணர்ந்தவுடன் வார்த்தைகள் இல்லாமல் இருக்கும் நிலையே சிறந்ததாகும்.

பகவான் ரமண மகரிஷியை ஒரு ஜெர்மானிய அறிஞர் பார்க்க வந்தார். அவர் ரமண மகரிஷி யிடம், ""பகவானே! நான் நிறைய கற்றுள்ளேன். இல்லற ஞானம் பெற்றுள்ளேன். நிறைய ஆராய்ச்சி களைச் செய்துள்ளேன். உங்களிடம் புதிதாய் நான் எதைக் கற்றுக்கொள்ளப் போகிறேன்'' என்று கேட்டார்.

அதற்கு பகவான் ரமணர், ""நீ கற்றதனைத்தையும் மறந்துவிட வேண்டும். அதுவே நீ இங்கு கற்க வேண்டுவது'' என்றார்.

உணரும் வரைதான் பேச்சு, வார்த்தைகள். உணர்ந்தபின் பேச்சற்ற நிலை.

பகவான் ராமகிருஷ்ணர் சொல்கிறார்:

""வண்டு பூவின்மேல் அமர்ந்து மதுவை உறிஞ்சி ருசிக்கும் வரைதான் சிறகுகளை அடித்து ரீங்கார சப்தமிடும். தேனை ருசிக்க ஆரம்பித்துவிட்டால் சிறகடிப்பது ஓய்ந்துவிடும்; சப்தம் இருக்காது.''

"சும்மாயிரு சொல்லற' என்கிறார் அருணகிரி நாதர்.

சீடன் ஒருவன் குருவை நாடிச் சென்று தனக்கு உபதேசம் செய்ய வேண்டினான். தான் பல நூல்களைக் கற்றவனென்றும் கூறினான்.

அதற்கு குருநாதர், ""உனக்கு உபதேசிக்க வேண்டுமானால் மற்ற சீடர்கள் தருவதைவிட இரண்டு மடங்கு குரு தட்சிணையை நீ தர வேண்டும்'' என்றார்.

""ஏன் குருநாதா, நான் பல விஷயங்களைக் கற்றவன். இவர்களோ ஒன்றும் அறியாதவர்கள். அவர்களைவிட என்னிடம் அதிகமாக தட்சிணை கேட்கிறீர்களே...'' என்று கேட்டான்.

""நீ கற்றவற்றை மறக்கச் செய்ய ஒரு மடங்கு; புதிதாய்க் கற்பிக்க ஒரு மடங்கு. ஆக இரண்டு மடங்கு தட்சிணை'' என்றார் குருநாதர்.

ஒரு நாத்திகர் தலைவராக உள்ள நாட்டில், ஒரு விண்வெளி விஞ்ஞானி, விண்வெளியில் ஆய்வு செய்தார். அங்கு அவர் இறையின் பெருமையை உணர்ந்தார். பின் பூமி திரும்பி, நாட்டுத் தலைவரிடம் வந்தார்.

தலைவர், ""நீ விண்வெளிப் பயணத்தில் என்ன கண்டாய்?'' என்று கேட்டார்.

""இறைவனின் மாண்பை'' என்றார் விஞ்ஞானி.

""என்னிடம் சொன்ன இறைமாண்பு பற்றி வேறு யாரிடமும் சொல்லி விடாதே... நான் நாட்டில் இறைவன் இல்லை என்று கூறி, நிரீச்வர வாதத்தை விதியாகக் கூறி வந்துள்ளேன். நீ உணர்ந்த இறைவன் பற்றிய உண்மை உன்னுடனே இருக்கட்டும்'' என்றார்.

அந்த விஞ்ஞானியை ஒரு சமயப் பாதிரியார் சந்தித்தார்.

அவர், ""நீ இறைவனைக் கண்டாயா?'' என்று கேட்டார். ""இல்லை'' என்றார் விஞ்ஞானி. அதற்குப் பாதிரியார், ""நீ இதை வெளியில் யாரிடமும் சொல்லிவிடாதே. நானும் இறைவன் இல்லை என்பதை அறிவேன். ஆனால் நான் இறைவன் உண்டு என்று பிரசாரம் செய்து வருகிறேன். இறைவன் இல்லையென்று நீ உணர்ந்ததை வெளியில் சொல்லிவிடாதே'' என்றார்.

ஆகவே இறையுணர்வு என்பது அவரவர் உணர்வைப் பொறுத்தது. புறத் தர்க்கத்தால்- புறத்தூண்டுதலால் ஏற்படுவதல்ல இறையுணர்வு.

ஒரு அருமையான கலைச்சின்னத்தை அதன் பெருமை தெரிந்த ஒருவர் இருபது வெள்ளிக் காசுகள் கொடுத்து வாங்கினார். அதைப் பார்த்த ஒருவன், ""இவ்வளவு அரிய கலைச்சின்னத்தை வெறும் இருபது வெள்ளிக் காசுக்கு விற்று விட்டானே'' என்றான்.

இன்னொருவன், ""இந்த அற்பமான கல்லுக்கு இருபது வெள்ளிக்காசு கொடுத்து வாங்குகி றானே. இவன் எவ்வளவு பெரிய மடையன்'' என்றான்.

ஆக கொடுப்பவனின் மனப்பான்மை - வாங்குபவனின் மனப்பான்மையைப் பொருத் தது அதன் மதிப்பு!

எனவே, எல்லாரும் விழிப்புணர்வுடன் ஞானம் பெற்று விளங்குவதே சிறப்பு!
Read more ...

திருமந்திரம் - ஜோதி

Monday, December 20, 2010
இந்த வெம்மை இல்லாத ஜோதி எனது மூன்று கடன்களையும் தான் ஏற்றுக்கொண் டான்- "கடன் மூன்றும் கைக்கொண்டு' என்கிறார் திருமூலர். அது என்ன மூன்று கடன்கள்?

ஒவ்வொரு பிறவியிலும் நாம் செய்யும் கருமங்களின் பயனாக பல பாவக் கர்மாக்களைசேர்த்துக் கொள்கிறோம். இவற்றை பிறவிக் கடன் என்கிறோம். ஒரு குழந்தைஉலகில் வந்து பிறக்கும்போதே, கடந்த பிறவிகளில் சேர்த்து வைத்த பிறவிக்கடன்களையும் சுமந்து கொண்டு தான் பிறக்கிறது.

இந்தப் பிறவிக் கடன்களை முற்றிலுமாகத் தீர்த்து முடித்த பின்னரே இனிபிறவியில்லாத பெரு நிலையான முக்தி நிலையை அடைய முடியும். இந்த பிறவிக்கடன்கள் மூன்று வகையானவை. மனம், வாக்கு, காயம் (உடல்) ஆகிய மூன்றின்வழியாகவே இந்தப் பிறவிக் கடன்களை நாம் சேர்த்துக் கொள்கிறோம்.

* மனம்- நமது எண்ணங்கள் உருவாவது மனதில்தான். பாவ எண்ணங்கள், பாவசிந்தனைகள் ஆகியவற்றின் வழியாக நாம் பாவ கர்மாக்களைச் (கடன்களை)சேர்க்கிறோம்.

* வாக்கு- நமது முறையற்ற பேச்சு, பிறரைப் புண்படுத்தும்படியான சொற்கள்,பிறருக்குத் தீங்கு விளைவிக்கும் ஆணைகள் என நமது வாக்கினாலும் பாவகர்மாக்கள் நம்மை வந்தடையும்.

* காயம் என்பது உடலைக் குறிக்கும் சொல். இந்த உடலால் நாம் செய்யும்முறையற்ற- தீய செயல்களும் பாவ கர்மாக்களை நம் கணக்கில் சேர்த்து வைக்கும்.

நமது மனம், வாக்கு, காயம் ஆகிய மூன்றின் மூலமாகவும் நாம் சேர்த்துவைத்துள்ள பிறவிக் கடன்களையே, "கடன் மூன்றும்' என்று திருமூலர்குறிப்பிடுகிறார். இறையனுபவம் கிடைத்த நிலையில் கடவுள் நமது இந்த மூன்றுகடன்களையும் தனதாக ஏற்றுக்கொள்வானாம். (கைக்கொண்டு).

நமது பிறவிக் கடன்களை முழுமையாகத் தீர்த்து முடிக்க பல நூறு பிறவிகள்எடுக்க வேண்டியதிருக்கும். ஆனால் இறையருள் நமக்கு இருக்கும் பட்சத்தில்இந்தப் பிறவிக் கடன்கள் அனைத்தையும் இறைவன் ஒரு நொடியில் தனதாக்கிக்கொள்வானாம். தான் எனும் அகங்கார மலம் மரணமடைந்த நிலை யில்தான் இதுநடைபெறும்.

பிறவிக் கடன்கள் தீர்ந்த நிலையே உண்மையான விடுதலை அடைந்த நிலையாகும்."கடன் பட்டார் நெஞ்சம்போல் கலங்கினான் இலங்கை வேந்தன்' என்ற கம்ப ராமாயணவரிகளை நினைவுபடுத்திக் கொள் ளுங்கள்.

கடன் பட்டவர் நெஞ்சத்தில் கலக்கமும் அச்சமும் நிறைந்திருக் கும். பிறவிக்கடன்கள் அனைத்தும் தீர்ந்த நிலை யிலேயே அந்த ஆன்மா உண்மையான- சுதந்திர மானநிலையை அடையும். அடுத்ததாக பாடலின் இறுதி அடியைக் காணலாம்.

"வாச்ச புகழ்மாளத் தாள்தந்து மன்னுமே'

ஞானப் பாதையில் சென்று முக்தி நிலையை அடைய நினைப்பவர்களுக்கு ஒரு மிக முக்கியமான சூட்சுமம் இந்த அடியில் உள்ளது.

