காகபுசுண்டர்

Tuesday, July 12, 2011
ஞானம் 80
கயிலாய மலையில் ஒருநாள் மும்மூர்த்திகளும் தேவர்களும்
கூடியிருக்கும் சமயத்தில் சிவபெருமானுக்குத் திடீரென்று ஒரு சந்தேகம்
எழுந்தது. “இந்த உலகம் எல்லாம் பிரளய காலத்தில் அழிந்து விட்ட பிறகு
எல்லோருக்கும் குருவான நமசிவாயம் எவ்விடத்தில் தங்கும்? பிரம்மா,
விஷ்ணு, ருத்திரன், மகேசுவரன், சதாசிவம் ஆகிய ஐவரும் எங்கே
இருப்பார்கள் என்பது யாருக்காவது தெரியுமா?” என்று கேட்டார்.

சிவபெருமானின் கேள்விக்கு யாருக்கும் பதில் தெரியவில்லை. எல்லாப்
பிரச்சனைகளுக்கும் தீர்வு காணும் விஷ்ணுவும் மௌனமாயிருந்தார்.
மார்க்கண்டேயனுக்கு ஆச்சரியம். விஷ்ணுவுக்குக் கூடவா விடை
தெரியவில்லை? மார்க்கண்டேயனின் பார்வையின் அர்த்தத்தைப் புரிந்து
கொண்ட விஷ்ணுவும், “உங்கள் கேள்விக்குப் பதில் சித்தர்களிடம்தான்
கிடைக்கும். குறிப்பாக புசுண்ட முனிவரைக் கேட்டால் தெரியும். அவரை
இங்கு அழைத்து வந்து கேட்ப தென்றால் வசிட்ட முனிவரைத்தான் அனுப்ப
வேண்டும்” என்றார்.

தேவர்களுக்கெல்லாம் ஒரே ஆச்சரியம். தேவர்களான தங்களால் யூகிக்க
முடியாத ஒன்றை சித்தர் ஒருவர் யூகித்துக் கூறுவார் என்பதை அவர்களால்
நம்ப முடியவில்லை. எதனால் நீர் இப்படிக் கூறுகின்றீர்? என்று அனைவரும்
விஷ்ணுவைக் கேட்டனர்.

பிரளய காலத்தில் எல்லாம் அழிந்து விட்ட நிலையில் எனக்கு ஏதும்
வேலையில்லாததால் நான் ஆலிலையின் மீது அறிதுயிலில் ஆழ்ந்திருந்தேன்.
என்னுடைய சக்கரம் வெகு வேகமாகச் சுழன்று கொண்டிருந்தது. அந்த
வேகத்தில் அதனைக் கட்டுப்படுத்துவது என்பது யாராலும் முடியாத காரியம்.
ஆனால் அப்போது அங்கு வந்த காகபுசுண்டர் எப்படியோ அந்தச்
சக்கரத்தை ஓடாமல் நிறுத்திவிட்டு அதைக் கடந்து சென்றார். அதனால்
அவர் எல்லாம் வல்லவர் என்பதை அறிந்தேன் என்றார் விஷ்ணு.

இப்படியெல்லாம் அறிந்தவர் என்று தேவர்களாலேயே ஒப்புக்
கொள்ளப்பட்ட இந்த காகபுசுண்டருக்கு எப்படி இந்தக் காரணப்பெயர்
ஏற்பட்டது என்பதற்கு போக முனிவர் விளக்கம் கூறுகின்றார்.

முன்பு ஒரு காலத்தில் சக்தி கணங்கள் மது உண்டு நடனமாடிக்
களித்திருக்கையில் அப்போது அங்கு சிந்திய மதுத்துளிகள் குடிநீரில்
கலந்துவிட, அந்த நீரினைப் பருகிய தேவலோகத்து அன்னங்களும்
மனமயக்கத்துடன் மகிழ்ச்சியில் ஆடிக்கொண்டிருந்தன. இந்த மதுக்களிப்பு
நடனத்தை சிவனும் பார்வதியும் கண்டு மகிழ்ந்திருக்கும் வேளையில்
மகிழ்ச்சியின் எல்லையில் சிவகணமானது காகத்தின் உருவில் அன்னத்தைச்
சேர அன்னம் அப்போதே கர்ப்பமுற்று இருபத்தொரு முட்டைகள் இட,
இருபது அன்னக் குஞ்சுகளையும் ஒரு காகத்தையும் பொரித்தது. இருபது
அன்னங்களும் அநேக நாட்கள் வாழ்ந்து முக்தியடைய, சிவகலையால் பிறந்த
காகம் மட்டும் அழியாமல் இருக்கும் பேறு பெற்றது. அந்தக் காகமே இந்த
காகபுசுண்டர் என்று சித்தர் பாடல்கள் இவர் வரலாற்றைத் தெரிவிக்கின்றன.


