சத்திய நாதர் என்ற ஞானச் சித்தர் பாடல்

Saturday, May 19, 2012
சத்திய நாதர் என்ற
ஞானச் சித்தர் பாடல் 


     நவநாத சித்தர்களுள் ஒருவரான சத்தியநாதரே ஞான சித்தராக, சித்தர்
இலக்கியங்களில் குறிப்பிடப்  பெறுகின்றார். 35 கண்ணிகள் கொண்ட இவரது
ஞான சித்தர்  பாடல் மனோண்மணி துதியாகக் காணப்படுவதால் இவர் சக்தி 
வழிபாட்டில் மனம் செலுத்தியவரென்பது புலனாகிறது.

நிலையில்லாப் பொய்க்கூட்டை நிச்சயங் கொண்டாசை
வலையிலகப் பட்டுழன்று வாடித்திரி கிறண்டி

என்ற கண்ணியில்  உலக மாயையின் தத்துவம் விவரிக்கப் படுகின்றது. இந்த
உடல்   அழகானதா?    அழியாததா?    வலிமையானதா?    இல்லையே.
அப்படியிருக்க  இதனை  நித்தியமென்று  கருதி  என்னவெல்லாம் ஆட்டம்
போடுகிறது?  யாரை யாரையெல்லாம்  மாய்த்துத் தள்ளுகிறது? கண்ணதாசன்
சொல்வாரே,  இன்றைக்கு செத்த பிணத்திற்காக நாளைக்கு சாகும் பிணங்கள்
அழகின்றனவே  என்று.  அதுபோல  மற்றவை  அழிவில் அவரது அழிவும்
உண்டு என்று ஏன் எண்ணிப் பார்க்க மறந்து விடுகின்றனர்.

     நீரிற்  குமிழியைப்  போல்   நில்லாமல்  மறைந்து  விடுகின்ற  இந்த
உடம்பினை  ஒருகாலத்தில் மெய்யென்று எண்ணியிருந்தேன். பிறகு ஒருநாள்
தீர  விசாரிக்கையில்  அஃது பொய்யென்று உணர்ந்து கொண்டேன். அடடா,
நான்

எத்தனை  பெரிய  அறிவீலி  என்று என்னை நானே நொந்து கொள்கிறேன்
என்று 19வது கண்ணியில் வருந்துகின்றார்.

    இந்த ஞான சித்தர் மனோண்மணி அம்பிகையை வழிபட்டபின் உண்மை
ஞானம்    கைவரப்    பெற்றவராய்    மாறியதைத்    தம்    கண்ணியில்
தெளிவாக்குகின்றார்.

தாயே பகவதியே தற்பரையே அற்புதமே
நேயமுடன் ஞான நெறியையறி விப்பாயே

என்று வேண்டியதற்கு அவள் அருள் புரிந்தமையை
சத்ததிதி னுள்ளே சதாசிவத்தைத் தானறிய
உத்தமியே நின்னருளென் றோர்த்தறிந்து கொண்டேண்டி

என்று  உண்மை  நிலையை  உணர்ந்து  கொண்டமையை உணர்த்துகின்றார்
ஞான சித்தர்.
Read more ...
Saturday, May 19, 2012

     சமுதாயத்தில்  புரையோடி விட்டிருக்கும்  மூடப் பழக்கங்களைச் சாடும்
வித்தியாசமான   சித்தராக   சிவவாக்கியர்  காட்சி   தருகின்றார்.   ஆசார,
அனுஷ்டானங்களைக்  கடைபிடிக்கிறேன்  பேர்வழி என்று தேவையற்ற மூடப்
பழக்கங்களில்  மூழ்கித்  தவிக்கும்   மூடர்களைக்   கரையேறி   உய்யுமாறு
சிவவாக்கியர் அறிவுறுத்துகின்றார்.

     “பூசைபூசை யென்றுநீர் பூசைசெய்யும் பேதைகாள்
     பூசையுன்ன தன்னிலே பூசைகொண்ட தெவ்விடம்
     ஆதிபூசை கொண்டதோ வனாதிபூசை கொண்டதோ
     ஏதுபூசை கொண்டதோ வின்னதென் றியம்புமே” (37)

என்று உண்மை பூசை பற்றியும்,
     “வாயிலே குடித்தநீரை எச்சிலென்று சொல்லுறீர்
     வாயிலே குதப்புவேத மெனப்படக் கடவதோ
     வாயிலெச்சில் போக வென்று நீர்தனைக் குடிப்பீர்காள்
     வாயிலெடச்சில் போனவண்ணம் வந்திருந்து சொல்லுமே”

என்று  எச்சில்  படாமல்  பூசை  செய்ய வேண்டும் என்று மடிசாமிதனமாகப்
பேசும் அறிவிலிக்கு எச்சிலைப் பற்றி விளக்கம் தருகின்றார்.


