கடவுள்

Thursday, November 25, 2010
ஞானத்தின் வடிவமான குரு ஒருவர் வலம் வந்தார். அவரது திருவோட்டில் ஒருவர் அன்னமிட்டார். அந்தச் அன்னத்தில் ஒரு நாய் வாய் வைத்து உண்டது. நாயின் முதுகில் ஞானி அமர்ந்தார். பாரம் தாங்காமல் நாய் திணறியது. இந்த செய்கையை ஊர் கூடிப் பார்த்தது. வெளியில் சென்றிருந்த சீடன் திரும்பினான். குருவின் செய்கை அவனுக்குத் திகைப்பைத் தந்தது!

“என்ன இது குருவே?” என்றான் அவன். “பிரமத்தில் ஒரு பிரம்மம், பிரமத்தை இட்டது. அதை ஒரு பிரம்மம் உண்டது. அந்த பிரம்மத்தின் மேல் இந்த பிரம்மம் அமர்ந்திருப்பதை, இத்தனை பிரம்மங்கள் கூடிப் பார்க்க, ‘என்ன இது?’ என்கிறது ஒரு பிரம்மம்!” என்று சிரித்தபடி சொன்னார் ஞானி. திருவோடும் பிரம்மம்; அன்னமும் பிரம்மம்; நாயும் பிரம்மம்; பார்த்த மக்களும் பிரம்மம்; கேட்ட சீடனும் பிரம்மம்; தானும் பிரம்மம்; என்ற ஞானியின் பார்வைதான் ஞானத்தின் உச்சம்.

· ஸ்ரீராமானுஜரைத் தேடி வந்த ஒருவன், “ஆண்டவனை அடையும் வழி என்ன?” என்றான். “மனிதர்கள் மீது அன்பு வைப்பதுதான் ஒரே வழி” என்றார் அந்த மகான்.

· ‘கடவுள் இல்லை’ என்று காலமெல்லாம் வாதித்த அமெரிக்க அறிஞர் இங்கர்சால், ‘கடவுள் இருந்தால் மன்னிக்கட்டும்’ என்று தனது நூலில் எழுதினார்.

· ‘உலகம் முழுவதும் கடவுள் இல்லை என்று சொன்னாலும், எனக்குக் கடவுள் என்றும் உண்டு’ என்றார் அண்ணல் காந்தி.

சக மனிதர்களிடம் இறக்கி வைக்க முடியாத இதயத்தின் பாரத்தை, ஒருவன்மேல் நம்பிக்கையோடு நாம் இறக்கி வைப்போம். அந்த நம்பிக்கைக்கு உரியவன் ஆண்டவனே. பாரம் இறங்கினால் சுமை குறையும். சுமை குறைந்தால் மனம் லேசாகும். மனம் லேசானால் வாழ்வின் ருசி வளரும். எல்லா உயிர்களிலும் இறைவனைக் காண்போம். அவற்றின் மீது அன்பு செய்வதே உண்மையான பக்தி வழிபாடு என்று உணர்ந்து கொள்வோம்.
Read more ...

பட்டினத்தார்

Thursday, November 25, 2010
*மலரில் உள்ள தேனை மட்டுமே தேனீ அருந்தும். சாதாரண ஈயோ பேதமில்லாமல் எதிலும் அமரும் சுபாவம் கொண்டது. அதுபோல நல்ல குடும்பத்தில் பிறந்தவர்கள் நல்ல செயல்களை மட்டுமே செய்வார்கள். ஒரு பொருளை நாம் விரும்பத் தொடங்கும்போதே, அதை ஒருநாள் வெறுக்கவும் வேண்டிவரும் என்ற உண்மையை நாம் உணர்வதில்லை. ஆனால், விரும்பும்போதே வெறுக்கவும் தெரிந்து கொண்டவர்கள் வீணான மனவருத்தங்களுக்கு ஆளாக நேர்வதில்லை.

ஆத்திரம் என்பது உள்ளத்தில் எழும்போது, அறிவு தன்னை திரையிட்டுக் கொள்ளும். ஆத்திரம் கொண்டவன் தன் ஆத்திரத்தை தீர்த்துக் கொள்வதை தடுப்பது என்பது அவ்வளவு எளிதான செயல் அல்ல.

ஆத்திரம் கொண்டவன் செய்யக் கூடாத செயல்களை புத்தியின்றி செய்ய தலைப்படுவான். அதனால், வாழ்நாள் முழுவதும் தான் செய்த பழிச்செயலை எண்ணி வருந்துவான். அதனால், ஆத்திரத்தை விடுத்து சாந்த குணத்தை பின்பற்றுங்கள்.

தீய குணம் கொண்டவர்கள் இறந்ததும் மீண்டும் இம்மண்ணில் உடனே பிறந்து விடுவார்கள். இறைவன் அம்மனிதர்களின் பாவ விமோசனத்திற்காக உடனே திருப்பி அனுப்பி விடுகிறான். வாழும் காலத்தில் நன்மையை செய்பவனே முக்தி அடைய தகுதியானவன்."
Read more ...

