திருமந்திரம்

Wednesday, March 17, 2010
மூச்சுப் பயிற்சியினால் விளை யும் நன்மைகள் என்ன என்பதை திருமந்திரத்திலிருந்தே காணலாம்.

“புள்ளினும் மிக்க புரவியை மேற்கொண்டால்

கள்உண்ண வேண்டாம் தானே களிதரும்

துள்ளி நடப்பிக்கும் சோம்பர் தவிர்ப்பிக்கும்

உள்ளது சொன்னோம் உணர்வுடை யோர்க்கே.’

திருமந்திரம்- பாடல் எண்: 559

“புள்’ என்பது பறவையைக் குறிக்கும் சொல்லாகும். “புள்ளினும் மிக்க புரவி’ என்றால் பறவையைவிட வேகமாகப் பறக்கக் கூடிய குதிரை என்பது பொருள். பிராணனைக் குறிக்க குதிரை என்ற குறியீட்டை சித்தர்கள் பயன்படுத்தினர் என்பதை ஏற்கெனவே கண்டோம். ஆக, பறவையைவிட வேகமாகச் செல்லக்கூடிய இந்த பிராண னாகிய குதிரையை நம்வசப்படுத்திக் கொண்டால் (மேற்கொண்டால்) என்னென்ன நிகழும்?

“கள் உண்ண வேண்டாம்; தானே களிதரும்.’

ஒருவித ஆனந்தமான மனநிலையை அடையவே மனிதர்கள் கள் முதலிய போதைப் பொருட்களை உண்கிறார்கள் அல்லவா? ஆனால் திருமூலரின் கூற்றுப்படி, பிராணா யாமம் எனும் மூச்சுப் பயிற்சியின் மூலமாக நமது பிராணனை நாம் வசப்படுத்திவிட்டால், கள் உண்ணாமலேயே கள் உண்ட ஆனந்த நிலை உடலிலும் மனதிலும் உருவாகிவிடும்.

மூச்சுப் பயற்சியின் மூலமாக குண்டலினி சக்தி தட்டி எழுப்பப்பட்டு நமது தலையின் மேற்பகுதி யிலுள்ள “லலான சக்கரம்’ தூண்டப்பட்டால், அந்த சக்கரத்திலிருந்து உருவாகும் “அமிர்தம்’ ஒரு எல்லையற்ற ஆனந்த நிலையை உருவாக்கும். இதையே “பேரானந்தம்’ என்கிறார்கள். இந்த ஆனந்த நிலையும் ஒருவகையான போதையே. ஒருமுறை அனுபவித்தவர்களுக்கு அந்த நிலை யிலிருந்து வெளியில் வரவே மனம் வராது. மீண்டும் மீண்டும் அந்த ஆனந்த நிலையையே மனம் நாடும். எனவேதான் வடமொழியில் இந்த நிலையை “ஆனந்த லகரி’ என்கிறார்கள்.

ஆக, பிராணனை வசப்படுத்துவதால் விளையும் முதல் பலன்- ஆனந்தமான மனநிலை உருவாகும். இது ஒரு பேரானந்த நிலை.

“துள்ளி நடப்பிக்கும், சோம்பர் தவிர்ப்பிக்கும்.’

ஒரு மனிதனின் முன்னேற்றத்திற்கு மிகப் பெரிய தடையாக அமைவது அவனிடத்தில் காணப் படும் சோம்பல்! பலர் பல நல்ல வாய்ப்புகளைத் தவற விட்டுவிடுவதற்குக் காரணமாக அமைவது மனதில் அல்லது உடலில் ஏற்படும் சோம்பல் தான்! பிராணன் எனும் குதிரையை நமது வசப்படுத்திக் கொண்டால் சோம்பல் மறையும். மனதிலும் உடலிலும் ஒரு புதிய உற்சாகம் பிறக்கும். சுறுசுறுப்பும் துள்ளலும் தானே ஏற்படும். வாழ்க்கை சிறக்கும்.

“உள்ளது சொன்னோம் உணர்வுடை யோர்க்கே.’

