சூத்திர ஞானம் - வால்மீகர் - 5 - 10

Tuesday, July 5, 2011
தானென்ற வுலகத்தில் சிற்சில் லோர்கள்
சடைபுலித்தோல் காசாயம் தாவ டம்பூண்டு
ஊனென்ற வுடம்பெல்லாம் சாம்பல் பூசி
உலகத்தில் யோகியென்பார் ஞானியென்பார்;
தேனென்ற சிவபூசை தீட்சை யென்பார்;
திருமாலைக் கண்ணாலே கண்டோ மென்பார்;
கானென்ற காட்டுக்கு ளலைவார் கோடி
காரணத்தை யறியாமல் கதறு வாரே. 6

கதறுகின்ற பேர்களையா கோடா கோடி;
காரணத்தைக் கண்டவர்கள் கொஞ்சம் கொஞ்சம்
பதறுகின்ற பேர்களெல்லாம் பராப ரத்தைப்
பற்றிநின்று பார்த்தவர்கள் சுருக்க மப்பா!
உதறுகின்ற பேர்களெல்லா முலகத் துள்ளே
உதித்தகலை தம்முள்ளே யறிய மாட்டார்;
சிதறுகின்ற பேர்களைப்போல் சிதறி டாமல்
சிவசக்தி வரும்போதே தன்னில் நில்லே. 7

நில்லென்ற பெரியோர்கள் பாஷை யாலே
நீடுலகம் தன்னுள்ளே நாலுவேதம்
வல்லமையைச் சாத்திரங்க ளிருமூன் றாக
வயிறுபிழை புராணங்கள் பதினெட் டாகக்
கல்லுகளைக் கரைப்பதுபோல் வேதாந் தங்கள்
கட்டினா ரவரவர்கள் பாஷையாலே;
தொல்லுலகில் நாற்சாதி யனேகஞ் சாதி
தொடுத்தார்க ளவரவர்கள் பிழைக்கத்தானே. 8

தானென்ற வுலகத்தி லில்லா விட்டால்
தன்பெருமை யாலழிந்து சகத்தில் வீழ்வார்;
ஊனென்ற வுடம்பெடுத்தா லெல்லாம் வேணும்;
உலகத்தி லவரவர்கள் பாஷை வேணும்;
மானென்ற சிவகாமி சிவனுங் கூடி
மாமுனிர் முகம் பார்த்து மறைநூல் சொன்னார்;
தேனென்ற சிவகாமி யருளி னாலே
திரட்டினார் வெகுகோடி தேச பாஷை 9

தேசத்தின் பாஷைதனை யறிந்தி டாமல்
தெளிவாகத் தாமுரைப்பார் பாஷை பார்த்தோர்;
ஆசிப்பா ருலகத்தில் கண்டதெல்லாம்;
ஆச்சரியந் தனைக்கண்டு மறந்து போவார்;
வாசிதனை யறியாத சண்டி மாண்பர்
வார்த்தையினால் மருட்டிவைப்பர் வகையி லாமல்;
நாசிநுனி யதனடுவில் சிவத்தைக் கண்டோர்
நான்முகனும் திருமாலும் சிவனுந் தாமே.

No comments:

Post a Comment