நந்திக்கலம்பகம்

Tuesday, November 23, 2010
கவிதைச் சுவை


நந்திக் கலம்பகம் சொற்சுவையும் பொருட்சுவையும் கற்பனை வளமும் மிக்கது. ‘ஊசல்’, மகளிர் மன்னனின் சிறப்பைப் பாடி ஊஞ்சல் ஆடுவது பற்றிய ஓர் உறுப்பு. அதில் இடம்பெற்றுள்ள பாடல் நந்திக் கலம்பகத்தின் கவிதைச் சுவைக்கு ஓர் எடுத்துக்காட்டாகத் திகழ்கிறது.


ஓடரிக்கண் மடநல்லீர்! ஆடாமோ ஊசல்

உத்தரியப் பட்டாட ஆடாமோ ஊசல்

ஆடகப்பூண் மின்னாட ஆடாமோ ஊசல்

அம்மென்மலர்க் குழல்சரிய ஆடாமோ ஊசல்

கூடலர்க்குத் தௌ¢ளாற்றில் விண்ணருளிச் செய்த

கோமுற்றப் படைநந்தி குவலய மார்த்தாண்டன்

காடவர்க்கு முன்தோன்றல் கைவேலைப்பாடிக்

காஞ்சிபுர மும்பாடி ஆடாமோ ஊசல்.

(பாடல், 29)


குருக்கோட்டையை நந்திவர்மன் வென்ற புறப்பொருளையும், அவன் மீது காதல் கொண்ட பெண் அவனது உலாவைப்பற்றிக் கூறும் புறப்பொருளையும் இணைத்துப் பாடிய பாடலைப் பாருங்கள்.


எனதே கலை வளையும் என்னதே; மன்னர்
சினவேறு செந்தனிக்கோன் நந்தி - இனவேழம்
கோமறுகிற் சீறிக் குருக்கோட்டை வென்றாடும்
பூமறுகிற் போகாப் பொழுது.

(பாடல், 2)


நந்தி பவனி வரும்போது அவனைப் பார்த்து ஏங்கும் பெண்ணின் மேகலையும் வளையும் அவள் மெலிவால் நெகிழ்ந்துவிடுகின்றன. அவன் பவனிவராத பொழுதுதான் அந்த அணிகள் அவளுக்குரியவையாக இருக்கின்றன என நயமாகப் பாடுகிறார் கவிஞர்.


நந்தியைப் பிரிந்து தவிக்கும் காதற்பெண்ணின் உருக்கத்தைக் கீழ்க்காணும் பாடலில் காணலாம்.


மங்கையர்கண் புனல்பொழிய மழைபொழியும் காலம்

மாரவேள் சிலைகுனிக்க மயில்குனிக்கும் காலம்

கொங்கைகளும் கொன்றைகளும் பொன்சொரியும் காலம்

கோகனக நகைமுல்லை முகைநகைக்கும் காலம்

செங்கை முகில் அனையகொடைச் செம்பொன்பெய் ஏகத்

தியாகியெனும் நந்தியருள் சேராத காலம்

அங்குயிரும் இங்குடலும் ஆனமழைக் காலம்

அவரொருவர் நாமொருவர் ஆனமழைக் காலம்.

(நந்திக்கலம்பகம், தனிப்பாடல், 11)


பிரிந்து சென்ற ஒரு தலைவன் தலைவியிடம் விரைந்து திரும்புகிறான். தேர் ஓடுவதாக அவனுக்குத் தெரியவில்லை. மனம் அவ்வளவு விரைகிறது. உயிரோ தலைவியிடம் முன்னமே சென்றுவிட்டது. ‘தேரில் வெறும் கூடுதான் வருகிறது’ என்று மேகத்திடம் சொல்லியனுப்புகிறான்.


ஓடுகின்ற மேகங்காள் ஓடாத தேரில்வெறும்
கூடுவருகு தென்று கூறுங்கோள் - நாடியே
நந்திசீ ராமனுடைய நன்னகரில் நன்னுதலைச்
சந்திச்சீ ராமாகில் தான்.

(நந்திக்கலம்பகம், தனிப்பாடல், 17)

நந்திவர்மனின் வீரத்தை மகட்கொடை மறுக்கும் மறவன் ஒருவனின் கூற்றில் வெளிப்படுத்துவதைப் பாருங்கள்


அம்பொன்று வில்லொடிதல் நாணறுதல் நான்கிழவன் அசைந்தேன்
என்றோ வம்பொன்று குழலாளை மணம்பேசி வரவிடுத்தார் மன்னர் தூதா!
செம்பொன்செய் மணிமாடத் தௌ¢ளாற்றின் நந்திபதம் சேரார் ஆனைக்
கொம்(பு) ஒன்றோ நம்குடிலின் குறுங்காலும் நெடுவளையும் குனிந்து பாரே.

(நந்திக்கலம்பகம், 77)


‘தூதனே! கையிலிருப்பது ஓர் அம்புதான். வில் ஒடிந்ததுதான். அதன் நாணும் அறுந்துவிட்டதுதான். நான் வயதானவன் தான். இப்படி எண்ணித்தானே என் மகளை மணம்பேசிவர மன்னன் உன்னை அனுப்பினான். என் குடிலைச் சுற்றிப்பார். குடிலின் குறுங்காலும் நீண்ட வளைமரமும் நந்தியின் பகை அரசர்களின் யானைக் கொம்புகள் அல்லவா? பார்.’