 வாயினால் ஓதப்படுவதால் வேதத்திலுள்ள  மந்திரங்களும் எச்சில், பசு
மடியில் கன்று குடித்த  பால் எச்சில்,  மாதிருந்த விந்து எச்சில், மதியுமெச்சி
லொளியுமெச்சில்  மோதகங்களான  தெச்சில் பூதலங்களேழும் எச்சில் எதில்
எச்சிலில்லை? என்று கேள்வி எழுப்புகின்றார்.

     புலால்புலால் புலாலதென்று பேதமைகள் பேசுறீர்
     புலாலைவிட்டு மெம்பிரான் பிரிந்திருந்த தெங்ஙனே
     புலாலுமாய் பிதற்றுமாய் பேருலாவுந் தானுமாய்
     புலாலிலே முளைத் தெழுந்த பித்தர்காணு மத்தனே” (149)

என்று புலால் மறுத்தலை எள்ளி நகையாடுகின்றார். இன்னும்,
     “மீனிறைச்சி தின்றதில்லை யன்றுமின்றும் வேதியர்
     மீனிருக்கு நீரலோ மூழ்வதுங் குடிப்பதும்
     மானிறைச்சி தின்றதில்லை யன்றுமின்றும் வேதியர்
     மானுரித்த தோலலோ மார்புநூல ணிவதும்” (159)

     “மாட்டிறைச்சி தின்றதில்லை யன்றுமின்றும் வேதியர்” (160)
என்ற  பாடலில்  மாட்டிறைச்சி   தின்பது  பாவம்   என்று  அருவறுக்கும்
வேதியர்களே  மாட்டிறைச்சிதான்  உரமாக காய்கறிக்கிடுவதை அறிவீர்களா?
ஆட்டிறைச்சி  தின்றதில்லை என்கிறீரே, உங்கள் யாக வேள்வியில் ஆகுதி
செய்யப் படுவதும், நெய்யாய்  இடுவதும் எது  என்பதை யோசிப் பீர்களாக
என்கிறார்.

Read more ...

பெரிய ஞானக்கோவை

Saturday, May 19, 2012
கடவுளின் பெயரால் விக்கிரகங்கள் செய்து வைத்து வணங்குவதும்,
அவைகளுக்குத்  தினசரி பூசைகள், திருவிழாக்கள் செய்வதும் தொன்று
தொட்டு  நடந்து  வருபவை.  இவைகளையெல்லாம்  மூடப்பழக்கங்கள்
என்று  சாடுவதென்றால்  எவ்வளவு  துணிவு  வேண்டும்?  புனிதமான
அடிப்படைக்  கொள்கையையே  ஆட்டிப்  பார்ப்பதென்றால் அதனை
அறிந்து சொல்லும் பக்குவமும் வேண்டுமல்லவா?

     இங்கு உருவ வழிபாடு தவறா என்ற வினாவுக்கும் ஒரு விளக்கம்
தேவைப்படுகின்றது.

     ஆழ்ந்த அறிவில்லாத பாமர மக்களை ஒரு கட்டுக்கோப்பிற்குள்
கொண்டுவர,  நல்வழிப்படுத்த  உருவ  வழிபாடு  தேவைப்படுகின்றது.
சட்டத்துக்கும்,  சான்றோர்  உரைகளுக்கும்  கட்டுப்படாத   சிந்தைத்
தெளிவில்லாத  மனிதர்களுக்கு,  ஒரு  வடிவத்தைக்  காட்டி இதுதான்
கடவுள்,  இவர்  உனது பாவச் செயல்களைக் கண்காணித்து தண்டனை
தரக்  காத்திருக்கின்றார். ஆகவே  தவறு  செய்யாதே என்று கண்டிப்
போமானால்  அந்தக்  கட்டளைக்கு அவர்கள் பணிகிறார்கள். மனதில்
கடவுள்  கட்டளையை மீறி நடக்கக் கூடாது என்றும் நினைக்கிறார்கள்;
கடவுளின் கட்டளை என்று  சொல்லப்படும் வார்த்தைகளுக்குக் கட்டுப்
படுகிறார்கள். அதனால் உருவ வழிபாடும் ஒரு வகையில்



பயனாகிறது.  பலரை  நல்வழிப்படுத்த  உதவுகிறது. இதனால் உருவ வழிபாடு
தவறல்ல என்று ஆத்திகர்கள் வாதிடுவர்.

     ஆனால், அறிவார்ந்த சித்தர்களோ இக்கருத்தை ஏற்றுக்கொள்வதில்லை.
உருவ  வழிபாடு ஒரு  மூட நம்பிக்கை. அதனால் மக்களிடம் அறிவு மயக்கம்
ஏற்படுகின்றது. எங்கும் நிறைந்த கடவுளைக் கல்லில் இருப்பதாகவும், செம்பில்
இருப்பதாகவும்,   மண்ணில்  இருப்பதாகவும்,    மரத்தில்   இருப்பதாகவும்,
உருவமைத்துக்    காட்டுவது    கடவுளையே   அவமதிப்பதாகும்   என்று
வாதிடுகின்றனர்.