வர ரிஷியின் சாபத்தால் உலகத்தில் சந்திர குலம் விளங்க ஒரு
வெள்ளாட்டின் (விதவை) வயிற்றில் பிறந்தவர் இவர் என்றும், பிரளய
காலத்தில் காக்கை வடிவெடுத்து அப்பிரளயத்திலிருந்து தப்பிப் பிழைத்து
அநேக கோடி வருடங்கள் ஜீவித்து இருந்தாரென்றும் ஒரு வரலாறு
தெரிவிக்கின்றது.

காகபுசுண்டர் அன்னத்தின் முட்டையிலிருந்து பிறந்தவரா?
வெள்ளாட்டின் பிள்ளையாகப் பிறந்தவரா? என்னும் ‘ரிஷிமூலம்’ இன்னும்
உறுதிப்படுத்த முடியாத தேவரகசியம்.

இவர் தமிழ் நாட்டில் பிறந்தவர். இவர் உருவம் கருமையாக இருக்கலாம்;
எதையும் கூர்ந்து பார்த்து உண்மை காணும் தன்மையுள்ளவராய் இருக்கலாம்.
உண்மைகளைக் காணப் பலவிடங்களிலும் அலைந்து திரிந்தவராயிருந்த
மையால் இவர் காகபுசுண்டர் என்று அழைக்கப்பட்டிருக்கலாம் என்று சாமி
சிதம்பரனார் கூறுகின்றார்.

இவர் காக்கை வடிவில் இருந்து பல இடங்களிலும் சுற்றித் திரிந்தமைக்கு
இவர் பாடல்களிலேயே ஆதாரம் உள்ளது.

“காகம் என்ற ரூபமாய் இருந்து கொண்டு
காரணங்கள் அத்தனையுமே கருவாய்ப் பார்த்து
வேகமுடன் வெளியோட்ட நிலையாய்ப் பார்க்க
வெகுதூரம் சுற்றிஇன்னும் விபரம் காணேன்”

என்ற வரிகளால் இஃது உறுதிப்படுகின்றது.

தன்னுள்ளே இறைவன் கோயில் கொண்டுள்ளதை யறியாமல் வீணே
இந்த மனிதர்களெல்லாம் வெளியில் பல தெய்வங்கள் உண்டு என்று
அலைந்து திரிகின்றனரே என்பதை,



“தானென்ற பிரமத்தை யடுத்திடாமல்
தரணியில் தெய்வமடா அனந்த மென்றும்” (24)

வரிகளில் சுட்டிக்காட்டி,

“முத்தியடா மந்திரத்தை நினைக்கும்போது
மோசமடா மனந்தானும் இரண்டாய்ப் போகும்
சக்தியடா மனந்தானே யோக மாகத்
தனித்திருந்து நித்திரையைத் தள்ளி மைந்தா!
புத்தியடா பிரமத்திற் புகுந்து கொண்டாற்
பூலோக மெல்லந்தான் பணியு முன்னே;
எத்தியே திரியாமற் பிடரி மார்க்கம்
ஏறுகின்ற வாசியுந்தான் கற்பந் தானே”

என்று வாசியோக மார்க்கத்தை இறைவனை அடையும் மார்க்கமாக
அறிமுகப்படுத்துகின்றார்.

“அறியலாம் மனந்தானே உயிர்தா னாகும்
அண்டத்திற் சேர்ந்திடவே ஆகும் முத்தி
பரியேறிச் சவாரியுமே நடத்த லாகும்
பஞ்சமா பாதகங்கள் பறந்தே போகும்
விரிவான மனந்தனையும் அணுவ தாக்கி
விட்டகுறை தொட்டகுறை விதியைப் பார்த்துக்
குறியான குண்டலியா மண்ட வுச்சி
கூறுகிறேன் முக்கோண நிலைதாமே” (26)

என்று வாசியோகத்தின் மூலம் குண்டலி யோகம் செய்து இறைவனைக்
காணும் மார்க்கத்தைப் போதிக்கின்றார். மேலும்,

“தாமென்ற உலகத்தில் மனித ரோடே
சஞ்சாரஞ் செய்யாற் றனித்து நில்லே
ஓமென்ற ஊண் மிகுந்து உண்டி டாதே
ஓரமாய் வழக்கதனை உரைத்தி டாதே
ஆமென்ற அட்சரத்தை மறந்தி டாதே
ஆயாச மாகவுந்தான் திரிந்தி டாதே