இவற்றைப் போன்ற பல பாடல்கள் நந்திக் கலம்பகத்தின் இலக்கியச் சிறப்பினை எடுத்தியம்புவனவாக உள்ளன.
Read more ...

நந்திக் கலம்பகம்

Tuesday, November 23, 2010
கலம்பகம்


தமிழ் மொழியில் காணப்படும் சிற்றிலக்கிய வகைகளில் குறிப்பிடத்தக்க ஒன்று கலம்பகம், கலம்பகம் என்றால் ‘கலவை’ என்று ஒரு பொருள் உண்டு. பெரும்பாணாற்றுப்படையில்,


‘பல்பூ மிடைந்த படலைக் கண்ணி’


என்ற ஒரு தொடர் வருகிறது, இதற்கு உரை எழுதிய நச்சினார்க்கினியர், ‘பல வகையாகிய பூக்கள் கலந்து நெருங்கிய கலம்பக மாலை’ என்று கூறுகிறார். இப்பொழுது பேச்சு வழக்கிலும் பலவகையான பூக்களைச் சேர்த்துத் தொடுத்த மாலையைக் கதம்பம் என்று குறிப்பிடுகின்றனர். கலம்பகம் என்பதே கதம்பம் என்று வழக்கில் மாறி வந்துள்ளது. தொண்டரடிப் பொடியாழ்வார் ‘கலம்பகம் புனைந்த அலங்கலந் தொடையல்’ என்று குறிப்பிடுகிறார். இதன் பொருள், ‘பல மலர்களால் புனைந்த மாலை’ என்பதாகும். பல்வேறு மலர்களால் ஆன மாலை கலம்பகம் எனப்படுவது போல பல்வேறு உறுப்புகளும் பொருளும் பாட்டும் கலந்துவரும் பாமாலையான இலக்கிய வகை கலம்பகம் என்று அழைக்கப்படுகிறது. பலவகையான ஓசை நயமுடைய பாக்களும் இனங்களும் உறுப்புகளும் பயின்று, அகமும் புறமும் அகப்புறமுமாகிய திணைகள் விரவி உவகை, பெருமிதம் முதலிய சுவைகளைக் கொண்டதாய்ப் பாடப்படுவது கலம்பகம். கலம் என்றால் பன்னிரண்டையும் பகம் என்பது அதனில் பாதியாகிய ஆறையும் குறிப்பாக உணர்த்தி 18 உறுப்புகளைக் குறிப்பது என்றும் விளக்கம் சொல்வர்.


கலம்பக அமைப்பு


கலம்பக இலக்கியத்தின் பெரும்பாலான உறுப்புகளின் கருக்கள் தொல்காப்பியத்தில் காணப்படுகின்றன. பாட்டியல் நூல்கள் கலம்பக இலக்கிய வகையின் உறுப்புகளைக் கூறுகின்றன.


பாட்டியல் நூல்கள் கலம்பக இலக்கியத்தின் முதல் உறுப்புகளாக ஒருபோகு, வெண்பா, கட்டளைக் கலித்துறை ஆகிய யாப்பு வகைகளைக் குறிப்பிடுகின்றன. இவை கலம்பக இலக்கியத்தின் தொடக்கத்தில் இடம்பெற வேண்டும். முதல் உறுப்புகள் பாட்டுடைத் தலைவனை வாழ்த்துவனவாக அமையவேண்டும்.


அமைப்பு


பலவகைப் பொருள்பற்றி வெவ்வேறு செய்யுள் வகைகளால் நூறுபாட்டுகள் அமைந்த நூல் கலம்பகம். ஒரு செய்யுளின் இறுதித் தொடர் அல்லது சொல் அல்லது சீர் அல்லது அசை அடுத்த செய்யுளின் தொடக்கமாக அமையும் அந்தாதி முறையிலேயே நூறு செய்யுள்களும் அமையும்.


புயவகுப்பு, மதங்கு, அம்மானை, காலம், சம்பிரதம், கார், தவம், குறம், மறம், பாண், களி, சித்து, இரங்கல், கைக்கிளை, தூது, வண்டு, தழை, ஊசல் என்பன கலம்பகத்தின் பதினெட்டு உறுப்புகளாகும். கடவுளுக்கு 100, முனிவருக்கு 95, அரசருக்கு 90, அமைச்சருக்கு 90, வணிகருக்கு 50, வேளாளருக்கு 30 எனப் பாடல் எண்ணிக்கை இடம் பெறும் என்றும் இலக்கண நூல்கள் கூறுகின்றன.



நந்திவர்மன் என்ற பல்லவ அரசனைப் புகழ்ந்து பாடப்பட்டது நந்திக் கலம்பகம். இவன் தௌ¢ளாறு எறிந்த நந்திவர்மன் எனப்படுபவன். தௌ¢ளாற்றில் இவன் புரிந்த போர் வெற்றியைக் கலம்பகம் குறிப்பிடுகிறது. இவனது காலம் கி.பி. 825 முதல் கி.பி. 850 வரை. எனவே, இந்த நூல் கி.பி. ஒன்பதாம் நூற்றாண்டைச் சார்ந்தது என்பர். இதுவே தமிழில் தோன்றிய முதல் கலம்பக நூல் என்று கூறப்படுகிறது. இதில் 110 பாடல்கள் உள்ளன. சில பாடல்கள் இடைச்செருகலாக இருப்பதால் அந்தாதிப் பாடல் எண்ணிக்கை மாறுபடுகிறது. இதன் பாட்டுடைத் தலைவனும் கிளவித் தலைவனும் நந்திவர்மனே. முதற்கலம்பகமான இதில் புயவகுப்பு, தூது, இரங்கல், மறம், பாண், மடல், ஊசல், காலம், மடக்கு, வெறி விலக்கு, சம்பிரதம், கையுறை, மதங்கியார் ஆகிய 13 உறுப்புகள்தாம் உள்ளன. காலத்தால் முற்பட்டதாதலின் உறுப்புகள் குறைவாகப் பெற்றுள்ளது எனலாம்.