     சித்தர்களின்  இந்தக்  கருத்தையொட்டியே சிவவாக்கியரும் மேற்கண்ட
வாறு  உருவ வழிபாட்டை எள்ளி நகையாடினார். கல்லில் கடவுளின் வடிவம்
செய்து  அதைப்  பல  பெயர்களால்  அழைப்பது  அறிவின்மை;  அறிவற்ற
மூடர்கள்தாம்  இவ்விதம்  செய்வார்கள்.   உலகைப்   படைத்துக்   காத்து,
அழிக்கவும்  வல்ல  ஒரு  பொருள்  கல்லிலா  இருக்கிறது? இல்லை அந்தக்
கடவுளின்  வடிவம்  உள்ளத்தில் மட்டுமே இருக்கிறது. அதனை உள்ளத்தால்
அல்லவோ வழிபட வேண்டும் என்று அறிவுரை கூறுகின்றார்.

     பண்ணிவைத்த கல்லையும் பழம் பொருளது என்றுநீர்
     எண்ணம் உற்றும் என்னபேர் உரைக்கின்றீர்கள் ஏழைகாள்
     பண்ணவும் படைக்கவும் படைத்துவைத்து அளிக்கவும்
     ஒண்ணும் ஆகி உலகு அளித்த ஒன்றை நெஞ்சில் உன்னுமே

     கல்லுருவம்  நம்மால்  செய்து  வைக்கப்பட்டது.  அதைப் பழமையான
பொருள்,  அழியாத இறை என்று எண்ணுகிறீர்கள். அதற்கு என்னென்னமோ
பேர் சொல்லுகிறீர்கள்.  உங்கள் மனதில்  தோன்றும்  பெயர்களையெல்லாம்
இட்டு அழைக்கின்றீர்கள்.  உங்களின்  அறியாமை  காரணமாகத்தான் இப்படி
யெல்லாம் கடவுளின் பெயரைக் கல்லுக்கு வைத்து



அழைக்கின்றீர்கள். இந்த உலகைப் படைத்த ஒன்று எல்லாவற்றையும் செய்ய
வல்லது;  உலகையும்,  உலகப்  பொருள்களையும்  படைக்க  வல்லது. தாம்
படைத்த  பொருளை  அறியாமல்  வைத்திருக்கவும்  காப்பாற்றவும் வல்லது.
அதுமட்டுமல்ல; அவைகளைத் தேவைப்படாத பொழுது அழிக்கவும் வல்லது.
இப்படி படைத்து, காத்து, அழிக்கும் பரம்பொருளை நீங்கள் கல்லிலே காண
இயலாது.  உங்கள் நெஞ்சினில் மட்டுமே உணர முடியும். மனதில் மட்டுமே
உணர முடியும் என்று உண்மையை உரைக்கின்றார் சிவவாக்கியர்.

     இதில்  எங்கும்  நிறைந்த  கடவுளை உருவ வழிபாட்டின் மூலம் வழி
படுவது  தவறு  என்றும், அப்படி  வழிபடுபவர்கள்  அறியாமையை உடைய
ஏழைகள் என்றும் சாடுகின்றார்.

     உருவ வழிபாட்டையே மறுக்கும் சிவவாக்கியர் அவ்வுருவ வழிபாட்டின்
பெயரால் நடைபெறும் திருவிழாக்களை மட்டும் ஏற்றுக்கொள்வாரா என்ன?

     “ஊரில் உள்ள மனிதர்காள் ஒருமனதாய்க் கூடியே
     தேரிலே வடத்தை விட்டு செம்பை வைத்து இழுக்கின்றீர்
     ஆரினாலும் அறியொணாத ஆதிசித்த நாதரை
     பேதையான மனிதர் பண்ணும் புரளி பாரும் பாருமே”

     ஊரிலே  வாழும்  பெரிய  மனிதர்களே, நீங்கள் உங்களுக்குள் உள்ள
கருத்து  வேற்றுமைகளைக்  களைந்து ஒரே மனதாக நின்று பெரிய தேரினை
அலங்காரம் செய்து அதில் செப்புச் சிலையை வைத்து, அத்தேரின் வடத்தை
இழுக்கிறீர்கள்.   ஒரு   சிறிய  உருவத்திற்கு  இவ்வளவு  பெரிய   தேரா?
நூற்றுக்கணக்கான  மக்கள்  உடல் வியர்வை சிந்தி, உள்ளம் வருந்தி இப்படி
இருப்பது  அறிவுடையமையாகுமா?  இதனால்  எவ்வளவு பொருள் விரயம்?
எவ்வளவு நேரம் வீணாகிறது?

  யாருக்கும்   புலனாகாத   கடவுள்  அறிவின்  வடிவானவர்.  அவரே
ஆதிசித்தநாதர்,  அவரை  சித்தத்தினால்  மட்டுமே அறிதல் கூடும். அப்படி
யிருக்கையில்  அவரை  வழிபட என்னவெல்லாமோ செய்கிறீர்களே! தேராம்,
திருவிழாவாம்,  கொட்டாம்,  முழக்காம் -  இவையெல்லாம்  வெறும் புரளி.
அறிவற்றவர்  செய்யும்   புரளி.  இதனை   அறிவுடைய  மக்களே  ஏற்றுக்
கொள்ளுங்கள் என்று அழைக்கிறார்.