இதுவே உண்மை. அதைச் சொல்லிவிட்டோம். ஆனால் உணர்வுடையோர்க்கு மட்டுமே இந்த ரகசியம் புரியும் என்கிறார் திருமூலர். உயிரோடி ருக்கும் (மரம், செடி, கொடி, விலங்குகள் உட்பட) அனைத்துமே உணர்வு கொண்டவை தானே என்ற சந்தேகம் எழும். இந்தப் பாடலில் திருமூலர் குறிக்கும் உணர்வு என்பது “உள்ளுணர்வு’ அல்லது “மெய்ஞ்ஞானம்’ என்பதைக் குறிக்கிறது என்றே எடுத்துக்கொள்ள வேண்டும். இனி அடுத்த பாடலைக் காணலாம்.

“பிராணன் மனத்தொடும் பேராது அடங்கிப்

பிராணன் இருக்கில் பிறப்பு இறப்பு இல்லை

பிராணன் மடைமாறிப் பேச்சு அறிவித்துப்

பிராணன் நடைபேறு பெற்று உண்டீரே.’

திருமந்திரம்- பாடல் எண்: 560

ஆன்மிகப் பாதையில் செல்பவர்களுக்கும், ஞானத் தேடலில் இறங்குபவர்களுக்கும் இறுதி யான குறிக்கோள் ஒன்றேயாகும். அது பிறப்பு- இறப்பு அற்ற முக்தி நிலை! வழிகள் வெவ்வேறாக இருந்தாலும் முக்தி நிலையை அடைவதே குறிக்கோளாக இருக்கிறது.

பிராணனும் மனமும் ஒன்றாக இணைந்து, ஒன்றில் ஒன்று அடங்கி ஒடுங்கும் நிலையை அடையும்போதுதான் பிறப்பு - இறப்பு இல்லாத நிலை உருவாகும் என்கிறார் திருமூலர்.

“பிராணன் மனத்தொடும் பேராது அடங்கிப்

பிராணன் இருக்கில் பிறப்பு இறப்பு இல்லை.’

“பேராது’ என்ற சொல்லுக்கு “விலகாது’ என்று பொருள். பிராணன் மனத்திலிருந்து விலகாமல் இரண்டும் ஒன்றாக இணைந்து அடங்க வேண்டும். பிராணாயாமம் எனும் மூச்சுப் பயிற்சியின் வாயிலாகவே இது சாத்தியமாகும் என்கிறார் திருமூலர்.

நாம் சுவாசிக்கும்போது மூச்சுக் காற்றானது (பிராணன்) மேலிருந்து கீழாகவே செல்கிறது அல்லவா? இதுவே இயல்பான மூச்சு. ஆனால் இத்தகைய இயல்பான சுவாச முறையினால் முக்தி நிலையை அடைய இயலாது. பிராணன் தனது இயல்பான பாதையை விட்டு மாறி (மடைமாறி) மேல்நோக்கிச் சென்று ஆக்ஞை, லலானம், சகஸ்ராரம் ஆகிய உயர்நிலைச் சக்கரங்களை அடைய வேண்டும். அப்போதுதான் பிறப்பு- இறப்பு இல்லாத முக்தி நிலை உருவாகும்.

“மடைமாறி’ என்ற ஒரு சொல்லில் பல சூட்சுமங்கள் உள்ளன. தண்ணீர் செல்லும் சிறிய வாய்க்காலையே (ஈட்ஹய்ய்ங்ப்) “மடை’ என்பார்கள். மடை மாறி என்ற சொல்லுக்கு (மேலே கண்டபடி) கீழ்நோக்கிச் செல்லும் பிராணன் தனது பாதையிலிருந்து மாறி மேல்நோக்கிச் செல்ல வேண்டும் என்றும் பொருள் கொள்ளலாம். இது தவிர மேலும் இரு சூட்சுமங்கள் இந்த ஒற்றைச் சொல்லில் உள்ளன.