நந்திக் கலம்பகம் உருவானது பற்றிய செய்தி


நந்திவர்மனின் பகைவன் ஒருவன் அவனை ஒழிப்பதற்குப் பல சூழ்ச்சிகள் செய்தானாம். அவை வெற்றி பெறாமல் போகவே, கடைசியில் இவ்வாறு ஒரு சுவையான நூல்பாடி, அதில் அவனுடைய மரணத்திற்கு உரிய வகையில் படிப்படியாகச் சில தொடர்களையும் செய்யுள்களையும் அமைத்து, ஈம விறகு அடுக்கி, அதன்மேல் அரசன் வீற்றிருந்து கேட்குமாறு வேண்டிக் கொண்டான். இவ்வாறு பாடுதலை ‘அறம்பாடுதல்’ என்பார்கள். பாட்டுடைத் தலைவன் அழிவதற்காகத் தீச்சொற்கள் புணர்த்தும் தீய பொருத்தங்களை அமைத்தும் பாடுதல் இது. நந்திவர்மன், தமிழ்ப் பாட்டுகளின் சுவையில் மிகவும் ஈடுபாடு கொண்டவன். இவனைத் தமிழ்த் தென்றல் என்றும் நூற்கடல் புலவன் என்றும் கலம்பகம் குறிப்பிடுகிறது. ஆகையால் அவன் அந்த வேண்டுகோளுக்கு இசைந்தான். பகைவனின் சூழ்ச்சியைப் பற்றி அறிந்த பின்னரும், பாட்டுகளின் சுவையில் திளைத்து ஒன்றுபட்ட அரசன் ஈம விறகின்மேலே அமர்ந்துகொண்டு அனைத்துப் பாடல்களையும் கேட்டான். இறுதிப்பாடல் முடிந்தவுடன் ஈ.ம விறகு பற்றி எரிய உயிர் துறந்தான் என்று சொல்லப்படுகிறது. இது தமிழின் பெருமையைக் காட்டுதற்கும் மன்னனின் அளப்பரிய தமிழார்வத்தைக் காட்டுதற்கும் சொல்லப்பட்ட கதை எனலாம். கவிதை நயம் மிகுந்த அந்த நூறாவது பாட்டு,


வானுறு மதியை அடைந்ததுன் வதனம்

மறிகடல் புகுந்ததுன் கீர்த்தி

கானுறு புலியை அடைந்ததுன் வீரம்

கற்பகம் அடைந்ததுன் கரங்கள்

தேனுறு மலராள் அரியிடம் புகுந்தாள்

செந்தழல் அடைந்ததுன் தேகம்

யானும்என் கவியும் எவ்விடம் புகுவேம்

எந்தை யேநந்தி நாயகனே.

(நந்திக்கலம்பகம், தனிப்பாடல், 21)


என்பதாகும்.


‘வானுறு மதியை’ என்பதற்கு இரண்டு விதமான பொருள் உண்டு. உன் பொலிவு சந்திரனுக்குத்தான் உண்டு என்பது ஒன்று. உன் பொலிவு சந்திரனை அடைந்துவிட்டது என்பது இன்னொன்று. அப்படியே வீரம், கொடை, செல்வம் மேனியின் நிறம் எனப் பாடலில் வரும் அனைத்திற்கும் இருபொருள் கூறலாம். நந்தி மாண்ட கதையை நம்புபவர்கள் கீழ்க்காணும் பொருளொன்றே கொள்கின்றனர்.


‘வானத்தின் சந்திரனை அடைந்தது, உன் முகத்தின் ஒளி. உன் வீரம் காட்டில் வாழும் புலியிடம் சேர்ந்தது. உன் கொடைவளம் மிகுந்த கைகள், கற்பக மரங்களை அடைந்தன. திருமகள் உன்னை விட்டுத் தன் நாயகனான திருமாலிடமே சேர்ந்து விட்டாள். உன் உடம்போ நெருப்பிடம் சேர்ந்தது. இந்த நிலையில் உன்னைப் பிரிந்து நானும் எனது கவிதையும் எங்கே சென்று சேர்வதோ! எம் தலைவனாகிய நந்திவர்மனே’ என்பது மேற்குறிப்பிட்ட பாடலின் கருத்து.


இந்நூலைப் பாடியவர் காடவர் என்ற கவிஞர் என்று குறிப்பிடுவர். அவர் நந்திவர்மனின் இளைய சகோதரர் என்றும் கூறுவர். தொண்டை மண்டல சதகத்தில் இவ்வரலாறு குறிப்பிடப்பட்டுள்ளது.