ஒரு பூ மலர்ந்து விட்டது என்பதையும் ஒரு பழம் கனிந்து விட்டது என்பதையும்எவரும் சென்று அறிவிக்க வேண்டியதில்லை. அவற்றின் வாசமே காட்டிக்கொடுத்துவிடும். அதுபோன்றே ஒரு மனிதன் இறை அனுபவம் பெற்று, பிறவிக் கடனும்நீங்கிய நிலையே சித்தர் நிலை அல்லது ஞான நிலையாகும். இந்த நிலையை அவர்அடைந்து விட்டார் என்பதை உலகுக்கு எவரும் எடுத்துச் சொல்ல வேண்டிய அவசியம்இல்லை.

இந்த நிலையை அடைந்தவர்களின் உடலிலிருந்து வெளிவரும் சக்தி அதிர்வுகளே அதை உலகுக்கு உணர்த்திவிடும். உலகமே அவரது அருள் வேண்டி அவரது காலடியில் வந்து விழத் துவங்கும். அவரது புகழும் எட்டுத் திக்கும் பரவத் துவங்கும்.

இங்கேதான் ஒரு சிக்கல் எழுகிறது. சித்தர் நிலையை அடைந்தவர்கள்கூட புகழ்போதை யில் மயங்கிவிடக் கூடும். மனம் தடுமாறத் துவங் கும். அந்த போதைக்குஅடிமையாகிவிட்டால் "முக்தி' எனும் இறுதி நிலையை அடைய அது ஒரு பெரும் தடைச்சுவராகிவிடும்.

இந்த நிலையில் இறைவனது திருவடிகளை இறுகப் பற்றிக் கொண்டால் மட்டுமேவாய்த்த புகழ் மாளும். முக்தி நிலையை அடைய முடியும். இதற்கு இறைவன் தனதுதிருவடிகளை நம் உள்ளத்துள் பதித்து நம்மைக் கரையேற்ற வேண்டும்.

இறைவனது திருவடி களின் புகழ் குறித்து திருமூலர் பல பாடல் களைப் பாடி வைத்துள் ளார். அவற்றில் சில...

"திருவடி ஞானம் சிவம் ஆக்குவிக்கும்

திருவடி ஞானம் சிவலோகம் சேர்க்கும்

திருவடி ஞானம் சிறைமலம் மீட்கும்

திருவடி ஞானம் திண்சித்தி முத்தியே'

-திருமந்திரப் பாடல் எண்-1582

இறைவனின் திருவடிகளே சரணம் என்று பற்றிக் கொண்டு, அதே சிந்தனையோடுதியானித்திருப்பதையே திருவடி ஞானம் என்பார்கள். இந்த திருவடி ஞானமே மனிதனைசிவமயமாக்கும்; வீடுபேற்றினை அளிக்கும் (சிவலோகம் சேர்க்கும்). இந்ததிருவடி ஞானமே நம்மை சிறை வைத்திருக்கும் புலன் இச்சைகள், பந்த பாசங்கள்ஆகியவற்றிலிருந்து நம்மை மீட்டுக் கொண்டுவரும். முக்தி எனும் பேரின்பப்பெருவாழ்வும் இந்த திருவடி ஞானத்தினா லேயே சித்தியாகும் என்பதே இப்பாடலின்கருத்தாகும்.

"கழல்ஆர் கமலத் திருவடி என்னும்

நிழல்சேரப் பெற்றேன் நெடுமால் அறியா

அழல் சேரும் அங்குஉள் ஆதிப் பிரானும்

குழல் சேரும் என் உயிர்க் கூடும் குலைந்ததே!'

-திருமந்திரப் பாடல் எண்-1584

பாடலின் முதல் அடியில் பரமனின் திருவடிக்கு, "கழல் ஆர் திருவடி', "கமலத்திருவடி' என்று இரண்டு உவமைகளைக் கூறுகிறார் திருமூலர். கழல் என்பதுஆண்கள் காலில் அணியும் நகை. "ஆர்' என்றால் "ஒலிக்கும்' என்று பொருள்.ஓசையிடுகின்ற கழலை அணிந்த திருவடிகள் என்று பொருள். சிவன் ஆடலரசன்;நாட்டியத்தின் முதல்வன். அவனது திருவடிகளில் ஒலிக்கும் கழல் இருக்கும்தானே?

இறைவனது பாதங்களை கமலத் திருவடி என்று வர்ணிப்பதிலும் ஒரு சூட்சுமம்உள்ளது. கமலம் என்றால் தாமரை. தந்திர யோகத்தில் சக்கரங்களை கமலம், பத்மம்என்றே அழைப் பார்கள். சக்கரங்கள் சக்தி மையங்கள். இறைவனது பாதச்சக்கரங்களிலிருந்து அளவிட முடியாத சக்தி வெளி வந்து கொண்டேயிருக்கும்.இந்தக் கமலங்களை இறுகப் பற்றிக் கொள்ளும்போது அவற்றிலிருந்து வெளிவரும்சக்தியானது பக்தர்களின் உடலில் புகுந்து பக்தர்களை உய்விக்கும்.

"திருவடி என்னும்

நிழல் சேரப் பெற்றேன்'

இறைவனது திருவடிகள் எனும் நிழலில் நான் போய்ச் சேர்ந்தேன் என்கிறார்திருமூலர். இறைவன் ஜோதி வடிவானவன். நெருப்பின் அம்சம். அதன் ஒளியையும்,வெம்மையையும் சாதாரண மனிதர்களால் நேர்கொள்ள முடியாது. ஆனால் இறைவனதுதிருவடிகள் ஒரு நிழல்போல் நம்மை அந்த வெம்மையிலிருந்து பாதுகாக்கும்.எனவேதான் திருவடி என்னும் நிழல் சேரப் பெற்றேன் என்கிறார்.

பிரம்மனும் விஷ்ணுவும் இறைவனின் அடிமுடி தேடிச் சென்ற கதையைப் புராணங்களில் படித்திருப்பீர்கள். நெடுமாலாலும் காண முடியாத இறைவனின் திருவடிகளைசிவஞானத் தில் திளைத்த பக்தர்களால் கண்டுகொள்ள முடியும்.

"நெடுமால் அறியா

அழல்சேரும் அங்கிஉள்'

"அங்கி' என்பது நெருப்பைக் குறிக்கும் சொல். "அழல்' என்றால் வெம்மை.நெருப்பின் வடிவாக இருக்கும் இறைவனின் திருவடிகளை நெடுமாலாலும் காணஇயலவில்லை. ஆனால் பக்தர்களால் காண இயலும்.

"ஆதிப்பிரானும்

குழல்சேரும் என் உயிர்க் கூடும் குலைந்ததே'

இறைவனின் திருவடிகளை பற்றிக் கொண்ட பின் என்ன நிகழும்? அனைத்திற்கும்முதல்வனான ஈசனும் (ஆதிப்பிரானும்) அவனது துணைவியான அழகிய கூந்தலுடைய உமையும்(குழல்) பக்தரின் உடலின் உள்ளே இணைய, இந்த உயிரைத் தாங்கி நிற்கும்கூடாகிய உடல் அழிந்து போயிற்று.

இந்த வரிகளில் சில தந்திர யோக சூட்சுமங்கள் உள்ளன. நமது உடலில் இரு வகையானசக்திகள் உள்ளன- நேர் சக்தி (பாசிடிவ்), எதிர்சக்தி (நெகடிவ்). இதில் நேர்சக்தி என்பது சிவன். எதிர்சக்தி சிவனின் துணைவியான சக்தி. சிவனும்சக்தியும் ஒன்றாக இணைவதே தந்திர யோகத்தின் உச்ச கட்டம்.

மூலாதாரச் சக்கரத்தின் அருகில் உறங்கிக் கிடக்கும் குண்டலினி சக்தியேஎதிர்சக்தியான உமையாள். நேர் சக்தியான சிவம் கபாலத்தின் உள்ளே இருக்கிறது.குண்டலினி சக்தியை தந்திர யோகப் பயிற்சிகளால் தட்டியெழுப்பி சுழுமுனை நாடிவழியே மேலே கொண்டு வந்து கபாலத்தில் இருக்கும் நேர்சக்தியோடு (சிவம்)இணைக்கும்போதே எல்லையற்ற பேரானந்த நிலை ஏற்படும். இறைவனின் திருவடிகளைஇறுகப் பற்றிக் கொள்ளும் போதே இந்த இணைப்பு நிகழும்.

"...என் உயிர்க் கூடும் குலைந்ததே'

என்ற சொற்களிலும் ஆழமான பொருள் உள்ளது. உடல் என்பது நமது உயிரைத் தாங்கிநிற்கும் ஒரு கூடு மட்டுமே. உடலின் உள்ளே சக்தியும் சிவமும் இணையும்போதுஅந்த ஜீவாத்மா பரமாத்மாவோடு இணைந்து விடுகிறது. முக்தி நிலையை அடைகிறது.இந்த நிலையை அடைந்த பின்னர் அந்த ஆன்மாவுக்கு உடல் எனும் கூடு அவசியமில்லை.

பறவைக்கு சிறகு முளைத்துவிட்டால் அது கூட்டை விட்டுப் பறந்து போகும்அல்லவா? அது போன்றே சிவம்- சக்தி இணைப்பால் உயர் நிலையை அடைந்த ஆன்மா,இந்த உடல் எனும் கூட்டின் தளைகளிலிருந்து விடுபட்டு விடும். பந்தபாசங்களோ, உலக மாயைகளோ இனி அந்த ஆன்மாவைக் கட்டுப்படுத்தாது. இதையே கூடுகுலைந்ததே என்கிறார் திருமூலர்.

இறைவனின் திருவடிகளின் பெருமையைக் கூறும் மற்றொரு பாடலையும் காணலாம்.

"மந்திரம் ஆவதும் மாமருந்து ஆவதும்

தந்திரம் ஆவதும் தானங்கள் ஆவதும்

சுந்தரம் ஆவதும் தூய்நெறி ஆவதும்

எந்தை பிரான்தன் இணைஅடி தானே'

-திருமந்திரப் பாடல் எண்- 1588

இது ஒரு மிக எளிய பாடல்.
பாடலைப் பலமுறை வாசித்து, மனதில் தியானித்துப் பாருங்கள்.
Read more ...