காமப்பேய் கொண்டவனோ டிணங்கிடாதே
காரணத்தைக் கண்டு விளையாட்டு வாயே”

“விளையாடிக் கருநெல்லி பறித்தே உண்ணு
வேகாத தலையாகும் விரும்பிப்பாரு
மலையாமல் வொண்சாரை பிடித்தே யுண்ணு
மைந்தனே சாகாக்கா லதுவே யாகும்
அலையாமல் சோதியதன் பாலை யுண்ணே
அக்கினியாம் கம்பமடா சுழுமுனை யாச்சுக்
கலைநாலு போகிறதை யெட்டிற் சேரு
கபடமற்ற தேகமடா கண்டு பாரே” (28)

இது மனம் காமவயப்படாமல் வாசியோகம் மூலம் குண்டலி எழுப்பி
நித்திய தேகம் பெறும் முறையை உபதேசித்தது ஆகும்.

இவர் கூறும் இந்த அக்கினி கம்பம் சுழுமுனை நாடியாகும். இதனை,

“நேரப்பா நெடுந்தூரம் போகும்போது
நிச்சயமாய்க் கம்பத்தின் நிலையைக் கண்டேன்;
வீரப்பா அக்கினி போல் படர்ந்து நிற்கும்
வெளியொன்றுந் தெரியாம லிருக்குந்தானே”

என்று சுழுமுனைக்கு விளக்கம் தருகின்றார். இந்த சுழுமுனையின் முடிவில்
மனோன்மணி வீற்றிருக்கும் நிலையை,

“இருக்குமடா எங்குமொன்றாய் அக்கினிக் கம்பம்
என்மகனே கம்பத்தின் நடுவே மைந்தா
உருக்கமுடன் பெண்ணரசி யொன்றி நிற்பாள்” (44)

என்று கூறுகின்றார்.

வாசியோகமே காயசித்தி உபாயமென்பதை,

“சாற்றுகிறே னென்மகனே வாசி நாதா
சத்தியமா யண்டத்திற் செல்லும் போது


போற்றுகிற அக்கினியும் பிரவேசித்துப்
புலன்களைந்துஞ் சேர்ந்ததனாற் போத மாகும்
மாற்றிலையும் அதிகமடா வுன்றன் தேகம்
மைந்தனே அபுரூப மாகுமப்பா
வாற்றியே நிழற் சாய்கை யற்றுப் போகும்
வலுத்ததடா காயசித்தி யாச்சப் பாரே” (55)

இவர் உலகில் நிலவும் சாதி வேற்றுமையைத் தம் பாடல்களில்
வெகுவாகக் கண்டித்துள்ளார். குருவைத் தேர்ந்தெடுப்பதில் மிக
எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று கூறும் இவர் போலி குருவானவர்
உண்மையான பிரமத்தை அறியாதவர்கள் என்றும், அவர்கள் வெறும் வேத
ரகசியங்களை அறிந்ததினால் மட்டும் மெய்ஞானியராக மாட்டார்கள் என்றும்,
வெறும் காவியுடையும் யோக தண்டம் என்னும் முககோல் காலில் பாத குறடு
இவைகள் மட்டும் ஒருவரைக் குருவாக உருவகப்படுத்த இயலாது. இவர்கள்
எல்லாம் ஆணவம் கொண்ட பிறர் அஞ்சத்தக்க வேடதாரிகள் என்று கூறி,
இத்தகைய குருமார்கள் பணம் பறிப்பதிலேயே குறியாக இருப்பார்கள்
என்பார் காகபுசுண்டர்.

“குறியென்ற உலகத்தில் குருக்கள் தானும்
கொடிய மறை வேதம் எலாம் கூர்ந்துபார்த்து
அறியாமல் பிரமத்தைப் பாராமல்தான்
அகந்தையாய்ப் பெரியோரை அழும்புபேசி
விரிவான வேடம் இட்டுக் காவிபூண்டு
வெறும் பிலுக்காய் அலைந்திடுவான் நாயைப் போலே;
பரியாச மாகவும் தான் தண்டும் ஏந்திப்
பார்தனிலே குறடு இட்டு நடப்பான் பாரே”

“பாரப்பா சீடர்களை அழைப்பான் பாவி
பணம்பறிக்க உபதேசம் பகர்வோம் என்பார்”

சித்தர்களுக்குச் சாதியும் மதமும் இல்லை என்பதை காகபுசுண்டர் தம்
பாடலில் எடுத்துக் கூறுகின்றார்.