‘கலம்பகம் கொண்டு காயம்விட்ட தௌ¢ளாற்றை நந்தி’ என்ற தொடரும் ‘நந்தி கலம்பகத்தால் மாண்ட கதை நாடறியும்’ என்ற சிவஞான சுவாமிகளின் செய்யுளடியும் இதற்குச் சான்று என்று குறிப்பிடுவர். நூல் எழுதப்பட்டு முற்றுப்பெறும் காலத்தில் நந்தி இறந்திருக்கலாம். நூலின் தொடக்கத்தில் ‘வடவரை அளவும் தென் பொதி அளவும் விடையுடன் மங்கள விசையமும் நடப்ப’ நந்தி அரசாள வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இறுதியில் ‘செந்தழல் புகுந்ததுன் தேகம்’ என முடிகிறது. நூலாசிரியர் மன்னன் இறந்ததையே இவ்வாறு குறிப்பிட்டிருக்கக் கூடும்.


நந்திக் கலம்பகத்தின் சிறப்பு


ஓர் அரசனைப் புகழும்போது ஒரே வகையான யாப்பினால் பல செய்யுள் இயற்றுவதைவிடப் பலவகை யாப்புகளால் பல செய்யுள் இயற்றும் புதிய மரபைத் தமிழ் இலக்கியத்திற்கு முதலில் வழங்கிய பெருமை நந்திக் கலம்பகத்திற்கு உண்டு. புலவர் தாமே நேரே அரசனைப் புகழ்ந்து பாடுவது பழைய மரபு. ஆனால் நந்திக் கலம்பகத்தில், ஊரார் பாடுவதுபோலவும், வீரன் ஒருவன் தன் தலைவனின் பெருமையைப் பாராட்டிப் பாடுவதாகவும் அமைந்துள்ளது. இவ்வாறு வேறு பல துறைகள் அமைத்துச் செய்யுள் இயற்றும் முயற்சியை நந்திக் கலம்பகம் வழங்கியது.


கலம்பக இலக்கியம் எவ்வாறு இருக்கவேண்டும் என்பதற்குரிய இலக்கணமாக நந்திக் கலம்பகம் அமைந்துள்ளது.
Read more ...

நாட்டுப்புற மருத்துவம்

Tuesday, November 23, 2010
நாட்டுப்புற மருத்துவத்தின் சிறப்புகள்


1. பக்க விளைவுகள் இல்லாதது.

2. எளிய முறையில் அமைவது.

3. அதிகப் பொருட் செலவில்லாதது.

4. ஆங்கில மருத்துவத்தில் குணப்படுத்த முடியாத பல நோய்களுக்கு குணம் தரக்கூடியது.

5. அனுபவ முறையில் பெறப்படுவது.

6. பெரும்பாலும் இயற்கையாகக் கிடைக்கும் பொருள்களை மருந்துகளாகக் கொண்டுள்ளது.

7. சற்று மெதுவாகச் செயல்பட்டாலும் நோய் முழுமையாகக் குணமடைவது.

8. எளிய முறையில் மக்களுக்குப் புரிய வைப்பதால் நோயாளிகள் நோயின் ஆரம்பகட்டத்திலேயே
தடுப்பு முயற்சிகள் செய்து கொள்ள ஏதுவாகிறது.

9. நாட்டுமருத்துவத்தை அறியக் கல்வியறிவு தேவையில்லை; பாமரரும் பின்பற்றலாம்.

10. பெரும்பாலும் பரம்பரை பரம்பரையாகப் பின்பற்றப்பட்டு வருவதால் மருத்துவர்கள் நோயைக்
கண்டறிவது மிக எளிதாகின்றது.

11. உலக நாடுகளில் நாட்டுப்புற மருத்துவமே நவீன மருத்துவத்துக்கு அடிப்படையான உந்துதலாக
அமைந்துள்ளது.

12. உடல் ரீதியாக மட்டும் அணுகாமல் உளரீதியாகவும் அணுகுவதால் நாட்டுப்புற மருத்துவம்
சிறப்பானதாக ஆகின்றது.


நாட்டுப்புற மருத்துவ ஆய்வுகள்


ஓ.பி ஜாகி (O.P. Jaggi) என்பவர் 1973-இல் நாட்டுப்புற மருத்துவம் (Folk Medicine) என்னும் நூலை எழுதியுள்ளார். இதில் இந்திய நாட்டுப்புற மருத்துவக் முறைகள் பற்றிய விளக்கம் உள்ளது. 1956 - இல் சோப்ரா (R.N. Chopra) என்பவரும் மற்றும் சிலரும் சேர்ந்து இந்திய மருத்துவச் செடிகளின் பட்டியல் (Glossary of Indian Medicinal Plants) என்னும் நூலை எழுதியுள்ளனர். இதில் மூலிகைச் செடிகளின் பட்டியல் உள்ளது. மேலும் பல்வேறு அறிஞர்கள் பல கட்டுரைகள் எழுதி அவை ஆங்காங்கே வெளியாகியுள்ளன.