     ஆனால்   அவரது   கொள்கையை    இவ்வுலக   மக்கள்  ஏற்றுக்
கொண்டார்களா என்பதுதான் விளங்காத புதிர்.

 
Read more ...

பெரிய ஞானக்கோவை

Saturday, May 19, 2012

1. சிவவாக்கியர் பாடல்

     சித்தர்  இலக்கியத்தில்  சிவவாக்கியர்  பாடலுக்குத்  தனி  மரியாதை
தரப்படுவதுண்டு,  காரணம்,   இவர்   பாடல்களில்   வழக்கமான   சித்தர்
கருத்துக்கான  யோகம்,  குண்டலினி,  நிலையாமை.  வாசி கருத்துக்களுடன்
புரட்சிகரமான  கருத்துக்களையும்  கூறுவதால் இவர் புரட்சிச் சித்தர் என்றும்
கூறப்படுகின்றார். சமுதாயப் புரட்சி செய்த இந்தச் சித்தர் ஆரம்ப காலங்களில்
நாத்திகராக  இருந்து  ஆத்திகராக  மாறினார்  என்பதை  இவரின்  பாடல்
கருத்துக்கள் புலப்படுத்துகின்றன. இதனையொட்டி  இவர் முதலில் நாத்திகராக
இருந்து பிறகு சைவராகி சிவவாக்கியரானார் என்றும்; பிறகு வீர வைணவராக
மாறி திருமழிசை ஆழ்வாரானார் என்றும் கூறுவதுண்டு.

     சிவவாக்கியரின்  பாடல்களும்  திருமழிசை  ஆழ்வார்   பாடல்களும்
சந்தத்தில்  மட்டுமே  ஓரளவு  ஒத்துப்  போவதாலும் இவர் பாடல் சாயலில்
ஏனைய சித்தர்

பாடல்களும் இருப்பதால் இக்கருத்து ஏற்றுக்கொள்ளுமாறு இல்லை.

 விக்கிரக ஆராதனை

     சிவவாக்கியர் பாடல்களில் விக்கிரக ஆராதனை வெகுவாகப் பழிக்கப்
படுகின்றது.
நட்டகல்லைத் தெய்வமென்று நாலுபுஷ்பந் சாத்தியே
சுற்றிவந்து முணமுணென்று சொல்லு மந்திரம் ஏதடா
நட்டகல்லும் பேசுமோ நாதனுள் ளிருக்கையில்
சுட்டசட்டி சட்டுவம் கறிச்சுவை அறியுமோ

     சுவை மிகுந்த உணவுப் பதார்த்தங்களைச் சமைத்த சட்டியானது. அந்த
உணவின்  ருசியை  உணர்ந்து  கொள்ளாதது  போலவே மனக்கோயிலினுள்
இறைவன்  இருப்பதை  அறியாமல்  வெறும் கல்லை  நட்டு வைத்து தெய்வ
மென்று  பெயரிட்டு  பூக்களாலும்  மந்திரங்களாலும்   வழிபாடு   செய்வது
அறியாமையே யாகும் என்கிறார்.
“ஓசையுள்ள கல்லைநீ உடைத்திரண்டாய் செய்துமே
வாசலிற் பதித்தகல்லை மழுங்கவே மிதிக்கின்றீர்
பூசனைக்கு வைத்த கல்லில் பூவும் நீரும் சாத்து கிறீர்
ஈசனுக்குகந்த கல்லெந்தக் கல்லு சொல்லுமே”

     நட்டு  வைத்த கல்லை  தெய்வம் என்று  நினைத்து அக்கல்லின் மேல்
மலர்களைச்  சாத்திவிட்டு அதைச் சுற்றிச் சுற்றி வருகிறீர்கள். மொண மொண
என்று ஏதோ மந்திரங்களையும்  சொல்லுகிறீர்கள். அந்த மந்திரத்தால் என்ன
பயன் என்று யோசித்துப் பார்த்தீர்களா? அட  மூடர்களே, கடவுள் என்பவர்
தனியாக வெளியில் இல்லை, உள்ளத்திலே இருக்கிறான். அப்படி இருக்கையில்
நட்ட கல்லைச் சுற்றி வந்தால் அது பேசுமோ?

  அடுப்பில் வைத்துச்  சுடப்பட்ட சட்டியும் அதனுள்ளே இருக்கும்
அகப்பையும்   அதில்   சமைக்கும்  உணவின்  ருசியை   அறியாதது
போலவே நீர் செய்யும் புற  வழிபாட்டினால் இறைவன் வெளித்தோன்ற
மாட்டார்.  இறைவனை உள்ளத்தால் மட்டுமே காண இயலும். அவனை
கல்லில்  காண  முடியும்   என்று   சொல்லுவது  வெறும்  பிதற்றலே
என்கிறார்.