சுவாசம் என்பது இடது நாசி, வலது நாசி என மாறி மாறி வரும்; இரண்டு மணி நேரத்திற்கு ஒருமுறை இந்த மாற்றம் நிகழும்

இது இயல்பான சுவாச நிலை. தொடர்ந்த மூச்சுப் பயிற்சி, தியானம், யோகாசனங்கள் ஆகியவற்றின் மூலம் இந்த இயல்பான நிலை மாறி (மடை மாறி) இடது நாசியில் மட்டுமே சுவாசம் செல்லும் நிலை உருவாகும்போதுதான் பிறப்பு- இறப்பு அற்ற நிலை உருவாகும். இது ஒரு சூட்சுமம். மேலும் ஒன்று உள்ளது.

இடது நாசியில் சுவாசம் செல்லும்போது இடகலை நாடி தூண்டப்பட்டு அந்த நாடியில் அதிகப்படியான பிராணன் பாயும். வலது நாசியின் வழியாகச் சுவாசிக்கும்போது பிங்கலை நாடி தூண்டப்பட்டு அந்த நாடியில் அதிகப் படியான பிராணன் பாய்ந்து செல்லும். இதுவே இயல்பான சுவாச நடை.

இந்த இயல்பு நிலை மாறி (மடை மாறி) ஒவ்வொரு முறை சுவாசிக்கும் போதும் பிராணன் சுழுமுனை நாடியில் பாயத் துவங்கும்போதுதான் பிறப்பு- இறப்பு இல்லாத முக்தி நிலையை அடைய முடியும். தொடர்ந்து பிராணாயாமப் பயிற்சிகளை மேற்கொண்டு யோகக் கலையில் உயர்நிலையை அடைந்தவர்களுக்கு மட்டுமே இது சாத்தியமாகும். பிராணன் தனது இயல்பான பாதையிலிருந்து “மடைமாறி’ (ஈட்ஹய்ஞ்ங் ர்ச் ஈட்ஹய்ய்ங்ப்) சுழுமுனை நாடியில் பாயத் துவங்கும்போது எல்லையற்ற பேரானந்த நிலை உருவாகும். யோகிகளுக்கும் ஞானிகளுக்கும் மட்டுமே இது சாத்தியமாகும்.

இந்தப் பாடலின் மூன்றாவது வரியில் “பேச்சு அறிவித்து’ என்ற ஒரு சொல் வருகிறதல்லவா? அந்தச் சொல்லிலும் ஒரு மிகப் பெரிய சூட்சுமம் ஒளிந்து நிற்கிறது. அதைச் சுருக்கமாகக் காணலாம்.

சாதாரண - இயல்பான சுவாசம் நடைபெறும் வரையில் பேச்சு நிற்காது. மனம் ஒடுங்காது பிராணனிலிருந்து தனியாக நிற்பதால் மனம் அங்குமிங்கும் அலைபாய்ந்து கொண்டேயிருக்கும். வாயும் ஓயாமல் பேசிக்கொண்டேயிருக்கும். ஆனால் மூச்சு மடைமாறி பாயத் துவங்கும்போது சூட்சும உடலிலும் (சக்தி உடல்), பருவுடலிலும் சில மாற்றங்கள் நிகழும்.

* சுழுமுனை நாடியில் பிராணன் பாயும் போது மூலாதாரத்தின் அருகே உறங்கிக் கிடக்கும் குண்டலினி தட்டி எழுப்பப்படும்.

* இந்தக் குண்டலினி சக்தியானது சுழு முனை நாடி வழியே மேலெழும்பி சக்கரங்களை அதிக வலிமையுடன் இயங்கச் செய்யும்.

* முதலில் கீழ்நிலைச் சக்கரங்கள் தூண்டப் படும்.

* தொடர்ந்து யோகப் பயிற்சிகளைச் செய்து வரும்போது இடைநிலைச் சக்கரங்கள் தூண்டப் படும்.

* மேலும் பயிற்சிகளைத் தொடர்ந்து செய்து வரும்போது உயர்நிலைச் சக்கரங்கள் தூண்டப்படுகின்றன.