“சாண் அப்பா சாதிகுலம் எங்கட்கில்லை
கருத்துடனே என்குலம் சுக்கிலந்தான் மைந்தா”

இவர் அத்வைத கொள்கையில் உறுதியுடையவர் என்பது இவரது
ஞானப்பாடல்களால் புலனாகிறது. சித்தர்கள் பெரும்பாலும் அத்வைதக்
கொள்கையினர் என்பது ஆய்வாளர் முடிவு. ஜீவான்மாவும் பரமான்மாவும்
வேறல்ல. இரண்டும் ஒன்றேதான். இதை உணர்வதுதான் மெய்ஞானம்.
தன்னையும் பரமத்தையும் ஒன்றாக அறிந்து சமாதி நிட்டையில் இருப்பது
தான் ஜீவன் முக்தி நிலை என்றும், இதுவே சிவோகம் பாவனை என்றும்,

பரமான்மா என்பது சூட்சுமப் பொருள்; அதாவது கண்ணில் காண
முடியாத சூட்சுமப் பொருள் என்றும் அதைக் கண்ணால் காண முடிகின்ற
தூலப் பொருளில் தான் அறிய முடியும் என்றும் அதனால் நீ பரமான்மாவைக்
காண வேண்டுமானால் உன் உடம்பிலேயே அதனை அறிந்து கொள்ள
வேண்டும்.

இந்த உண்மையை உணர்ந்துகொள்ள வேண்டும் என்றால், எள்ளுக்குள்
எண்ணெய் அடங்கியிருக்கும் தன்மையையும் ஒரு சிறிய விதையினுள் பெரிய
மரம் ஒன்று அடங்கியிருக்கும் சூட்சுமத்தையும் பசுவின் பாலிலே நெய்
கலந்திருக்கின்ற தன்மையையும் பூவினுள்வாசனை கலந்திருக்கின்ற நிறம்
கலந்திருக்கின்ற உத்தியையும், மயில் முட்டையில் அழகான பலவண்ண
தோகை ஒளிந்திருக்கின்ற ரகசியத்தையும் நீ உணர்ந்து கொள்வாயானால்
உன்னுள் இறைவன் உறைந்து இருக்கும் இரகசியத்தை நீ அறிந்து கொள்வாய்.



அகங்காரம் காரணமாக இதை மறந்து இதைக் கண்டறிவதற்கான
சாதனத்தையும் நீ மறந்து விடுவாயானால் உனக்கு அபரோட்ச ஞானம்
கிட்டாது. பரமாத்மாவுடன் ஒன்று மட்டும் முக்தி நிலையும் உனக்குக்
கிட்டாது என்கிறார் காகபுசுண்டர்.

“வேணும் என்றால் எள்ளுக்குள் எண்ணெய் போலும்
வித்தனிடம் அடங்கி நின்ற விருட்சம் போலும்
காணுகின்ற பூவில் உறை வாசம் போலும்
கன்று ஆவின் பாலிலே நெய்யைப் போலும்
தோணுமயில் முட்டையின் மேல் வர்ணம் போலும்
தூலம் அதி சூட்சுமம்தான் துலங்கி நிற்கும்
ஆணவத்தால் சாதனத்தை மறந்தாயானால்
அபரோட்ச ஞானம், முத்தி அரிது தானே”

காகபுசுண்டரின் ஞானப்பாடல் அனைத்துமே அந்தாதித் தொடையில்
அழகுறக் காணப்படுகின்றது. காகபுசுண்டர் உபநிடதம் என்ற தலைப்பிலான
மூன்று பாடல் தொகுப்பும் குறள் வெண்பா தொகுப்பு ஒன்றும் சித்தர் பாடல்
தொகுப்பில் காகபுசுண்டர் பாடியனவாகக் காணப்படுகின்றன.

யோகம் அறுபத்து நான்கு என்பதை,
“அறுபத்து நால்யோக மவ்வளவுந் தள்ளி
ஒருபொழுது முண்டுநிலை யோர்”

என்ற குறளிலும் சித்தர் பதினெண்மர் என்பதை,

“சித்தர் பதினெண்மர் செய்கையிற் றோன்றாத
அத்தனரு ளும்புசுண்டன் யான்”

என்ற குறளிலும் புலப்படும் இவர் இப்பதினாறு பாடல் தொகுதியை,


“யோகமுடன் கற்ப முரைத்தேனீ ரெட்டினில்
வேகமுடன் கண்டுஉணரு வீர்”

என்று கூறி முடிக்கின்றார்.

No comments:

Post a Comment