திருமந்திரம் - ஜோதி

Monday, December 20, 2010
தந்திர யோகப் பயிற்சிகளின் மூலம் இறை அனுபவத்தை உணர்ந்த நிலைஎப்படிப்பட்டது என்பதை திருமந்திரப் பாடலின் வழியே கடந்த அத்தியாயத்தில்கண்டோம். இந்த இறை அனுபவ நிலை முக்தி நிலைக்கு முற்பட்ட நிலை என்பதையும்கண்டோம். இந்த இரு நிலைகளுக்கும் இடைப்பட்ட காலத்தில் என்ன நிகழும்?சொல்கிறது ஒரு திருமந்திரப் பாடல்.

"பேச்சற்ற இன்பத்துப் பேரானந்தத் திலே

மாச்சற்ற என்னைச் சிவமாக்கி மாள்வித்துக்

காச்சற்ற சோதி கடன் மூன்றும் கைக்கொண்டு

வாச்ச புகழ்மாளத் தாள்தந்து மன்னுமே.'

-திருமந்திரப் பாடல் எண்: 1579.

இறை அனுபவம் என்ற பேரானந்த நிலை ஏற்படும்போது பேச்சு அறுந்து போகும் என்பதை ஏற்கெனவே கண்டோம். இதையே இப்பாடலின் முதல் வரியில்,

"பேச்சற்ற இன்பத்துப் பேரானந்தத் திலே'

என்கிறார் திருமூலர்.

இந்தப் பேரானந்த நிலையில் திளைத்து மூழ்கும்போது ஜீவாத்மா பரமாத்மாவோடுஒன் றிணைகிறது. மனிதனும் கடவுளாகும் நிலை இது. இதையே இரண் டாவது வரியில்,

"மாச்சற்ற என்னை சிவமாக்கி மாள்வித்து'

என திருமூலர் குறிப்பிடுகிறார். இந்த நிலையை அடைந்த மனிதன் சிவமயமாகி, சிவனோடு ஒன்றி விடுகிறான்.

இந்த வரியில் வருகின்ற கடைசி சொல்லான "மாள்வித்து' என்ற சொல்லுக்கு மிகநுட்பமான பொருள் உண்டு. மாள்வித்து என்றால் மரண மடையச் செய்து என்பதுபொருள். இதில் உள்ள நுட்பம் என்ன?

ஒவ்வொரு மனிதனுக்கும் ஒரு தனித்துவமான அடையாளம் உண்டு. இதையே அந்தமனிதனின் "பர்சனாலிட்டி' என்கிறோம். ஒரு மனிதனைப்போல் அடுத்த மனிதன்இருப்ப தில்லை. உருவம், பேச்சு, சிந்தனை, செயல்பாடு கள் என ஒவ்வொருவிஷயத்திலும் மனிதர் களிடையே சிறு சிறு வேறுபாடுகள் இருக்கும். இதையே"தனிமனித அடையாளம்' என்கிறோம்.

ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் இருக்கின்ற "தான்' என்ற ஈகோவின் அடித்தளத்திலேயேஇந்தத் தனி மனித அடையாளங்கள் கட்டி எழுப் பப்படுகின்றன.. "நான்' என்றஅகங்காரத்திற்கும் இதுவே அடிப்படை இந்த அகங்காரத்தையே "ஆணவ மலம்' என்றுஆன்மிகம் சொல்கிறது.

முக்தி நிலையை அடையப் பெரும் தடையாக இருப்பது இந்த அகங்காரம் எனும் ஆணவமலமே! இறையனுபவம் ஏற்படும்போது இந்த ஆணவ மலத்தை இறையருள் அழித்து விடும்.ஒருவகையில் இது ஒரு மரணமே. அதுவரையில் இருந்த "தான்' என்ற அகங்காரம்நிறைந்த மனிதனின் (ஈகோவின்) மரணம். இந்த மரணம் நிகழ்ந்தபின் ஒரு புதியமனிதன்- "தான்' என்ற ஆணவ மலம் இல்லாத ஒரு புதிய பிறவி உருவாகிறது.

இந்த அற்புதத்தை நிகழ்த்துவது இறைவன். தனி மனித முயற்சியால் மட்டும் இதுநிகழாது. இறைவனே இதை நிகழ்த்த வேண்டும். எனவே தான் "மாண்டு' என்ற சொல்லைப்பயன் படுத்தாமல், "மாள்வித்து' என்ற சொல்லை திருமூலர் இங்கேபயன்படுத்தியிருக்கிறார்.

இந்தப் பாடலின் கடைசி இரு அடிகளில் பல சூட்சுமங்கள் பொதிந்து கிடக்கின்றன. அவற்றை ஒவ்வொன்றாகக் காணலாம்.

"காச்சற்ற சோதி கடன் மூன்றும் கைக்கொண்டு'

இறைவன் ஜோதி வடிவானவன். ஜோதி என்பது நெருப்பின் அம்சம். வெம்மையும்ஒளியும் அதன் தன்மைகள். ஜோதி வடிவில் இறைவன் உள்ளத்தில் குடிகொள்ளும்போதுஉள்ளம் ஒளியால் நிறையும். உள்ளத்திலிருக்கும் இருட்டு அகலும்.

முப்புரம் எரித்தவன் ஈசன். அந்த ஜோதி தனது வெம்மையைக் காட்டினால்அடியவர்களால் தாங்க முடியுமா? "அன்பே சிவம்'. அந்த அன்பு வடிவான இறைவன்தன் பக்தர்களிடம் வெம்மையைக் காட்டுவதில்லை. பக்தர்களின் உள்ளத்தில் அவன்வெம்மை (சூடு) இல்லாத ஜோதியாகவே குடிகொள்வான். இதையே திருமூலர் "காச்சற்றஜோதி' - சூடு இல்லாத ஜோதி என்கிறார்.
Read more ...

ஔவையார்

Monday, December 20, 2010
ஔவையார் ஒருமுறை ஓர் ஊருக்குப் போய்க்கொண்டிருந்தார். அப்போது ஓர் ஊரைவிட்டுச்சற்று தூரம் போனபின்பு இருட்ட ஆரம்பித்தது. வழியில் ஒரு பாழடைந்த மண்டபம் இருந்தது. சுற்றிலும் முள் புதர்கள் மண்டிப்போய் பார்க்கவே பயமும் அருவெறுப்பாகவும் இருந்தது.
இருந்தாலும் அங்கேயே ராத்தங்கிச்செல்லலாம் என்று முடிவுகட்டி, ஔவாயார் அங்கு தன் மூட்டையை இறக்கிவைது, இடத்தைச் சுத்தம் செய்து அமர்ந்தார். அப்போது அந்தப்பக்கம் வந்த கிரமத்தினர் சிலர், ஔவையாரைப்பார்த்து, "இங்கே ஒரு பயங்கரப்பேய் இருக்கிறது. அது ஆளை அடிக்கும். ஆகவே இங்கு தங்காதீர்கள். எங்களுடன் கிராமத்துக்கு வாருங்கள் என்றார்கள். ஆனால் ஔவையார் அதற்கு இணங்கவில்லை. "என்னை நானே பார்த்துக்கொல்ள்வேன். அத்துடன் எனக்கு இன்னும் ஓரடிகூட அசையமுடியாது", என்று சொல்லிவிட்டார். கிராமத்தினர் மிக வேகமாக அகன்றனர்.
இரவு வந்தவுடன் முதற் சாமத்தில் பயங்கரமாகக் காற்று வீசியது. நரிகள் ஊளையிட்டன. ஆந்தைகள் அலறின. கழுதைப்புலிகள் சிரித்தன. சர்சரவென்று சப்தத்துடன் ஓர் உருவம் தரையிலிருந்து முளைத்ததுபோல் நெடிது உயர்ந்து நின்றது. புகைம்மூட்டத்தில் அது இருந்தது. பார்க்கவே குலை நடுங்கும்வண்னம் இருந்தது.
ஔவையாரைப் பார்த்து பயமுறுத்தி, "எற்றோமற்றெற்றோமற்றெற்று" என்று கூறியது.
அதற்கு ஔவையார், ஒரு பாடலைச் சொன்னார்.

வெண்பா விருகாலிற் கல்லானை வெள்ளோலை
கண்பார்க்கக் கையால் எழுதானைப் - பெண்பாவி
பெற்றாளே பெற்றாள் பிறர் நகைக்கப் பெற்றாளே
எற்றோமற்றெற்றோமற்றெற்று


வெண்பாவை இரண்டுமுறைப் படித்தபோதே புரிந்துகொள்ள முடியாதவனை, வெற்று ஓலையில் கண்ணால் பார்த்துக் கையால் திருத்தமாக எழுதமாட்டாதவனை ஒரு பெண்பாவி பெற்றாளே!
பெற்றதும் பெற்றாள், பிறர் சிரிக்கப் பெற்றாள்; அப்படிப்பட்டவளை எற்று, மறுபடியும் எற்று; மீண்டும் எற்று! என்னை ஏன் எற்றுகிறாய்?

பேய் பெரிதாக அலறிக்கொண்டு ஓடிப்போனது.
இரண்டாம் ஜாமத்தில் மீண்டும் பெரிய காற்று, இடி, மின்னலுடன் வந்தது.
மீண்டும், "எற்றோமற்றெற்றோமற்றெற்று" என்று அரற்றியது.
ஔவையார் இன்னொரு பாடலைச் சொன்னார்.