தமிழில் நாட்டுப்புற மருத்துவம் பற்றி வெளிவந்த நூல்கள் குறைவு. இவற்றில் டாக்டர். க, வேங்கடேசனின் ஆய்வு நோக்கில் நாட்டுப்புற மருத்துவம் (1976) என்ற நூலும் டாக்டர் இ. முத்தையாவின் நாட்டுப்புற மருத்துவ மந்திரச் சடங்குகள் (1986) என்ற நூலும் குறிப்பிடத்தக்கவை. முனைவர் க.சந்திரன் நாட்டு மருத்துவம் (2002) என்னும் நூலை எழுதியுள்ளார்.


சி.எஸ். முருகேச முதலியார் பாடம் ( 1936) என்னும் நூலில் நாட்டுப்புற மருத்துவ முறைகள் சிலவற்றை விளக்குகிறார். ஆ.ரா. கண்ணப்பர் நாட்டு மூலிகைகளைப் பற்றி விரிவாக நம் நாட்டு மூலிகைகள் என்ற நூலில் எழுதியுள்ளார். இவரைத் தொடர்ந்து புற்றுநோய் மூலிகைகள் என்ற நூலை இரா, குமாரசாமி என்பவர் எழுதியுள்ளார்.


பி. கரேந்திரகுமார் நாட்டுப்புறவியல் ஆய்வுக் கோவையில் (1987) தஞ்சை மாவட்ட நாட்டுப்புற மருத்துவம் பற்றி ஆங்கிலத்தில் கட்டுரை எழுதியுள்ளார். சோமலெ அவர்கள் ‘தழிழ்நாட்டு மக்களின் மரபும் பண்பாடும் (1974) என்ற நூலில் ‘மந்திரமும் மருந்தும்‘ என்ற தலைப்பில் மந்திர மருத்துவச் சடங்குகள் பற்றித் தெளிவாக விளக்கியுள்ளார். 1985-இல் ஆ. சிவசுப்பிரமணியன் ‘ஆராய்ச்சி இதழில்‘ பரதவர்களின் நாட்டு் மருத்துவம் பற்றி ஆராய்ந்து எழுதியுள்ளார். ஆறு.இராமநாதன் தமது ‘நாட்டுப்புற இயல் ஆய்வுகள்‘ (1997) நூலில் ‘நாட்டுப்புற மருத்துவம் நம்பிக்கைக்கு உகந்ததா?‘ என்றும் கட்டுரையை எழுதியுள்ளார்.


இவை தவிரப் பல்வேறு பல்கலைக் கழகங்களிலும் ஆய்வு செய்த மாணவர்கள் பலர் தமது ஆய்வுத் தலைப்பாக நாட்டுப்புற மருத்துவக் கூறுகளை எடுத்துக் கொண்டு ஆய்வேடுகளை அளித்துள்ளனர்.
Read more ...

நாட்டுப்புற மருத்துவம்

Tuesday, November 23, 2010
நாட்டுப்புற மருத்துவத்தின் வகைகள்


நாட்டுப்புற ஆய்வாளர்கள் பலர் நாட்டுப்புற மருத்துவ வகைகளை அவரவர் வாழும் நாட்டில் வழங்கும் சூழல்களுக்கேற்பப் பலவாறு பகுத்துக் காண்பர். டான்யாடர் (Don yoder) நாட்டுப்புற மருத்துவத்தைப் பின்வருமாறு வகைப்படுத்துகின்றார்.


1. மந்திர சமய மருத்துவம் (Magico Religious Medicine)


(i). கடவுளின் சீற்றத்தால் ஏற்படும் நோய்கள்.
(ii). கெட்ட ஆவிகளால் ( Evil Spirit ) ஏற்படும் நோய்கள்.


(iii). சூன்யம் (Witch Craft ) முதலியவற்றால் ஏற்படும் நோய்கள்.
(iv). கண்ணேறு படுவதால் (Evil Eye ) ஏற்படும் நோய்கள்.
(v). மரபுத் தளைகளை மீறுவதால் (Break of Taboos) ஏற்படும் நோய்கள்.


2. இயற்கை நாட்டுப்புற மருத்துவம் (Natural Folk Medicine)


(i). மனிதர்களுக்கான மருத்துவம்.
(ii). பிராணிகளுக்கான மருத்துவம்.


தே. ஞானசேகரன் நாட்டுப்புற மருத்துவத்தை மூன்று நிலைகளில் அடக்குகிறார்.


1. மருந்து முறை சார்ந்த ராஜவைத்தியம்.
2. மந்திர முறை சார்ந்த பூதவைத்தியம்.
3. நெருப்பு முறை சார்ந்த ராட்சச வைத்தியம்.


சு. சண்முகம் சுந்தரம் நாட்டுப்புற இயல் என்னும் தமது நூலில் நாட்டுப்புற மருத்துவத்தைப் பின்வரும் ஐந்து வகைகளாகப் பகுத்துள்ளார்.


1. இயற்கை மருத்துவம் (வயிற்றுப்பூச்சிகள் அழிய வேப்பிலைக் கொழுந்தை அரைத்து சாப்பிடுதல்
போன்றவை).

2. மத / மாந்திரீக மருத்துவம் (மந்திரித்தல,. கண்ணேறு கழித்தல், சுற்றிப் போடுதல்).

3. நம்பிக்கை மருத்துவம் ( எமனுக்கு பயந்து காது குத்துவது, கை, கால் சுளுக்குகளுக்கு இரட்டையர்
நீவுதல் போன்றவை).