 

Read more ...

சிவசித்தன்

Thursday, November 10, 2011
மனிதனை உணரும் நிலை நீ அறிய,
வாசியோகம் நீ அறி மானிடனே !

மனிதனை மாற்ற நீ நினைக்கிறாயா,
நீ வாழும் உலகில் அறிய கலை !

மனிதனே நீ உன்னை அறியும் கலைதான்
சிவசித்தனின் வாசியோக கலை அறியும் !

மனிதனே தன்னை அறியாமல் இறைவனை தேடாதே ,
உன்னை நீ அறிய என்னை படைத்தான்!

மனிதனே என்னை நீ யார் ? என்று அறிய
என் வாசியோக கலை அறி!

மனிதனே உண்மை உண்மையை தேடி அறியும்
நீ என்னை உணர்ந்தால் உன்மனதின் தடை நீ அறிவாய் !

மனிதனே உண்மையை உணர்ந்து அறி, அறிந்த பின்
படைத்தவன் தன்னையே பார்!

மனிதனே உண்மையை நீ உணர்ந்து அறிந்தது இல்லை ! அறிய வா
மனித உடலின் உள்ளிருக்கும் பத்தாம் அறிவையும் , இறைவனையும் அறிய வைக்கிறேன் !


மனிதனே அறியாத உலகில் , மனிதன் தேடி அலைகிறான் !
உலகிற்கு இந்தகலையை வெளிபடுத்த இறைவன் எனக்கு கட்டிய கருவியில் நீயும் ஒருவன் !

என்னை உணர்ந்து செயல் படு !!!

என்றும்
சிவசித்தன்
Read more ...

காப்பியங்களும் புராணங்களும்

Saturday, October 1, 2011
பிறவகை இலக்கியங்கள்

மேற்கண்ட காப்பியங்கள், புராணங்கள் தவிர இக்காலக்
கட்டத்தில் வேறு சில சிற்றிலக்கியங்களும், தோன்றின. அவை
சமயம் சார்ந்த நிலையிலும், சமயம்சாரா நிலையிலும் அடங்கும்.

சமயம் சார்ந்தவை

சமயம் சார்ந்த நிலையில் திருப்புகழ், திருஆனைக்காஉலா,
திருவாய்மொழி நூற்றந்தாதி, திருக்கலம்பகம் போன்றவை
உள்ளிட்ட பல நூல்களாகும்.
திருப்புகழ்

இதனைப் பாடியவர் அருணகிரிநாதர். சைவ இலக்கியங்களில்
திருப்புகழுக்குச் சிறப்பான இடம் உண்டு. பண்டைய ஆசிரியர்கள்
திருப்புகழ் பாடல்கள் 16,000 என்பர். தோன்றிய காலம் முதல்
திருப்புகழ் தமிழ் மக்களின் உள்ளத்தைக் கொள்ளை
கொண்டுவிட்டது.

திருப்புகழைக் கேட்கத் திருப்புகழைக் கற்கத்
திருப்புகழை நித்தந் தியானிக்கத் - திருப்புகழை
உற்றிருந்து கேட்பாருக் குற்ற வினையிரண்டும்
அற்றிருக்கத் தானே யறும்

நூலின் பெயர் திருப்புகழாய் அமைந்திருப்பதோடு மட்டுமன்றி,
நூலில் அமைந்துள்ள 1307 பாடல்கள் ஒவ்வொன்றுமே திருப்புகழ்
என்றே வழங்கப்படுகின்றன. இதுவே இதன் சிறப்பாகும். முருகப்
பெருமானின் பெருமைகளை இந்நூல் கூறுகிறது. இந்நூலில் சபாஷ்,
சலாம், ராவுத்தன் போன்ற முகமதியச் சொற்கள் கலந்திருப்பது
நோக்கத்தக்கது. அக்கால ஆட்சிப்போக்கினையும், மொழிப்
போக்கினையும் இது உணர்த்துகிறது. இதைப் போலவே அளவுக்கு
மீறிய வடசொற்களும் இதில் கலந்துள்ளன. இந்நூலாசிரியர் பாடிய
பிற நூல்கள் கந்தர் அலங்காரம், கந்தரனுபூதி,
திருஎழுகூற்றிருக்கை, கந்தரந்தாதி போன்றவையாகும்.
கல்வியில் குறைந்தவர்கள்கூட இவரது பாடல்களில் ஆர்வம்
செலுத்துவர். முருகனைப் போற்றும் பாடல்கள் இக்காலக்
கட்டத்தில் அதிகம் தோன்றியுள்ளன.
திருஆனைக்காஉலா

இந்நூலும் சமயம் சார்ந்த நூல்களில் ஒன்றாகும்.
ஆனைக்காவில் உள்ள வெண்ணாவலீசர் மீது பாடப்பெற்றது.
தலச்சிறப்பில் இங்குப் பேறு பெற்றவர்களின் செய்தி கூறப்பட்டுள்ளது.