கருங்குளவிசூரைத்தூறீச்சங்கனிபோல்
வருந்தினர்க்கொன்றீயாதான் வாழ்க்கை - அரும்பகலே
இச்சித்திருந்தபொருள் தாயத்தார்கொள்வாரே
எற்றோமற்றெற்றோமற்றெற்று


ஈச்சமரம் ஒன்று. அதில் கருங்குளவி என்னும் கடுவிஷம் கொண்ட குளவி கூடுகட்டி ஏராளமாக இருக்கிறது. சூரை என்னும் முள் அந்த மரத்தின் தூறில் இருக்கிறது. அந்த ஈச்ச மரத்தின் கனியை யாரும் அண்டி, பறித்து உண்ணமுடியாது. துன்பப்பட்டவர்களுக்கு ஒன்றுமே தானம் செய்யாதவன் வாழ்க்கை எப்படியிருக்கும்? பகலில் அவன் மிகவும் இச்சையுடன் வைத்திருந்த பொருள் அன்று இரவிலேயே பங்காளிகள் கைக்கொள்ளும்வண்ணம் அவன் போவான். அந்த மாதிரி ஈயாலோபியை எற்று, மறுபடியும் எற்று; மீண்டும் எற்று! என்னை ஏன் எற்றுகிறாய்?

இதைக் கேட்டு பேய் ஓலமிட்டவாறு ஓடிப்போய்விட்டது.
மூன்றாம் சாமத்தில் மீண்டும் வந்தது. அப்போதும் அது "எற்றோமற்றெற்றோமற்றெற்று!"
என்று அலறியது.
மூன்றாவது பாடலையும் ஔவையார் சொன்னார்.

வானமுளதான் மழையுளதான் மண்ணுலகிற்
றானமுளதாற்றயையுளதால் - ஆனபொழு
தெய்த்தோமிளைத்தோமென்றேமாந்திருப்போரை
எற்றோமற்றெற்றோமற்றெற்று

வானமும் இருக்கின்றதால், மழையும் இருப்பதால், மண்ணுலகில் தானமும் இருப்பதால் தயையும் இருப்பதால் நமக்கு என்ன கவலை? சம்பாதித்தோம், இழந்தோம் என்றவண்ணம் கருக்கடையோ சமர்த்தோ இல்லாமல் ஏமாந்து இருப்போரை எற்று, மறுபடியும் எற்று; மீண்டும் எற்று! என்னை ஏன் எற்றுகிறாய்?

பேய் மீண்டும் ஓடிப்போய்விட்டது.
நான்காவது ஜாமத்தில் மீண்டும் பேய் வந்தது. அப்போது அது மிகவும் நெருங்கி வந்து,
"எற்றோமற்றெற்றோமற்றெற்று" என்றது.
அதற்கு ஔவையார் நான்காவதாக ஒரு பாடலைப் பாடினார்.

எண்ணாயிரத்தாண்டு நீரிற் கிடந்தாலும்
உண்ணீரம்பற்றாக்கிடையேபோற் - பெண்ணாவாய்
பொற்றொடி மாதர் புணர்முலைமேற்சாராரை
எற்றோமற்றெற்றோமற்றெற்று

எட்டாயிரம் வருடங்கள் தண்ணீரில் ஊறினாலும் உள்ளுக்குள் ஈரத்தைப் பற்றி இழுத்துக்
கொள்ளாத கிடையைப்போல சிலர் இருப்பர். அவர்கள் இந்த உலகிலேயே வாழ்ந்தாலும் இதன் போகங்களில் ஒன்றான பெண் போகத்தில் ஈடுபடாமலிருப்போரை, ஏ பெண்ணாக இருப்பவளே! நீ போய் அவர்களை எற்று, மறுபடியும் எற்று; மீண்டும் எற்று! என்னை ஏன் எற்றுகிறாய்?

இந்த வெண்பாவில் அடங்கிய கருத்துக்கள் அனைத்துமே யதார்த்தமானவை. நியாயமானவை. "அப்படியேல்லாம் ஆட்கள் இருக்கும்போது என்னை ஏன் எற்றவருகிறாய்?
எற்றுவதென்றால் அவர்களைப்போய் எற்று!"

இந்தப் பாடலைச்சொல்லியவாறு, தன் திருநீற்று மடலிலிருந்து ஒரு பிடி திருநீற்றை எடுத்து அந்தப் பேயின் மீது வீசினார்.
"முன்னால் வந்து நில் அப்படியே! பேசு! யார் நீ? ஏன் இப்படிச் செய்கிறாய்? என்ன
வேண்டும் உனக்கு?", என்று பேயைக்கேட்டார்.
பேயின் உருவம் மங்கியது. மீண்டும் வேறொரு உருவம் அங்கு தெரிந்தது.
மிக அழகிய இளம் பெண்.

அது தன் கதையைச் சொன்னது.....

தன் பூர்வீக வாழ்வில் அது ஓர் அரசகுமாரியாக இருந்தது.
பெயர் ஏலவார்குழலி.
மிக அழகான பெண். பலகலைகளையும் அறிந்தவள்.
ஊருக்கு வெளியில் தனியாக இருந்த கன்னிமாடத்தின் பூந்தோட்டத்தில் ஒருநாள் தன் தோழிகளுடன் பூப்பந்து விளையாடிக்கொண்டிருந்தாள்.
அப்போது அழகிய இளைஞன் ஒருவன் கன்னிமாடத்திற்குள் எப்படியோ வந்துவிட்டான். அப்படியே நந்தவனத்தின் பக்கத்தில் வரும்போது, அரசகுமாரி தட்டிய பூப்பந்து அவன் மேல் விழுந்தது. அதை அப்படியே பிடித்துக்கொண்டான். அதைக் கொண்டுவந்து அரசகுமாரியிடம் கொடுத்தான். கண்டவுடன் காதல் தோன்றியது. அதன் பின்னர் வந்த வழியே போய்விட்டான்.
அரசகுமாரி அவனை யாரென்று கண்டறிய தன்னுடைய அந்தரங்க உளவாளிகளை அனுப்புஇனாள்.
அவன் இன்னொரு நாட்டு இளவரசன். நாடுகளைச்சுற்றிப் பார்க்க அவன் புறப்பட்டவன். வழியில் இந்த நாட்டுக்கும் வந்திருக்கிறான். ஒரு சத்திரத்தில் அவன் தங்கியிருக்கிறான்.
உடனே அவனை எப்படியாவது சந்திக்கவேண்டும் என்ற வேட்கையால் உந்தப்பட்டு, அரசகுமாரி ஒரு காதல் மடலை எழுதினாள். அதில் கன்னிமாடத்தின் அருகே இருக்கும் நந்தவனத்தில் மணிமண்டபத்துக்கு அன்று இரவு இரண்டாம் ஜாமத்தில் வரச்சொல்லி, அதற்குப்
பாதையையும் தெரிவித்தாள்.
இதை மிக ரகசியமாக அவனுக்கு அனுப்பிவைத்தாள்.
சத்திரத்தில் அரசகுமாரனிடம் அந்த மடல் சேர்ப்பிக்கப்பட்டது.
கடிதத்தைப் பார்த்து இளவரசன் திகைத்தான்.
ஏனெனில் இளவரசனுக்கு எழுதப் படிக்கத்தெரியாது.
அருகில் ஒரு சன்னியாசி அமர்ந்திருந்தான். அவன் ஒரு தொழுநோயாளி.
அவனிடம் ஓலைக்கொடுத்துப் படிக்கச்சொன்னான்.
ஓலையைப் படித்து அறிந்த சன்னியாசி, ஒரு சதித்திட்டம் போட்டான்.
இளவரசனைப் பார்த்து, "நீர் இந்த நாட்டு இளவரசியின் கன்னிமாடத்துக்குள் அத்துமீறி நுழைந்துவிட்டதால் உம் தலையை வாங்குமாறு உத்தரவாகியிருக்கிறது. காவலாளிகள் வந்துகொண்டிருக்கிறார்கள்", என்றான்.
இளவரசன் சன்னியாசியிடம் என்ன செய்வதென்று யோசனை கேட்டான்.
உடனடியாக ஓடிப்போகச் சொன்னான்.
இளவரசனும் உடனடியாக ஊரைவிட்டு நாட்டைவிட்டுப் போனான்.
இரவு இரண்டாம் ஜாமத்தில் சன்னியாசி தன்னைச் சால்வையால் போர்த்துக்கொண்டு மண்டபத்துக்குச்சென்றான். அங்கு வந்த இளவரசி அவன்தான் இளவரசன் என்றெண்ணி அவனைத் தழுவிக்கொண்டாள். சிறிது நேரம் கழித்தே சன்னியாசியை அறிந்துகொண்டாள். அவனும் அரசகுமாரியைப் பலாத்காரம் செய்தான். அதனால் அரசகுமாரி கத்தியால் குத்திக்கொண்டு இறந்துபோனாள்.
இறந்தவள் ஒரு பயங்கர பேயாக மாறினாள்.
அவளுடைய பைசாச வெறியால் அந்த வட்டாரத்தையே நாசப்படுத்திப் பாழடையவைத்தாள். அங்கு வருபவர்களையும் கொன்றுபோட்டாள்.
காதலில் தோல்வியடைந்து உயிருக்குப் பயந்து ஓடிய இளவரசனும் மனம் நொந்துபோய் இறந்துபோனான்.
அவனும் இன்னொரு இடத்தில் பேயாக அலைந்துகொண்டிருந்தான்.
இதையெல்லாம் சொல்லிமுடித்த அந்த அரசகுமாரிப் பேய் ஔவையாரின் கால்களில் விழுந்தது.
ஔவையார் அந்தப் பேயின்மேல் இரக்கம் கொண்டார்.
"நீ உடனடியாக மறுபடியும் பிறப்பாய். நீ ஒரு பெரிய வித்வம்சினியாக இருப்பாய். அறுபத்துநான்கு கலைகள், சாத்திரங்கள், மொழிகள் அறிந்த புலவராக இருப்பாய். உன்னைத்திருமணம் புரிய வருபவர்களுக்கெல்லாம் கடுமையான சோதனைகள் வைப்பாய். அவர்கள் தோற்று உன் அடிமைகளாவார்கள். உன் காதலனாகிய இளவரசன் இன்னொரு ஊரில் பிறப்பான். அவன் ஒரு பெரும்புலவனாகவும் வீரனாகும் திகழ்வான். அவன் உன்னை வென்று உன்னைத் திருமணம் செய்துகொள்வான். நீங்கள் இருவரும் பல காலம் வளமுடன் வாழ்வீர்கள்".
Read more ...

