சிவபுராணம்

Wednesday, September 15, 2010
சிவபுராணம்

நமச்சிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க
இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க
கோகழி ஆண்ட குருமணிதன் தாள் வாழ்க
ஆகமம் ஆகி நின்று அண்ணிப்பான் தாள் வாழ்க
ஏகன் அநேகன் இறைவன் அடி வாழ்க [5]

வேகம் கெடுத்தாண்ட வேந்தன் அடி வெல்க
பிறப்பறுக்கும் பிஞ்ஞகன் தன் பெய்கழல்கள் வெல்க
புறத்தார்க்குச் சேயோன் தன் பூங்கழல்கள் வெல்க
கரங்குவிவார் உள் மகிழும் கோன் கழல்கள் வெல்க
சிரம் குவிவார் ஓங்குவிக்கும் சீரோன் கழல் வெல்க [10]

ஈசன் அடி போற்றி எந்தை அடி போற்றி
தேசன் அடி போற்றி சிவன் சேவடி போற்றி
நேயத்தே நின்ற நிமலன் அடி போற்றி
மாயப் பிறப்பறுக்கும் மன்னன் அடி போற்றி
சீரார் பெருந்துறை நம் தேவன் அடி போற்றி [15]
ஆராத இன்பம் அருளும் மலை போற்றி

சிவன் அவன் என் சிந்தையுள் நின்ற அதனால்
அவன் அருளாலே அவன் தாள் வணங்கிச்
சிந்தை மகிழச் சிவ புராணந்தன்னை
முந்தை வினை முழுதும் ஓய உரைப்பன் யான். [20]


"கண்ணுதலான் தன் கருணைக் கண் காட்ட வந்தெய்தி
எண்ணுதற்கு எட்டா எழிலார் கழல் இறைஞ்சி
விண்ணிறைந்து மண்ணிறைந்து மிக்காய் விளங்கொளியாய்
எண்ணிறந்து எல்லை இலாதானே நின் பெருஞ்சீர்
பொல்லா வினையேன் புகழுமாறு ஒன்றறியேன் [25]

புல்லாகிப் பூடாய் புழுவாய் மரமாகிப்
பல்விருகமாகிப் பறவையாய்ப் பாம்பாகிக்
கல்லாய் மனிதராய்ப் பேயாய்க் கணங்களாய்
வல்லசுரராகி முனிவராய்த் தேவராய்ச்
செல்லா நின்ற இத் தாவர சங்கமத்துள் [30]
எல்லாப் பிறப்பும் பிறந்திளைத்தேன் எம்பெருமான்
மெய்யே உன் பொன்னடிகள் கண்டின்று வீடுற்றேன்

உய்ய என் உள்ளத்துள் ஓங்காரமாய் நின்ற
மெய்யா விமலா விடைப்பாகா வேதங்கள்
ஐயா என ஓங்கி ஆழ்ந்து அகன்ற நுண்ணியனே [35]

வெய்யாய் தணியாய் இயமானனாம் விமலா
பொய்யாயின எல்லாம் போய் அகல வந்தருளி
மெய்ஞ்ஞானமாகி மிளிர்கின்ற மெய்ச்சுடரே
எஞ்ஞானம் இல்லாதேன் இன்பப் பெருமானே
அஞ்ஞானம் தன்னை அகல்விக்கும் நல்லறிவே [40]



"ஆக்கம் அளவு இறுதி இல்லாய் அனைத்துலகும்
ஆக்குவாய் காப்பாய் அழிப்பாய் அருள் தருவாய்
போக்குவாய் என்னைப் புகுவிப்பாய் நின் தொழும்பில்
நாற்றத்த்தின் நேரியாய் சேயாய் நணியானே
மாற்ற மனங்கழிய நின்ற மறையோனே [45]

கறந்த பால் கன்னலொடு நெய் கலந்தாற் போலச்
சிறந்தடியார் சிந்தனையுள் தேனூறி நின்று
பிறந்த பிறப்பறுக்கும் எஙள் பெருமான்
நிறங்கள் ஓர் ஐந்துடையாய் விண்ணோர்கள் ஏத்த
மறைந்திருந்தாய் எம்பெருமான் வல்வினையேன் தன்னை [50]