இந்நூலைப் பாடியவர் காளமேகப்புலவர். நினைத்தவுடன்
தங்குதடையின்றி எப்பொருளைப் பற்றியும், எவ்விதமாகவும்
சாமர்த்தியமாகப் பாடும் ஆற்றல் இவருக்கு இருந்தது. கார்மேகம்
போல இவர் கவிதை மாரி பொழிந்தமை கண்ட பெரியோர்
இவரைக் காளமேகம் என்றனர். இந்நூலிலுள்ள கண்ணிகள் 461,
வெண்பாக்கள் 2 ஆகும். இந்நூல் சிறந்த பக்திச்சுவை கொண்டது.
இறைவனின் பெயரைக் கூறும் போது இவர் பயன்படுத்தும்
தொடர்கள் திருமுறைகளில் இவருக்கு உள்ள ஈடுபாட்டைக்
காட்டுகின்றன. இவர் இயற்றிய பிற நூல்கள் சித்திர மடல்,
சமுத்திர விலாசம் போன்றவை ஆகும்.
திருவாய்மொழி நூற்றந்தாதி

மணவாள முனிகளால் இயற்றப்பட்டது. இவர் பல
பிரபந்தங்கள் செய்தவர். முருகன் மீதான நூல்கள் எழ
அருணகிரிநாதர் காரணமாக இருந்தார். அதுபோல வைணவ
நூல்கள் இக்காலத்தில் எழுதப்பட இவரே முக்கிய காரணமாகும்.
நம்மாழ்வார் பாடிய திருவாய்மொழிப் பதிகங்கள் அனைத்தையும்
எடுத்து, பதிகத்துக்கு ஒரு வெண்பா வீதம் 100 வெண்பாக்கள்
பாடியுள்ளார். ஒவ்வொரு பதிகத்தின் முதற்பாட்டின்
முதற்சொல்லையும், கடைசிப்பாட்டின் கடைசிச் சொல்லையும் தாம்
பாடிய ஒவ்வொரு வெண்பாவுக்கும் முதலும் முடிவுமாக வைத்துப்
பாடியுள்ளார். இவருடைய பிற நூல்கள் உபதேச ரத்ன மாலை,
ஆர்த்திப் பிரபந்தம் போன்றவையாகும்.
திருக்கலம்பகம்

திருக்கலம்பகம் இக்காலத்தில் தோன்றிய சமண நூலாகும்.
இதன் ஆசிரியர் உதீசித்தேவர். இந்நூல் அருகனின் தோத்திர
நூலாகும். 110 பாடல்களையுடையது. கலம்பக இலக்கணங்கள்
கொண்டது. ஒரு தலம் குறித்துப் பாடப் பெறாமல் பொதுவாய்
அருகனைத் துதிக்கின்றபடியால், தலத்தைச் சுட்டியதாக வழங்காமல்
திருக்கலம்பகம் என்று பெயர்பெற்றது. நீயே சிவபிரான், நீயே
திருமால், நீயே பிரமன், நீயே முருகன், உனது சக்தியே அம்பிகை
எனப் பலவாறாக அருகனைப் போற்றிய வகையில் பாடல்கள்
உள்ளன. இக்காலக் கட்டத்தில் தோன்றிய பிற சமண நூல்கள்
ஆதிநாதர் பிள்ளைத் தமிழ், அனந்தகவி உரை
போன்றவையாகும்.

சமயம் சாராதவை

சமயம் சாராத நூல்களாக இக்காலக் கட்டத்தில் தோன்றியவை
வருணகுலாதித்தன் மடல், சித்திர மடல், கபிலரகவல்
போன்றவையாகும்.
வருணகுலாதித்தன் மடல்

96 வகைச் சிற்றிலக்கியங்களில் ஒன்றான மடல் வகையைச்
சார்ந்தது இந்த நூல். தலைவன் தான் காதலித்த தலைவியைப்
பெறாத நிலையில், அவளை அடைய, பனங்கருக்கால் குதிரை
போல் ஓர் ஊர்தி செய்து ஊர்தலே இந்நூலின் வடிவமாகும்.
நாகையில் வாழ்ந்த வள்ளல் மீது காளிமுத்து என்னும் தாசி
பாடியது. சொல் நயம், அடுக்கு, எதுகை, மோனை, தொடை நயம்,
முரண் தொடை, மடக்கு முதலிய அனைத்துச் செய்யுள்
நலன்களையும் இம்மடலில் காணலாம். வருணனை, சந்த நடை
சிறப்பாக அமையப் பெற்றது. சிறப்பான இலக்கிய நடையும், சில
சமயம் பேச்சு நடையும் இதில் இழைந்து வருவதைக் காணலாம்.
சித்திர மடல்

இது, மடல் வகையைச் சார்ந்த மற்றொரு நூலாகும். 174
கண்ணிகளும், ஒரு காப்புச் செய்யுளும் உடையது. பின்னர்த்
தோன்றிய மடல் பாட்டுடைத் தலைவனின் சிறப்பை விரித்துக்
கூறும். அக்கூற்றுகள் இதில் காணப்படாதது இதன் சிறப்பம்சமாகும்.
மடல் மரபைக் கூறும் திருக்குறளைக் கேளுங்கள்