கந்த குரு கவசம்

Friday, December 3, 2010
.. விநாயகர் வாழ்த்து ...

கலியுகத் தெய்வமே கந்தனுக்கு மூத்தோனே
மூஷிக வாகனனே மூலப் பொருளோனே
ஸ்கந்தகுரு கவசத்தை கலிதோஷம் நீங்கிடவே
திருவடியின் திருவருளால் செப்புகிறேன் காத்தருள்வாய்
சித்தி வினாயக ஜயமருள் போற்றுகிறேன் ...... 5

சிற்பர கணபதே நற்கதியும் தந்தருள்வாய்
கணபதி தாளிணையைக் கருத்தினில் வைத்திட்டேன்
அச்சம் தீர்த்து என்னை ரக்ஷித்திடுவீரே.

... செய்யுள் ...

ஸ்கந்தா சரணம் ஸ்கந்தா சரணம்
சரவணபவ குகா சரணம் சரணம் ...... 10

குருகுகா சரணம் குருபரா சரணம்
சரணம் அடைந்திட்டேன் கந்தா சரணம்
தனைத் தானறிந்து நான் தன்மயமாகிடவே
ஸ்கந்தகிரி குருநாதா தந்திடுவீர் ஞானமுமே
தத்தகிரி குருநாதா வந்திடுவீர் வந்திடுவீர் ...... 15

அவதூத சத்குருவாய் ஆண்டவனே வந்திடுவீர்
அன்புருவாய் வந்தென்னை ஆட்கொண்ட குருபரனே
அறம் பொருள் இன்பம் வீடுமே தந்தருள்வாய்
தந்திடுவாய் வரமதனை ஸ்கந்தகுருநாதா
ஷண்முகா சரணம் சரணம் ஸ்கந்த குரோ ...... 20

காத்திடுவாய் காத்திடுவாய் ஸ்கந்தகுரு நாதா
போற்றிடுவேன் போற்றிடுவேன் புவனகுரு நாதா
போற்றி போற்றி ஸ்கந்தா போற்றி
போற்றி போற்றி முருகா போற்றி
அறுமுகா போற்றி அருட்பதம் அருள்வாய் ...... 25

தகப்பன் ஸ்வாமியே என் இதயத்துள் தங்கிடுவாய்
ஸ்வாமி மலைதனில் சொன்னதனைச் சொல்லிடுவாய்
சிவகுரு நாதா செப்பிடுவாய் ப்ரணவமதை
அகக்கண் திறக்க அருள்வாய் உபதேசம்
திக்கெலாம் வென்று திருச்செந்தில் அமர்ந்தோனே ...... 30

ஆறுமுக ஸ்வாமி உன்னை அருட்ஜோதியாய்க் காண
அகத்துள்ளே குமரா நீ அன்பு மயமாய் வருவாய்
அமரத் தன்மையினை அனுக்கிரகித்திடுவாயே
வேலுடைக் குமரா நீ வித்தையும் தந்தருள்வாய்
வேல் கொண்டு வந்திடுவாய் காலனை விரட்டிடவே ...... 35

தேவரைக் காத்த திருச்செந்தில் ஆண்டவனே
திருமுருகன் பூண்டியிலே திவ்ய ஜோதியான கந்தா
பரஞ் ஜோதியும் காட்டி பரிபூர்ணமாக்கிடுவாய்
திருமலை முருகா நீ திடஞானம் அருள் புரிவாய்
செல்வமுத்துக் குமரா மும்மலம் அகற்றிடுவாய் ...... 40

அடிமுடி யறியவொணா அண்ணா மலையோனே
அருணாசலக் குமரா அருணகிரிக்கு அருளியவா
திருப்பரங்கிரிக் குகனே தீர்த்திடுவாய் வினை முழுதும்
திருத்தணி வேல்முருகா தீரனாய் ஆக்கிடுவாய்
எட்டுக்குடிக் குமரா ஏவல்பில்லி சூனியத்தை ...... 45

பகைவர் சூதுவாதுகளை வேல்கொண்டு விரட்டிடுவாய்
எல்லாப் பயன்களும் எனக்குக் கிடைத்திடவே
எங்கும் நிறைந்த கந்தா எண்கண் முருகா நீ
என்னுள் அறிவாய் நீ உள்ளொளியாய் வந்தருள்வாய்
திருப்போருர் மாமுருகா திருவடியே சரணமய்யா ...... 50

அறிவொளியாய் வந்து நீ அகக்கண்ணைத் திறந்திடுவாய்
திருச்செந்தூர் ஷண்முகனே ஜகத்குருவிற் கருளியவா
ஜகத்குரோ சிவகுமரா சித்தமலம் அகற்றிடுவாய்
செங்கோட்டு வேலவனே சிவானுபூதி தாரும்
சிக்கல் சிங்காரா ஜீவனைச் சிவனாக்கிடுவாய் ...... 55

குன்றக்குடிக் குமரா குருகுகனாய் வந்திடப்பா
குமரகிரிப் பெருமானே மனத்தையும் மாய்த்திடுவீர்
பச்சைமலை முருகா இச்சையைக் களைந்திடப்பா
பவழமலை ஆண்டவனே பாவங்களைப் போக்கிடப்பா
விராலிமலை ஷண்முகனே விரைவில் நீ வந்திடப்பா ...... 60

வயலூர் குமாரகுரோ ஞானவரமெனக் கருள்வீரே
வெண்ணைமலை முருகா மெய்வீட்டைத் தந்திடுவீர்
கதிர்காம வேலவனே மனமாயை அகற்றிடுவாய்
காந்த மலைக் குமரா கருத்துள் வந்திடுவீர்
மயிலத்து முருகா நீ மனத்தகத்துள் வந்திடுவீர் ...... 65


கஞ்சமலை சித்தகுரோ கண்ணொளியாய் வந்திடுவீர்
குமரமலை குருநாதா கவலையெலாம் போக்கிடுவீர்
வள்ளிமலை வேல்முருகா வேல்கொண்டு வந்திடுவீர்
வடபழனி ஆண்டவனே வல்வினைகள் போக்கிடுவீர்
ஏழுமலை ஆண்டவனே எத்திக்கும் காத்திடுவீர் ...... 70

ஏழ்மை அகற்றிக் கந்தா எமபயம் போக்கிடுவீர்
அசையாத நெஞ்சத்தில் அறிவாக நீ அருள்வாய்
அறுபடைக் குமரா மயிலேறி வந்திடுவாய்
பணிவதே பணியென்று பணித்தனை நீ எனக்கு
பணிந்தேன் கந்தா உன்பாதம் பணிந்துவப்பேன் ...... 75

அருட்பெருஞ் ஜோதியே அன்பெனக் கருள்வாயே
படர்ந்த அன்பினை நீ பரப்பிரம்மம் என்றனையே
உலகெங்கும் உள்ளது ஒருபொருள் அன்பேதான்
உள்ளுயிராகி இருப்பதும் அன்பென்பாய்
அன்பே குமரன் அன்பே ஸ்கந்தன் ...... 80

அன்பே ஓம் என்னும் அருள்மந்திரம் என்றாய்
அன்பை உள்ளத்திலே அசையாது அமர்த்திடுமோர்
சக்தியைத் தந்து தடுத்தாட் கொண்டிடவும்
வருவாய் அன்பனாய் வந்தருள் ஸ்கந்தகுரோ
யாவர்க்கும் இனியன் நீ யாவர்க்கும் எளியன் நீ ...... 85

யாவர்க்கும் வலியன் நீ யாவர்க்கும் ஆனோய் நீ
உனக்கொரு கோயிலை என் அகத்துள்ளே புனைவேனே
சிவசக்திக் குமரா சரணம் சரணம் ஐயா
அபாயம் தவிர்த்துத் தடுத்தாட் கொண்டருள்வாய்
நிழல்வெயில் நீர்நெருப்பு மண்காற்று வானதிலும் ...... 90

பகைமையை அகற்றி அபயமளித்திடுவீர்
உணர்விலே ஒன்றி என்னை நிர்மலமாக்கிடுவாய்
யானென தற்ற மெய்ஞ் ஞானம் தருள்வாய் நீ
முக்திக்கு வித்தான முருகா கந்தா
சதுர்மறை போற்றும் ஷண்முக நாதா ...... 95

ஆகமம் ஏத்தும் அம்பிகை புதல்வா
ஏழையைக் காக்க நீ வேலேந்தி வந்திடுவாய்
தாயாய்த் தந்தையாய் முருகா தக்கணம் நீ வருவாய்
சக்தியும் சிவனுமாய்ச் சடுதியில் நீ வருவாய்
பரம்பொருளான பாலனே ஸ்கந்தகுரோ ...... 100

ஆதிமூலமே அருவாய் உருவாய் நீ
அடியனைக் காத்திட அறிவாய் வந்தருள்வாய்
உள்ளொளியாய் முருகா உடனே நீ வா வா வா
தேவாதி தேவா சிவகுரோ வா வா வா
வேலாயுதத்துடன் குமரா விரைவில் நீ வந்திடப்பா ...... 105

காண்பன யாவுமாய்க் கண்கண்ட தெய்வமாய்
வேதச் சுடராய் மெய்கண்ட தெய்வமே
மித்தையாம் இவ்வுலகை மித்தையென்று அறிந்திடச்செய்
அபயம் அபயம் கந்தா அபயம் என்று அலறுகின்றேன்
அமைதியை வேண்டி அறுமுகவா வாவென்றேன் ...... 110