* ஒவ்வொரு சக்கரத்தையும் குண்டலினி இயக்கும்போது அந்த சக்கரத்தோடு தொடர்பு டைய பல சித்திகள் சாதகருக்குக் கிடைக்கும்.

* கீழேயுள்ள ஐந்து சக்கரங்களையும் கடந்து ஆறாவது சக்கரமான ஆக்ஞை சக்கரத்தைக் குண்டலினி அடையும்போது, “திரிகால ஞானம்’ எனும் சித்தி கிடைக்கும். கடந்த காலம், நிகழ்காலம், வருங்காலம் ஆகிய மூன்று காலங் களையும் உணர்ந்தவர்களையே, “முக்காலமும் உணர்ந்த முனிவர்கள்’ அல்லது திரிகால ஞானி என்கிறோம்.

ஆறாவது சக்கரத்தையும் கடந்து, ஏழாவது சக்கரமான சகஸ்ரார சக்கரத்தை குண்டலினி அடையும்போதுதான் பரமாத்மாவும் ஜீவாத்மா வும் இணையும் நிகழ்வு நடைபெறும். இந்த நிலையை அடைந்த மனிதன் கடவுளுக்கு இணையான சக்திகளையும் திறமைகளையும் கொண்டவனாக இருப்பான்.
இங்கேதான் ஒரு அற்புதமான சூட்சுமம் உள்ளது. ஆறாவது சக்கரமான ஆக்ஞை சக்கரம் வரையில் ஒவ்வொரு சக்கரமும் குண்டலியினால் இயக்கப்படும்போது கிடைக்கப் பெறும் சித்திகளை ஒரு மனிதன் தன் விருப்பப்படி பயன்படுத்திக் கொள்ள முடியும்.

ஆனால் ஆறாவது சக்கரத்தைத் தாண்டி குண்டலினி ஏழாவது சக்கரத்திற்குச் செல்லும் வழியில் ஒரு வேகத்தடை உள்ளது. அதன் பெயர் “தாமச நாடி’. குண்டலினி ஆறாவது சக்கரத்தைத் தாண்டிச் செல்லும்போது லலான சக்கரம் மட்டுமின்றி, இந்த தாமச நாடியும் தூண்டப் படுகிறது.

“தாமசம்’ என்ற சொல்லுக்கு தாமதம், சோம்பல், சுறுசுறுப்பின்மை, உள்ளே ஒடுங்குதல் என பல அர்த்தங்கள் உண்டு. இந்த தாமச நாடி தூண்டப்படும்போது அந்த மனிதரிடம் ஒரு பற்றற்ற நிலை உருவாகி வரும். எதிலும் ஒரு ஈடுபாடு இராது. ஆரவாரங்கள் எல்லாம் அடங்கிப் போகும். சித்து விளையாட்டுகள் எல்லாம் மறைந்து, தன்னுள்ளே ஒடுங்கி, ஒரு குழந்தையைப் போன்ற தன்மை அவர்களிடம் உருவாகிவிடும்.

தாமச நாடி தூண்டப்பட்டு விட்டால் பேச்சும் அடங்கிப் போகும். மிகமிகத் தேவை யான தருணங்களில் மட்டுமே பேசுவார்கள். பிற மனிதர்களிடமிருந்தும் உறவுகளிடமிருந்தும் ஆசா பாசங்களிலிருந்தும் ஒதுங்கிப் போய் தன்னுள்ளே ஒடுங்கி, எல்லையற்ற ஆனந்த நிலையில் எந்நேரமும் திளைத்திருப்பார்கள். அவர்கள் நிறைந்த குடம்- இனிமேல் தளும்ப மாட்டார்கள்.

பிராணனும் மனமும் தனித்தனியே இருக்கும் வரையில்தான் “பேச்சு’. இரண்டும் ஒன்றிணைந்து தாமச நாடி தூண்டப்பட்ட பின் பேச்சு என்பதே இராது. இதையே “பேச்சு அறிவித்து’ என்ற இரு சொற்களில் திருமூலர் சூட்சுமமாகக் கூறிச் சென்றுள்ளார்.

No comments:

Post a Comment