4. திட்ட மருத்துவம் (உணவு செரிக்க வெற்றிலை போடுதல் போன்றவை).

5. முரட்டு மருத்துவம் (நாய் கடித்தால் கடிபட்ட இடத்தைச் செருப்பால் அடித்தல்).


ஆறு. இராமநாதன் நாட்டுப்புற மருத்துவத்தை நம்பிக்கை மருத்துவம், இயற்கை அல்லது மூலிகை மருத்துவம் என இரண்டாவது வகைப்படுத்துகிறார்.


நாட்டுப்புற மக்கள் நோய் தோன்றுவதற்கான காரணங்களாகப் பின் வருவனவற்றை நம்புகின்றனர்.


1. தெய்வங்களின் கோபம்.
2. பேயின் செயல்.
3. வைப்பு / பில்லிசூனியம் / வசிய மருந்து.

4. முற்பிறப்புப் பாவங்கள்.
5. கண்ணேறு.
6. உடலில் ஏற்படும் சூடு / குளிர்ச்சி.
7. கவனக் குறைவு.


இந்த நம்பிக்கைகளை அடிப்படையாகக் கொண்டே மருத்துவ முறைகள் அமைகின்றன. முதல் ஜந்தும் நம்பிக்கைகளை அடிப்படையாகக் கொண்டு அமைவதால் அதற்கான மருத்துவமும் மந்திரச் சடங்குகள் வாயிலாகவே செய்யப்படுகின்றன. எனவே இவற்றை நாம் நம்பிக்கை மருத்துவம் எனச் சுட்டலாம். இத்தைகய நம்பிக்கை மருத்துவ முறைகள் உளவியல் தொடர்புடைய சில நோய்களைத் தீர்க்க உதவுகின்றன.


மேற்கூறப்பட்டவற்றுள் இறுதி இரண்டு (6,7) காரணங்களால் தோன்றும் நோய்களைக் குணப்படுத்த மூலிகைகள் பயன்படுத்தப்படுகின்றன. இத்தகைய மருத்துவத்தை இயற்கை அல்லது மூலிகை மருத்துவம் என்று சுட்டலாம்.


க. வேங்கடேசன் தமது ஆய்வு நோக்கில் நாட்டுப்புற மருத்துவம் என்னும் நூலில் நாட்டுப்புற வழக்காறுகளின் அடிப்டையில் வரையறுத்துள்ள நாட்டுப்புற மருத்துவ வகைகளாவன.


1. நாட்டுப்புறப் பாடல்கள் கூறும் மருந்து முறைகள்.
2. நம்பிக்கைகள் கூறும் மருந்து முறைகள்.
3. பழமொழிகள் கூறும் மருந்துமுறைகள்.
4. பழக்கவழக்கங்கள் கூறும் மருந்து முறைகள்.
5. சிடுகா மருந்துமுறைகள்.


இவற்றில் சிடுகா மருந்து என்பது பாட்டி வைத்தியம், கைமுறை வைத்தியம், வீட்டு வைத்தியம் என்ற பெயர்களில் வழங்கப்படுகின்றது இவற்றை எழுதப்படாத மருந்தியல் முறைகள் எனலாம்.


ந. சந்திரன் தமது நாட்டு மருத்துவம் என்னும் நூலில் மருத்துவத்துக்கு உட்படுத்தப் படுபவர்களின் அடிப்படையில் ஐந்து வகைகளைக் குறிப்பிடுகிறார்.


1. மகளிர் மருத்துவம்.
2. ஆடவர் மருத்துவம்.
3. குழந்தையர் மருத்துவம்.

4. பொது மருத்துவம்.
5. கால்நடை மருத்துவம்.
Read more ...

நாட்டுப்புற மருத்துவம்

Tuesday, November 23, 2010
மனிதன் தனக்கு வரும் நோய்களை மட்டுமல்லாமல் தான் வளர்த்து வரும் வீட்டு விலங்குகளான ஆடு, மாடு, போன்றவற்றிற்கு வரும் நோய்களையும் எதிர் கொள்ள வேண்டியிருந்தது. ஆகவே வீட்டு விலங்குகளுக்கு அவன் பார்த்த வைத்தியம் மனித வைத்தியத்தை மேம்படுத்துவதற்கு உதவியாய் இருந்தது.


இயற்கையோடு தொடர்பு கொண்டிருந்த மனிதன் தன்னைச் சுற்றி வளர்ந்துள்ள மரம், கிளை, இலை, வேர், செடி, கொடி, பூ, காய், கனி, விதை ஆகியவற்றையும் கூர்ந்து நோக்கினான். இதனால் அவற்றின் மருத்துவக் குணங்களும் அவனுக்குப் புலனாகத் தொடங்கின. ஆங்காங்கே கிடைக்கக் கூடிய தாவர வகைகளின் மருத்துவக் குணங்களை அறிந்து அவற்றை மனிதர்களிடம் சோதனைக்கு உட்படுத்தி வெற்றி கண்டபோது நாட்டு வைத்தியத்தின் மீதும் வைத்தியர்கள் மீதும் மனிதர்களுக்கு நம்பகத் தன்மை உண்டானது.