காமம் உழந்து வருந்தினார்க்கு ஏமம்
மடல் அல்லது இல்லை வலி
(1131)

(காமத்தால் துன்புற்று (காதலியின் அன்பு பெறாமல்)
வருந்தினவர்க்கு மடலூர்தல் அல்லாமல் வலிமையான துணை வேறு
எதுவும் இல்லை என்பது இதன் பொருளாகும்).
# கபிலரகவல்

கபிலர் அகவல், சமூகப்புரட்சியைக் கவிதை வடிவில்
வெளிப்படுத்தியது எனலாம். கடவுளுக்குச் சாதி வேற்றுமை
இல்லை, அவருடைய மெய்யடியார்களுக்கும், ஞானிகளுக்கும்
சாதிவேற்றுமை இல்லை என்பதை நாயன்மார்கள் மற்றும்
ஆழ்வார்களின் வரலாறுகள் காட்டுகின்றன. மக்களாய்ப்
பிறந்தோர் இரப்பவர்க்கு இட்டு, புலையும் (ஊன்), கொலையும்,
களவும் தவிர்த்து அறத்தில் நிற்பார்களாக என்று இவர்
அறிவுரை கூறுகிறார். எக்காலத்திலும் பொருந்தும் வகையில்
கபிலரகவல் கூறும் அறிவுரையைக் கொஞ்சம் கேளுங்கள்:

குலமு மொன்றே குடியு மொன்றே
இறப்பு மொன்றே பிறப்பு மொன்றே

இதைப் போலவே சாதியால் உயர்வு கூறுவோரைக்
கண்டிக்கும் மற்றொரு நூல் பாய்ச்சலூர்ப்பதிகம் எனப்படும்.
அது ஒரு நாடோடிப்பாடல் ஆகும்.
Read more ...

காப்பியங்களும் புராணங்களும்

Saturday, October 1, 2011
காப்பியங்களும் புராணங்களும்

இக்காலக் கட்டத்தில் பல காப்பியங்களும், புராணங்களும்
தோன்றின. அரிச்சந்திர புராணம் , உதயண குமார காவியம்,
காதம்பரி போன்றவை இக்காலத்தில் தோன்றிய குறிப்பிடத்தக்க
இலக்கியங்களாகும்.

காப்பியங்கள்

பெருங்கதையில் இடம் பெற்ற உதயணன் பற்றிய ஒரு
காப்பியமும், காதம்பரி போன்ற மொழி பெயர்ப்புக் காப்பியங்களும்
தோன்றின.
உதயண குமார காவியம்

இது, கௌசாம்பி நாட்டு மன்னனான உதயணனின்
வரலாற்றைக் கூறுகிறது. ஆறு காண்டப் பாகுபாடு உடையது. 369
விருத்தப்பாக்களைக் கொண்டது. பெருங்கதையின் முற்பகுதியும்,
பிற்பகுதியும் கிடைக்காமையால் உதயணனின் வரலாற்றை அறிய
இது உதவுகிறது. (பெருங்கதை காலத்தால் மிகவும் முற்பட்டது -
உதயணனின் வரலாற்றைக் கூறுவது). பெயர்தான் காவியமே தவிர,
இதில் காவிய இயல்புகள் இல்லை. பெருங்கதையை அடியொற்றியே
இக்காவியம் செல்கிறது. இக்காவியம் போற்றப்படாததற்குக் காரணம்
இதில் இலக்கியச் சுவை குறைந்திருப்பதே என்பது அறிஞர் கருத்து.
# காதம்பரி

மொழிபெயர்க்கப்பட்ட காவியங்களில் குறிப்பிடத்தக்க ஒரு
நூல், காதம்பரி. இது, கந்தர்வப்பெண் காதம்பரியை உச்சயினி
மன்னன் சந்திராபீடன் மணந்த வரலாற்றைக் கூறுகிறது.
ஹர்ஷருடைய சபையில் கவிஞராக இருந்த பட்டபாணர்
வடமொழியில் வசன நடையில் இதனை எழுதியுள்ளார். அதன்
மொழிபெயர்ப்பே இந்நூல். இதன் ஆசிரியர் ஆதிவராக கவி
ஆவார்.