மறைந்திட மூடிய மாய இருளை
அறம் பாவம் என்னும் அருங்கயிற்றால் கட்டிப்
புறந்தோல் போர்த்தெங்கும் புழு அழுக்கு மூடி
மலஞ்சோரும் ஒன்பது வாயிற் குடிலை
மலங்கப் புலனைந்தும் வஞ்சனையைச் செய்ய [55]

விலங்கு மனத்தால் விமலா உனக்குக்
கலந்த அன்பாகிக் கசிந்துள் உருகும்
நலந்தான் இலாத சிறியேற்கு நல்கி
நிலந்தன் மேல் வந்தருளி நீள் கழல்கள் காட்டி
நாயிற் கடையாய்க் கிடந்த அடியேற்குத் [60]
தாயிற் சிறந்த தயாவான தத்துவனே


"மாசற்ற சோதி மலர்ந்த மலர்ச் சுடரே,
தேசனே, தேன், ஆர் அமுதே, சிவபுரனே,
பாசமாம் பற்றறுத்துப் பாரிக்கும் ஆரியனே,
நேச அருள் புரிந்து நெஞ்சில் வஞ்சம் கெடப் [65]
பேராது நின்ற பெருங்கருணைப் பேராறே,

ஆரா அமுதே, அளவிலாப் பெம்மானே,
ஓராதார் உள்ளத்து ஒளிக்கும் ஒளியானே,
நீராய் உருக்கி என் ஆருயிராய் நின்றானே,
இன்பமும் துன்பமும் இல்லானே, உள்ளானே, [70]

அன்பருக்கு அன்பனே, யாவையுமாய் அல்லையுமாம்
சோதியனே, துன்னிருளே, தோன்றாப் பெருமையனே,
ஆதியனே, அந்தம் நடுவாகி அல்லானே,
ஈர்த்து என்னை ஆட்கொண்ட எந்தை பெருமானே,

கூர்த்த மெய்ஞ்ஞானத்தால் கொண்டுணர்வார் தம் கருத்தின் [75]
நோக்கரிய நோக்கே, நுணுக்கரிய நுண்ணுணர்வே,
போக்கும் வரவும் புணர்வும் இல்லாப் புண்ணியனே,
காக்கும் எம் காவலனே, காண்பரிய பேரொளியே,

ஆற்றின்ப வெள்ளமே, அத்தா, மிக்காய், நின்ற
தோற்றச் சுடர் ஒளியாய் சொல்லாத நுண்ணுணர்வாய் [80]
மாற்றமாம் வையகத்தின் வெவ்வேறே வந்து அறிவாம்
தேற்றனே, தேற்றத் தெளிவே, என் சிந்தனையுள்
ஊற்றான உண்ணார் அமுதே, உடையானே!



"வேற்று விகார விடக்கு உடம்பின் உள் கிடப்ப
ஆற்றேன் எம் ஐயா அரனே ஓ என்று என்று [85]
போற்றிப் புகழ்ந்து இருந்து பொய் கெட்டு மெய்யானார்
மீட்டு இங்கு வந்து வினைப்பிறவி சாராமே
கள்ளப் புலக்குரம்பைக் கட்டழிக்க வல்லானே

நள்ளிருளில் நட்டம் பயின்றாடு நாதனே
தில்லையுட் கூத்தனே தென்பாண்டி நாட்டானே [90]
அல்லற் பிறவி அறுப்பானே ஓ-வென்று
சொல்லற்கு அரியானைச் சொல்லித் திருவடிக் கீழ்ச்
சொல்லிய பாட்டின் பொருள் உணர்ந்து சொல்லுவார்
செல்வர் சிவபுரத்தினுள்ளார் சிவனடிக் கீழ்ப்
பல்லோரும் ஏத்தப் பணிந்து."
வாதவூர் அடிகள் வாழ்க!
வாழ்த்தும் அவர் அடியார் வாழ்க!!
திருச்சிற்றம்பலம்.

No comments:

Post a Comment