உன்துணை வேண்டினேன் உமையவள் குமரா கேள்
அச்சம் அகற்றிடுவாய் அமைதியைத் தந்திடுவாய்
வேண்டியது உன்அருளே அருள்வது உன் கடனேயாம்
உன் அருளாலே உன்தாள் வணங்கிட்டேன்
அட்டமா சித்திகளை அடியனுக்கு அருளிடப்பா ...... 115

அஜபை வழியிலே அசையாமல் இருத்திவிடு
சித்தர்கள் போற்றிடும் ஞானசித்தியும் தந்துவிடு
சிவானந்தத் தேனில் திளைத்திடவே செய்துவிடு
அருள் ஒளிக் காட்சியை அகத்துளே காட்டிவிடு
அறிவை அறிந்திடும் அவ்வருளையும் நீ தந்துவிடு ...... 120

அனுக்கிரகித்திடுவாய் ஆதிகுருநாதா கேள்
ஸ்கந்தகுரு நாதா ஸ்கந்தகுரு நாதா
தத்துவம் மறந்து தன்னையும் நான் மறந்து
நல்லதும் கெட்டதும் நான் என்பதும் மறந்து
பாவ புண்ணியத்தோடு பரலோகம் மறந்திடச்செய் ...... 125

அருள் வெளிவிட்டு இவனை அகலாது இருத்திடுவாய்
அடிமையைக் காத்திடுவாய் ஆறுமுகக் கந்தகுரோ
சித்தியிலே பெரிய ஞானசித்தி நீ அருள
சீக்கிரமே வருவாய் சிவானந்தம் தருவாய்
சிவானந்தம் தந்தருளி சிவசித்தர் ஆக்கிடுவாய் ...... 130

சிவனைப் போல் என்னைச் செய்திடுவது உன் கடனே
சிவசத் குருநாதா சிவசத் குருநாதா
ஸ்கந்த குருநாதா கதறுகிறேன் கேட்டிடுவாய்
தாளினைப் பிடித்தேன் தந்திடு வரம் எனக்கு
திருவருட் சக்தியைத் தந்தாட் கொண்டிடுவாய் ...... 135

சத்ருப் பகைவர்களை ஷண்முகா ஒழித்திட்டு
கிழக்குத் திசையிலிருந்து க்ருபாகரா காப்பாற்றும்
தென்கிழக்குத் திசையிலிருந்து தீனபந்தோ காப்பாற்றும்
தென்திசையிலும் என்னைத் திருவருளால் காப்பாற்றும்
தென்மேற்கிலும் என்னைத் திறன்வேலால் காப்பாற்றும் ...... 140

மேற்குத் திக்கில் என்னை மால்மருகா ரக்ஷிப்பாய்
வடமேற்கிலும் என்னை மயிலோனே ரக்ஷிப்பாய்
வடக்கில் என்னைக் காப்பாற்ற வந்திடுவீர் சத்குருவாய்
வடகிழக்கில் எனக்காக மயில்மீது வருவீரே
பத்துத் திக்குத் தோறும் எனை பறந்துவந்து ரக்ஷிப்பாய் ...... 145

என் சிகையையும் சிரசினையும் சிவகுரோ ரக்ஷிப்பாய்
நெற்றியும் புருவமும் நினதருள் காக்கட்டும்
புருவங்களுக்கிடையே புருஷோத்தமன் காக்கட்டும்
கண்கள் இரண்டையும் கந்தவேல் காக்கட்டும்
நாசிகள் இரண்டையும் நல்லவேல் காக்கட்டும் ...... 150

செவிகள் இரண்டையும் சேவற்கொடி காக்கட்டும்
கன்னங்கள் இரண்டையும் காங்கேயன் காக்கட்டும்
உதட்டினையும் தான் உமாசுதன் காக்கட்டும்
நாக்கை நன் முருகன் நயமுடன் காக்கட்டும்
பற்களை ஸ்கந்தன் பலம்கொண்டு காக்கட்டும் ...... 155

கழுத்தை ஸ்கந்தன் கைகளால் காக்கட்டும்
தோள்கள் இரண்டையும் தூய வேல் காக்கட்டும்
கைகள் விரல்களைக் கார்த்திகேயன் காக்கட்டும்
மார்பையும் வயிற்றையும் வள்ளிமணாளன் காக்கட்டும்
மனத்தை முருகன்கை மாத்தடிதான் காக்கட்டும் ...... 160

ஹ்ருதயத்தில் ஸ்கந்தன் இனிது நிலைத்திருக்கட்டும்
உதரத்தை யெல்லாம் உமைமைந்தன் காக்கட்டும்
நாபிகுஹ்யம் லிங்கம் நவயுடைக் குதத்தோடு
இடுப்பை முழங்காலை இணையான கால்களையும்
புறங்கால் விரல்களையும் பொருந்தும் உகிர் அனைத்தையுமே ...... 165

உரோமத் துவாரம் எல்லாம் உமைபாலா ரக்ஷிப்பாய்
தோல் ரத்தம் மஜ்ஜையையும் மாம்சமென்பு மேதசையும்
அறுமுகவா காத்திடுவீர் அமரர் தலைவா காத்திடுவீர்
என் அகங்காரமும் அகற்றி அறிவொளியாய் இருந்தும்
முருகா எனைக் காக்க வேல் கொண்டு வந்திடுவீர் ...... 170

பாபத்தைப் பொசுக்கிப் பாரெல்லாம் சிறப்புறவே
ஓம் ஸெளம் சரவணபவ ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் என்றும்
க்லௌம் ஸௌம் நமஹ என்று சேர்த்திடடா நாள்தோறும்
ஓமிருந்து நமஹவரை ஒன்றாகச் சேர்த்திடடா
ஒன்றாகக் கூட்டியுமே உள்ளத்திலே இருத்தி ...... 175

ஒருமனத் தோடு நீ உருவையும் ஏத்திடடா
முருகனின் மூலமிது முழுமனத்தோடு ஏத்திட்டால்
மும்மலம் அகன்றுவிடும் முக்தியுந்தன் கையிலுண்டாம்
முக்தியை வேண்டியுமே எத்திக்கும் செல்ல வேண்டாம்
முருகன் இருப்பிடமே முக்தித் தலம் ஆகுமப்பா ...... 180

ஹ்ருதயத்தில் முருகனை இருத்திவிடு இக்கணமே
இக்கணமே மூலமந்த்ரம் ஏத்திவிடு ஏத்திவிடு
மூலமதை ஏத்துவோர்க்கு காலபயம் இல்லையடா
காலனை நீ ஜயிக்க கந்தனைப் பற்றிடடா
சொன்னபடிச் செய்தால் சுப்ரமண்ய குருநாதன் ...... 185

தண்ணொளிப் பெருஞ்சுடராய் உன்னுள்ளே தானிருப்பான்
ஜகமாயை ஜயித்திடவே செப்பினேன் மூலமுமே
மூலத்தை நீ ஜபித்தே முக்தனுமாகிடடா
அக்ஷர லக்ஷமிதை அன்புடன் ஜபித்துவிடில்
எண்ணிய தெலாம்கிட்டும் எமபய மகன்றோடும் ...... 190

மூவுலகும் பூஜிக்கும் முருகனருள் முன்னிற்கும்
பூவுலகில் இணையற்ற பூஜ்யனுமாவாய் நீ
கோடித்தரம் ஜபித்துக் கோடிகாண வேண்டுமப்பா
கோடிகாணச் சொன்னதை நீ நாடிடுவாய் மனமே
ஜன்மம் கடைத்தேற ஜபித்திடுவாய் கோடியுமே ...... 195

வேதாந்த ரகசியமும் வெளியாகும் உன்னுள்ளே
வேத சூட்சுமத்தை விரைவாகப் பற்றிடலாம்
சுப்ரமண்யகுரு ஜோதியாயுள் தோன்றிடுவான்
அருட் பெரும் ஜோதியான ஆறுமுக ஸ்வாமியுமே
அந்தர் முகமிருந்து ஆட்கொள்வான் சத்தியமாய் ...... 200

சித்தியையும் முக்தியையும் ஸ்கந்தகுரு தந்திடுவான்
நின்னையே நான் வேண்டி நித்தமும் ஏத்துகிறேன்
மெய்யறிவாகக் கந்தா வந்திடுவாய் இவனுளே நீ
வந்திடுவாய் மருவிடுவாய் பகுத்தறிவாகவே நீ
பகுத்தறி வோடிவனைப் பார்த்திடச் செய்திடப்பா ...... 205

பகுத்தறிவான கந்தன் பரங்குன்றில் இருக்கின்றான்
பழனியில் நீயும் பரம்ஜோதி ஆனாய் நீ
பிரம்மனுக்கு அருளியவா ப்ரணவப் பொருளோனே
பிறவா வரமருளி ப்ரம்ம மயமாக்கிடுவாய்
திருச்செந்தூரில் நீ சக்திவேல் தாங்கி விட்டாய் ...... 210

பழமுதிர் சோலையில் நீ பரஞ்ஜோதி மயமானாய்
ஸ்வாமி மலையிலே சிவஸ்வாமிக் கருளிய நீ
குன்றுகள் தோறும் குருவாய் அமர்ந்திட்டோய்
ஸ்கந்தகிரியை நீ சொந்தமாக்கிக் கொண்டனையே
ஸ்கந்த குருநாதா ஸ்கந்தாஸ்ரம ஜோதியே ...... 215

பிறப்பையும் இறப்பையும் பெயர்த்துக் காத்திடுவாய்
பிறவாமை என்கின்ற பெருவரம் நீ தந்திடுவாய்
தத்துவக் குப்பையை மறந்திடச் செய்திடுவாய்
எந்த நினைப்பையும் எரித்து நீ காத்திடுவாய்
ஸ்கந்தா சரணம் ஸ்கந்தா சரணம் ...... 220

சரணம் அடைந்திட்டேன் சடுதியில் வாருமே
சரவண பவனே சரவண பவனே
உன்னருளாலே நான் உயிரோடிருக்கின்றேன்
உயிருக்குயிரான கந்தா உன்னிலென்னைக் கரைத்திடப்பா
என்னில் உன்னைக் காண எனக்கு வரமருள்வாய் ...... 225