புராணங்கள்

கி.பி 11 முதல் 15-ஆம் நூற்றாண்டு வரையிலான இக்காலக்
கட்டத்தில் புராணங்களும் தோன்றின. தமிழில் தோன்றிய
புராணங்களைப் புராணங்கள் எனவும், புராணக் காப்பியங்கள்
எனவும் இரு வகையாகப் பிரிக்கலாம். முதற்புராணம்
பெரியபுராணம் ஆகும். புராணம் என்பது பழமையான
நிகழ்வுகளைக் கதை வழியாகக் கூறும் முயற்சியாகும்.
இந்நூற்றாண்டில் தோன்றிய குறிப்பிடத்தக்கப் புராணங்களாக,
திருவாதவூரடிகள் புராணம், ஸ்ரீபுராணம் போன்றவற்றைக்
கூறலாம்.
அரிச்சந்திர புராணம்

அரிச்சந்திர புராணம் எனப்படும் அரிச்சந்திர சரித்திரம்,
தமிழ் மக்கள் நன்கு அறிந்த இதிகாசக் கிளைக் கதையாகும்.
இதனுடைய முதற்பதிப்பு இதனை அரிச்சந்திர சரிதம் எனக்
கூறுகிறது. இதனைப் பாடியவர் நல்லூர் வீரை ஆசு கவிராயர்.
நூலின் பாக்கள் சுவையுடையன. எடுத்துக்காட்டாக, அரிச்சந்திரன்
தன் மனைவியின் கழுத்தை வெட்ட வேண்டிய நேரத்தில்
கூறுவதாவது:

உலகுயிர்க்கெலாம் பசுபதி ஒருமுதல் ஆயின்
அலகில் சீர்உடை அவன்மொழி மறையெனின் அதன்கண்
இலகுஅறம் பலவற்றினும் வாய்மை ஈடுஇலதேல்
விலகு உருமல் அவ் வாய்மையை விரதமாக்கொளின்யான்

(அரிச்சந்திரபுராணம், மயான காண்டம், 135)்

(பசுபதி = உயிர்களின் தலைவனாகிய சிவபெருமான்; ஒருமுதல் = தனிப்பெருந்தெய்வம்; அலகில் - அலகுஇல் = அளவில்லாத; இலகு = விளங்கும்; வாய்மை = உண்மை)

சிவபெருமான்தான் முழுமுதற் கடவுள் என்பதும்,
அப்பெருமான் உரைத்ததே வேதம் என்பதும், அவ்வேதத்தில்
கூறப்பட்டுள்ள அறங்களில் இணையற்றது, உயர்ந்தது உண்மை
பேசுதலே என்பதும், அந்த அறத்தை நான் இடைவிடாமல்
கடைப்பிடிக்கிறேன் என்பதும் உண்மையானால், இவ்வாள்
இவளைக் கொல்லாது இருக்கட்டும் என்பது இதன் பொருள்.
# திருவாதவூரடிகள் புராணம்

கடவுள் மாமுனிவர் இயற்றிய திருவாதவூரடிகள் புராணம்
545 செய்யுட்களைக் கொண்டது. அளவில் இது சிறிய நூல்.
சுந்தரரும், சேக்கிழாரும் மாணிக்கவாசகரைப் பாடவில்லை. பின்னர்
வந்த கடவுள் மாமுனிவர் அக்குறையைச் சரி செய்யும் வகையில்
மாணிக்கவாசகர் வரலாற்றைப் பாடியதாகக் கொள்ளலாம். இதன்
முக்கியச் சிறப்பு இதுவேயாகும். மந்திரிச்சருக்கம், திருப்பெருந்துறைச்
சருக்கம், குதிரையிட்ட சருக்கம், மண் சுமந்த சருக்கம், திருவம்பலச்
சருக்கம், புத்தரை வாதில் வென்ற சருக்கம், திருவடி பெற்ற
சருக்கம் என்ற பல பகுதிகள் இப்புராணத்தில் அடங்கியுள்ளன.
சைவசித்தாந்தக் கருத்துகள் இதில் அதிகமாகக் காணப்படுகின்றன.
இந்நூல் ஒரு தலபுராணமே ஆயினும் மாணிக்கவாசகரின்
பெருமையைக் கூறுவதால் பெருமை பெறுகிறது எனலாம்.
# ஸ்ரீபுராணம்

இக்காலத்தில் தோன்றிய மற்றொரு சமணப்புராணமாகும். இது
மகாபுராண சங்கிரகத்தின் மொழிபெயர்ப்பாகும். இதன் ஆசிரியர்
பெயர் கிடைக்கவில்லை. இவர் வடமொழிப்புலமையும்,
தமிழ்ப்புலமையும் மிக்கவர் என்பது இந்நூல் மூலம் தெரிய வருகிறது.
இந்நூல் 23 தீர்த்தங்கரர்களின் வரலாற்றைக் கூறுகிறது. இராமாயண,
பாரத, பாகவதக் கதைகள் இதில் பல் வகையான வேறுபாடுகளுடன்
கூறப்பட்டுள்ளன. இந் நூல் மணிப்பிரவாள நடையில் எழுதப்பட்டது.
இது உரைநடையாக உள்ளது. கவிதைக்குரிய வருணனைகள்
இந்நூலில் சேர்க்கப்படவில்லை. சமண நூல்களில் இது அளவில்
பெரியது.

இக்காலக் கட்டத்தில் திருப்புத்தூர்க் கோயிலிலுள்ள
சிவபெருமானின் திருவிளையாடல்களைக் கூறும் ஓங்குகோயில்
புராணம் (கி.பி. 1484) எழுந்தது. இப்புராணம் தற்போது
கிடைக்கவில்லை.
Read more ...