நோயுற்றவன் தன் மருத்துவனை நம்புவதும், மருத்துவன் மருந்தை நம்புவதும் காலத்தின் தேவையாகியது. இந்நிலையில், நாட்டு வைத்தியர்கள் பெரிதும் மதிக்கப்பட்டனர். இம்மதிப்பைக் காத்துக் கொள்ள அவர்கள் தமக்குத் தெரிந்த மருத்துவத்தில் மேலும் விளக்கம் தேட முற்பட்டனர் இத்தேடல் முயற்சி அவர்களுககு இத்துறையில் அனுபவ முதிர்ச்சியைத் தந்தது, இப்பெரியோர்களின் அனுபவக் கொடையே நாட்டு மருத்துவமாகும், (நா.சந்திரன் 2002 - 14-16).


நாட்டுப்புற மருத்துவத்தின் பல்வேறு பெயர்கள்


நாட்டுப்புற மருத்துவமானது நாட்டுமருத்துவம், கை வைத்தியம், பாட்டி வைத்தியம், வீட்டு வைத்தியம், பரம்பரை வைத்தியம, பச்சிலை வைத்தியம், முலிகை வைத்தியம், இராஜ வைத்தியம், இரகசிய மருந்து வைத்தியம் என மக்களால் பல்வேறு பெயர்களில் மருந்தின் அடிப்படையிலும் மருத்துவம் செய்கின்ற ஆள் அடிப்படையிலும் அமைந்துள்ளன.


நாட்டுப்புற மருத்துவம் குறித்த விளக்கம்


நாட்டுப்புற மருத்துவம் குறித்து அகக்றை கொண்ட அறிஞர்கள் அவற்றைக் குறித்து விளக்கங்கள் பல கூறினர். இவர்களது இந்த விளக்கங்கள் நாட்டுப்புற மருத்துவத்தை வரையறை செய்ய முயன்றதன் விளைவு எனக் கூறலாம்.


தலைமுறை தலைமுறையாத் தெரிந்து கொண்ட அனுபவத்தின் உதவியோடு எளிய முறைகளில் வீட்டிலேயே நோய்களைப் போக்கிக் கொளளும் மருத்துவ முறையே நாடடுப்புற மருத்துவம் என்கிறது ஸ்டெட்மன் மருத்துவ அகராதி (Stedman's Medical Dictionary).

டான்யாடர் (Don Yoder) என்னும் அமெரிக்க அறிஞர் நாட்டுப்புற மருத்துவத்திற்கு வீட்டு வைத்தியம் (Home Remedies) என்று விளக்கம் தருகிறார். அமெரிக்க டாக்டர் ஜார்விஸ் தமது நாட்டுப்புற மருத்துவம் என்னும் நூலில் பின்வருமாறு கூறுகிறார: ‘உலகில் எங்கு நீங்கள் நோய்வாய்ப்பட்டாலும் நோயைத் தீர்க்க அங்கு இயற்கை மருந்து இருப்பதைப் பார்ப்பீர்கள்’.


நாட்டுப்புறத்து மக்கள் தமக்குற்ற நோய்களைத் தீர்க்கக் கையாளும் மருத்துவ முறைகளை நாட்டுப்புற மருத்துவம் எனலாம் என்பர் சு.சண்முகசுந்தரம் (நாட்டுப்புறவியல் - 139)


ந. சந்திரன் ஒரு நாட்டின் தட்பவெப்ப நிலைகளுக்கேற்ப மக்களுக்கு ஏற்படும் நோய்களுக்கு அந்தந்த நாட்டில் கிடைக்கும் பொருள்களைக் கொண்டு பாமர மக்கள் தம் பட்டறிவால் செய்துவரும் மருத்துவ முறையை நாட்டு மருத்துவம் எனலாம் என்கிறார்.


ந. சந்திரனின் விளக்கப்படி பாமரர்கள் மட்டுமே நாட்டுப்புற மருத்துவத்தைப் பயன்படுத்துகிறார்கள் என்றாகின்றது. ஆனால் இன்றைய நிலையில் நாட்டுப்புற மருத்துவத்தின் சிறப்பும் பயனும் கற்றவர்களுக்கும் தெளிவாகியுள்ளன. சில குறிப்பிட்ட நோய்களுக்கு நாட்டுப்புற மருத்துவமே ஏற்றது என்பது தெரியவந்துள்ளது. நவீனமான முறைகளில் நாட்டுப்புற மருந்துகள் தயாரிக்கப்பட்டுவருகின்றன. ஆகவே இன்றைய நிலையில் நாட்டுப்புற மருத்துவம் பாமரர்க்கானது என விளக்கம் சொல்வது சரியன்று. சந்திரனின் விளக்கத்தில் பாமரன் என்பதை மட்டும் நீக்கினால் போதுமானது.


நாம் நாட்டுப்புற மருத்துவத்தைப் பின்வருமாறு விளக்கலாம். ஒரு நாட்டின் தட்பவெப்ப நிலைகளுக்கேற்ப மக்களுக்கு ஏற்படும் நோய்களுக்கு அந்தந்த நாட்டில் இயற்கையாகக் கிடைக்கும் பொருள்களைக் கொண்டு மக்கள் தம் பட்டறிவால் செய்துவரும் மருத்துவ முறையே நாட்டுப்புற மருத்துவம் ஆகும்.
Read more ...