சீக்கிரம் வந்து சிவசக்தியும் தந்தருள்வாய்
இடகலை பிங்கலை ஏதும் அறிந்திலேன் நான்
இந்திரியம் அடக்கி இருந்தும் அறிகிலேன் நான்
மனதை அடக்க வழி ஒனறும் அறிந்திலேன் நான்
ஸ்கந்தா உன் திருவடியைப் பற்றினேன் சிக்கெனவே ...... 230

சிக்கெனப் பற்றினேன் செப்பிடுவீர் உபதேசம்
காமக் கசடுகள் யாவையும் களைந்திடுவாய்
சித்த சுத்தியும் ஜபமும் தந்திடுவாய்
நினைப்பு எல்லாம் நின்னையே நினைந்திடச் செய்திடுவாய்
திருமுருகா உன்னைத் திடமுற நினைத்திடவே ...... 235

திருவருள் தந்திடுவாய் திருவருள்தான் பொங்கிடவே
திருவருள் ஒன்றிலே நிலைபெறச் செய்திடுவாய்
நிலைபெறச் செய்திடுவாய் நித்யானந்தமதில்
நித்யானந்தமே நின்னுரு வாகையினால்
அத்வைதானந்தத்தில் இமைப்பொழுது ஆழ்த்திடுவாய் ...... 240


ஞான பண்டிதா நான்மறை வித்தகா கேள்
ஸ்கந்த குருநாதா ஸ்கந்த குருநாதா கேள்
மெய்ப்பொருளைக் காட்டி மேன்மை அடைந்திடச்செய்
வினைகள் யாவையுமே வேல்கொண்டு விரட்டிடுவாய்
தாரித்திரியங்களை உன் தடி கொண்டு விரட்டிடுவாய் ...... 245

துக்கங்கள் அனைத்தையும் தொலைதூரம் போக்கிடுவாய்
பாப உடலைப் பரிசுத்த மாக்கிடுவாய்
இன்ப துன்பத்தை இருவிழியால் விரட்டிடுவாய்
ஆசைப் பேய்களை அறவே நசுக்கிடுவாய்
அகந்தைப் பிசாசை அழித்து ஒழித்திடடா ...... 250

மெய்யருளாம் உன்னருளில் முருகா இருத்திடுவாய்
கண்கண்ட தெய்வமே கலியுக வரதனே
ஆறுமுகமான குரோ அறிந்திட்டேன் உன் மகிமை
இக்கணமே வருவாய் என் ஸ்கந்த குருவே நீ
என்னைக் காத்திடவே எனக்கு நீ அருளிடவே ...... 255

அரைக் கணத்தில் நீயும் ஆடி வருவாயப்பா
வந்தெனைத் தடுத்து வலிய ஆட்கொள் வரதகுரோ
அன்புத் தெய்வமே ஆறுமுக மானவனே
சுப்ரமண்யனே சோகம் அகற்றிடுவாய்
ஞான ஸ்கந்தரே ஞானம் அருள்வாய் நீ ...... 260

ஞான தண்ட பாணியே என்னை ஞான பண்டிதனாக்கிடுவாய்
அகந்தையெல்லாம் அழித்து அன்பினை ஊட்டிடுவாய்
அன்பு மயமாக்கி ஆட்கொள்ளு வையப்பா
அன்பை என் உள்ளத்தில் அசைவின்றி நிறுத்திவிடு
அன்பையே கண்ணாக ஆக்கிக் காத்திடுவாய் ...... 265

உள்ளும் புறமும் உன்னருளாம் அன்பையே
உறுதியாக நானும் பற்றிட உவந்திடுவாய்
எல்லை இல்லாத அன்பே இறைவெளி என்றாய் நீ
அங்கிங்கெனாதபடி எங்கும் அன்பென்றாய்
அன்பே சிவமும் அன்பே சக்தியும் ...... 270

அன்பே ஹரியும் அன்பே ப்ரமனும்
அன்பே தேவரும் அன்பே மனிதரும்
அன்பே நீயும் அன்பே நானும்
அன்பே சத்தியம் அன்பே நித்தியம்
அன்பே சாந்தம் அன்பே ஆனந்தம் ...... 275

அன்பே மெளனம் அன்பே மோக்ஷம்
அன்பே ப்ரம்மமும் அன்பே அனைத்தும் என்றாய்
அன்பிலாத இடம் அங்குமிங்கு மில்லை என்றாய்
எங்கும் நிறைந்த அன்பே என் குருநாதனப்பா
அன்பில் உறையும் அருட்குரு நாதரே தான் ...... 280

ஸ்கந்தாஸ்ரமத்தில் ஸ்கந்தகுரு வானான்காண்

மூவரும் தேவரும் முனிவரும் போற்றிடவே
ஸ்கந்தாஸ்ரமம் தன்னில் ஸ்கந்த ஜோதியுமாய்
ஆத்ம ஜோதியுமாய் அமர்ந்திட்ட ஸ்கந்தகுரு
இருளை அகற்றவே எழுந்திட்ட எங்கள் குரு ...... 285

எல்லை இல்லாத உன் இறைவெளியைக் காட்டிடுவாய்
முக்தியைத் தந்திடுவாய் மூவரும் போற்றிடவே
நம்பினேன் உன்னையே நம்பினேன் ஸ்கந்தகுரோ
உன்னையன்றி இவ்வுலகில் ஒன்றுமில்லை என்றுணர்ந்தேன்
நன்கறிந்து கொண்டேன் நானும் உனதருளால் ...... 290

விட்டிட மாட்டேன் கந்தா வீட தருள்வீரே
நடுநெற்றித் தானத்து நானுனைத் தியானிப்பேன்
ப்ரம்மமந்திரத்தைப் போதித்து வந்திடுவாய்
சுழுமுனை மார்க்கமாய் ஜோதியை காட்டிடுவாய்
சிவயோகியாக எனைச் செய்திடும் குருநாதா ...... 295

ஆசை அறுத்து அரனடியைக் காட்டிவிடும்
மெய்யடி யராக்கி மெய் வீட்டில் இருத்திவிடும்
கொங்கு நாட்டிலே கோயில் கொண்ட ஸ்கந்தகுரோ
கொல்லிமலை மேலே குமரகுரு வானவனே
கஞ்சமலை சித்தர் போற்றும் ஸ்கந்தகிரி குருநாதா ...... 300

கருவூரார் போற்றும் காங்கேயா கந்தகுரோ
மருதமலைச் சித்தன் மகிழ்ந்துபணி பரமகுரோ
சென்னிமலைக் குமரா சித்தர்க்கு அருள்வோனே
சிவவாக்கியர் சித்தர் உனைச் சிவன் மலையில் போற்றுவரே
பழனியில் போகருமே பாரோர் வாழப் ப்ரதிஷ்டை செய்திட்டார் ...... 305

புலிப்பாணி சித்தர்களால் புடை சூழ்ந்த குமரகுரோ
கொங்கில் மலிந்திட்ட ஸ்கந்த குருநாதா
கள்ளம் கபடமற்ற வெள்ளை உள்ளம் அருள்வீரே
கற்றவர்களோடு என்னைக் களிப்புறச் செய்திடுமே
உலகெங்கும் நிறைந்திருந்தும் கந்தகுரு உள்ளஇடம் ...... 310

ஸ்கந்தகிரி என்பதை தான் கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்
நால்வர் அருணகிரி நவமிரண்டு சித்தர்களும்
பக்தர்களும் போற்றும் பழநிமலை முருகா கேள்
கொங்குதேசத்தில் குன்றுதோறும் குடிகொண்டோய்
சீலம் நிறைந்த சேலம்மா நகரத்தில் ...... 315

கன்னிமார் ஓடையின்மேல் ஸ்கந்தகிரி அதனில்
ஸ்கந்தாஸ் ரமத்தினிலே ஞானஸ்கந்த சத்குருவாய்
அமர்ந்திருக்கும் ஜோதியே ஆதிமூல மானகுரோ
அயர்ச்சியை நீக்கிடுவாய் என் தளர்ச்சியை அகற்றிடுவாய்
சுகவனேசன் மகனே சுப்ரமண்ய ஜோதியே ...... 320


பேரின்ப மகிழ்ச்சியையும் பெருகிடச் செய்திடப்பா
பரமானந்தமதில் எனை மறக்க பாலிப்பாய்
மால் மருகா வள்ளி மணவாளா ஸ்கந்தகுரோ
சிவகுமரா உன்கோயில் ஸ்கந்தகிரி என்றுணர்ந்தேன்
ஜோதிப்பிழம்பான சுந்தரனே பழனியப்பா ...... 325

சிவஞானப் பழமான ஸ்கந்தகுருநாதா
பழம் நீ என்றதினால் பழனிமலை யிருந்தாயோ
திருவாவினன் குடியில் திருமுருகன் ஆனாயோ
குமரா முருகா குருகுகா வேலவனே
அகத்தியர்க்குத் தந்து ஆட்கொண்டாய் தமிழகத்தை ...... 330

கலியுக வரதனென்று கலசமுனி உனைப்புகழ்ந்தான்
ஒளவைக்கு அருள் செய்த அறுமுகவா ஸ்கந்தகுரோ
ஒழுக்கமொடு கருணையையும் தவத்தையும் தந்தருள்வாய்
போகருக்கருள் செய்த புவன சுந்தரனே
தண்டபாணித் தெய்வமே தடுத்தாட் கொண்டிடப்பா ...... 335

ஆண்டிக் கோலத்தில் அணைத்திடுவாய் தண்டுடனே
தெய்வங்கள் போற்றிடும் தண்டாயுத ஜோதியே
ஸ்கந்தகிரி மேலே ஸ்கந்தகிரி ஜோதி யானவனே
கடைக்கண்ணால் பார்த்திடப்பா கருணையுள்ள ஸ்கந்தகுரோ
ஏழையைக் காத்திடப்பா ஏத்துகிறேன் உன்நாமம் ...... 340

உன்னை அன்றி வேறொன்றை ஒருபோதும் நம்புகிலேன்
கண்கண்ட தெய்வமே கலியுக வரதனே
கந்தன் என்ற பேர்சொன்னால் கடிதாக நோய்தீரும்
புவனேஸ்வரி மைந்தா போற்றினேன் திருவடியை
திருவடியை நம்பினேன் திருவடி சாட்சியாக ...... 345

புவனமாதா மைந்தனே புண்ணிய மூர்த்தியே கேள்
நின் நாமம் ஏத்துவதே நான் செய்யும் தவமாகும்
நாத்தழும் பேறவே ஏத்திடுவேன் நின்நாமம்
முருகா முருகாவென்றே மூச்செல்லாம் விட்டிடுவேன்
உள்ளும் புறமும் ஒருமுருகனையே காண்பேன் ...... 350

அங்கிங்கு எனாதபடி எங்குமே முருகனப்பா
முருகன் இலாவிட்டால் மூவுலக மேதப்பா
அப்பப்பா முருகாநின் அருளே உலகமப்பா
அருளெல்லாம் முருகன் அன்பெல்லாம் முருகன்
ஸ்தாவர ஜங்கமாய் ஸ்கந்தனாய் அருவுருவாய் ...... 355

முருகனாய் முதல்வனாய் ஆனவன் ஸ்கந்தகுரு
ஸ்கந்தாஸ்ரமம் இருக்கும் ஸ்கந்தகுரு அடிபற்றிச்
சரணம் அடைந்தவர்கள் சாயுஜ்யம் பெற்றிடுவர்
சத்தியம் சொல்கின்றேன் சந்தேக மில்லையப்பா
வேதங்கள் போற்றிடும் வடிவேலன் முருகனை நீ ...... 360

சந்தேகம் இல்லாமல் சத்தியமாய் நம்பிடுவாய்

சத்திய மானதெய்வம் ஸ்கந்த குருநாதன்
சத்தியம் காணவே நீ சத்தியமாய் நம்பிடப்பா
சத்தியம் வேறல்ல ஸ்கந்தகுரு வேறல்ல
ஸ்கந்தகுருவே சத்தியம் சத்தியமே ஸ்கந்தகுரு ...... 365

சத்தியமாய்ச் சொன்னதை சத்தியமாய் நம்பியே நீ
சத்தியமாய் ஞானமாய் சதானந்த மாகிவிடு
அழிவற்ற ப்ரம்மமாய் ஆக்கி விடுவான் முருகன்
திருமறைகள் திருமுறைகள் செப்புவதும் இதுவேதான்
ஸ்கந்தகுரு கவசமதை சொந்தமாக்கிக் கொண்டு நீ ...... 370

பொருளுணர்ந்து ஏத்திடப்பா பொல்லாப்பு வினையகலும்
பிறவிப் பிணி அகலும் ப்ரம்மானந்த முண்டு
இம்மையிலும் மறுமையிலும் இமையருனைப் போற்றிடுவர்
மூவருமே முன்னிற்பர் யாவருமே பூஜிப்பர்
அனுதினமும் கவசத்தை அன்புடன் ஏத்திடப்பா ...... 375

சிரத்தா பக்தியுடன் சிந்தையொன்றிச் செப்பிடப்பா
கவலைய கன்றிடுமே கந்தனருள் பொங்கிடுமே
பிறப்பும் இறப்பும் பிணிகளும் தொலைந்திடுமே
கந்தன் கவசமே கவசமென்று உணர்ந்திடுவாய்
கவசம் ஏத்துவீரேல் கலியை ஜெயித்திடலாம் ...... 380

கலி என்ற அரக்கனைக் கவசம் விரட்டிடுமே
சொன்னபடிச் செய்து சுகமடைவாய் மனமே நீ
ஸ்கந்தகுரு கவசத்தைக் கருத்தூன்றி ஏத்துவோர்க்கு
அஷ்ட ஐஸ்வர்யம் தரும் அந்தமில்லா இன்பம் தரும்
ஆல்போல் தழைத்திடுவன் அறுகுபோல் வேரோடிடுவன் ...... 385

வாழையடி வாழையைப்போல் வம்சமதைப் பெற்றிடுவன்
பதினாறும் பெற்றுப் பல்லாண்டு வாழ்ந்திடுவன்
சாந்தியும் செளக்யமும் சர்வமங்களமும் பெருகிடுமே
ஸ்கந்தகுரு கவசமிதை கருத்திருத்தி ஏற்றுவீரேல்
கர்வம் காமக்குரோதம் கலிதோஷம் அகற்றுவிக்கும் ...... 390

முன்செய்த வினையகன்று முருகனருள் கிட்டிவிடும்
அறம் பொருள் இன்பம் வீடு அதிசுலபமாய்க் கிட்டும்
ஆசாரம் சீலமுடன் ஆதிநேம நிஷ்டையுடன்
கள்ளமிலா உள்ளத்தோடு கந்தகுரு கவசம் தன்னை
சிரத்தா பக்தியுடன் சிவகுமரனை நினைத்துப் ...... 395

பாராயணம் செய்வீரேல் பார்க்கலாம் கந்தனையும்
கந்தகுரு கவசமிதை மண்டலம் நிஷ்டையுடன்
பகலிரவு பாராமல் ஒருமனதாய் பகருவீரேல்
திருமுருகன் வேல்கொண்டு திக்குகள் தோறும் நின்று
காத்திடுவான் கந்தகுரு கவலை இல்லை நிச்சயமாய் ...... 400

ஞான ஸ்கந்தனின் திருவடியை நம்பியே நீ
கந்தகுரு கவசம் தன்னை ஓதுவதே தவம் எனவே
உணர்ந்துகொண்டு ஓதுவையேல் உனக்குப் பெரிதான
இகபரசுகம் உண்டாம் எந்நாளும் துன்பம் இல்லை
துன்பம் அகன்று விடும் தொந்திரைகள் நீங்கிவிடும் ...... 405

இன்பம் பெருகிவிடும் இஷ்டசித்தி கூடிவிடும்
பிறவிப்பிணி அகற்றி ப்ரம்ம நிஷ்டையும் தந்து
காத்து ரக்ஷிக்கும் கந்தகுரு கவசமுமே
கவலையை விட்டுநீ கந்தகுரு கவசமிதை
இருந்த படியிருந்து ஏற்றிவிடு ஏற்றினால் ...... 410

தெய்வங்கள் தேவர்கள் சித்தர்கள் பக்தர்கள்
போற்றிடுவர் ஏவலுமே புரிந்திடுவர் நிச்சயமாய்
ஸ்கந்தகுரு கவசம் சம்சயப் பேயோட்டும்
அஞ்ஞானமும் அகற்றி அருள் ஒளியும் காட்டும்
ஞான ஸ்கந்தகுரு நானென்றும் முன்நிற்பன் ...... 415

உள்ளொளியாய் இருந்து உன்னில் அவனாக்கிடுவன்
தன்னில் உனைக்காட்டி உன்னில் தனைக்காட்டி
எங்கும் தனைக்காட்டி எங்குமுனைக் காட்டிடுவான்
ஸ்கந்தஜோதி யானகந்தன் கந்தகிரி இருந்து
தண்டாயுதம் தாங்கித் தருகின்றான் காட்சியுமே ...... 420

கந்தன் புகழ் பாடக் கந்தகிரி வாருமினே
கந்தகிரி வந்து நிதம் கண்டுய்ம்மின் ஜகத்தீரே
கலிதோஷம் அகற்றுவிக்கும் கந்தகுரு கவசமிதை
பாராயணம் செய்து பாரில் புகழ் பெறுமின்
ஸ்கந்தகுரு கவச பலன் பற்றறுத்துப் பரம்கொடுக்கும் ...... 425

ஒருதரம் கவசம் ஓதின் உள்ளழுக்குப் போகும்
இருதரம் ஏற்றுவீரேல் எண்ணியதெல்லாம் கிட்டும்
மூன்றுதரம் ஓதின் முன்னிற்பன் ஸ்கந்தகுரு
நான்குமுறை ஓதி தினம் நல்லவரம் பெறுவீர்
ஐந்துமுறை தினமோதி பஞ்சாட்சரம் பெற்று ...... 430

ஆறுமுறை யோதி ஆறுதலைப் பெற்றிடுவீர்
ஏழு முறை தினம் ஓதின் எல்லாம் வசமாகும்
எட்டுமுறை ஏத்தில் அட்டமா சித்திகிட்டும்
ஒன்பதுதரம் ஓதின் மரணபயம் ஒழியும்
பத்துதரம் ஓதி நித்தம் பற்றறுத்து வாழ்வீரே ...... 435

கன்னிமார் ஓடையிலே நீராடி நீறுபூசிக்
கந்தகுரு கவசம் ஓதி கந்தகிரி ஏறிவிட்டால்
முந்தை வினை எல்லாம் கந்தன் அகற்றிடுவான்
நிந்தைகள் நீங்கிவிடும் நிஷ்டையுமே கைகூடும்
கன்னிமார் ஓடை நீரை கைகளில் நீ எடுத்துக் ...... 440

கந்தன் என்ற மந்திரத்தைக் கண்மூடி உருவேற்றி
உச்சியிலும் தெளித்து உட்கொண்டு விட்டிட்டால் உன்
சித்த மலம் அகன்று சித்த சுத்தியும் கொடுக்கும்
கன்னிமார் தேவிகளைக் கன்னிமார் ஓடையிலே
கண்டு வழிபட்டு கந்தகிரி ஏறிடுவீர் ...... 445

கந்தகிரி ஏறி ஞான ஸ்கந்தகுரு கவசமிதைப்
பாராயணம் செய்துலகில் பாக்கியமெல்லாம் பெற்றுடுவீர். ...... 447

ஸ்ரீ கந்த குரு கவசம் முற்றிற்று.
Read more ...