சித்தர்களின் காலமும்

Saturday, September 25, 2010
சித்தர்களின் காலமும் அவர்களின் பெயர்கள் பற்றிய உண்மையும்:

சித்தர்கள் பற்றி தெரிந்துகொள்ளும் முன் அவர்களின் காலம் பற்றி அறிய வேண்டிய கட்டாயமும் நம் முன்னே தோன்றுகின்றது. சித்தர்களில், அகத்தியரின் காலம் இன்னதென்று இதுவரை யாரும் அறுதியிட்டு கூறவில்லை. மேலும் அகத்தியர் இயற்றியதான நூல்களும், காலமும் பாடலுக்கு பாடல் வேறுபடுவதாயும் ஒருவரின் பெயரிலேயே பலர் இருந்திருக்கக்கூடும் என்ற ஐயத்தையும் எழுப்புகிறது. தொல்காப்பியரின் ஆசிரியரான அகத்தியருக்கும் அவரால் எழுதப்பட்டு கிடைக்காமல் போன “அகத்தியம்” என்ற தமிழின் மூல இலக்கண நூலும் இந்த சித்தர் பாடலோடு தொடர்புடையவை தானா என்பது ஆராயப்படவேண்டும்.

அகத்தியருக்குப் பின்னர் அறியப்பட்டதாக கூறப்படும் திருமூலரின் காலம் ஐந்தாம் நூற்றாண்டு என கூறுவாரும் உள்ளனர். வையாரையும் சித்தராக்கி அவரது பாடல் பல ‘சித்தர்பாடல்கள் ஞானக்கோவை’யில் காணக் கிடைக்கின்றன. இடைக்காடரைப்பற்றி தேடும்போது இவர் பதினைந்தாம் நூற்றாண்டை சேர்ந்த தொண்டை அல்லது சேர நாட்டவர் என்றும் குறிப்பு இருந்தபோதும் இடைக் காடர் “ஊசி முறி” என்ற நூலை எழுதியவர் என யாப்பெருங்கலக்காரிகை கூறுகிறது.

திருவள்ளுவ மாலையில் “கடுகைத் துளைத்த” எனப்பாடல் எழுதிய இடைக்காடருக்கும் இவருக்குமான தொடர்பு பற்றி எந்த குறிப்பும் இல்லை. இவர் இடையர் இனத்தை சேர்ந்தவர். போகரிடம் சித்து பயின்றவர். அதனாலேயே இவரை இடைக்காடரர் என்பவரும் உண்டு. இராமத் தேவர் என்பவர் 10ம் நூற்றாண்டை சேர்ந்தவர் என்றும் பூசை விதி என்று பத்து பாடல்களை எழுதியவர் என்றும் உரோம முனியைப் பற்றி கூறுகையில் இவரின் முதல் பாடலில் வரும் ஈற்றடியை வைத்து இவரை உரோம முனி என அழைத்தனர் என்றும் நூலாசிரியர்கள் கூறுகின்றனர்.

நந்தவனத்திலோர் ஆண்டி என்ற பாடலின் மூலம் அறியப்பட்ட கடுவெளிச் சித்தரின் காலம் 11ம் நூற்றாண்டு என்றும், இவரால்தான் ஆனந்தக்களிப்பு என்ற யாப்பிலக்கணம் தமிழுக்கு வந்தது என்றும் பல நூல்களின் வாயிலாக அறியமுடிகிறது. கருவூராரை போகரின் சீடர் என்றும் இவரை தஞ்சை பெரிய கோவிலின் பணியில் உடனிருந்தவர் என்றும் கூறுவதையொட்டி இவரின் காலம் பத்தாம் நூற்றாண்டின் பிற்பகுதி என அறியலாம். இவரின் பெயரும் ஊரை வைத்தே அறியப்பட்டுள்ளது. காகபுசுண்டரின் பெயரும் அவரின் பாடல் 12ல் முதலடியையொட்டி அவருக்கு அப்பெயர் கிட்டியுள்ளது. இவரின் காலமும் சரியாய் அறியப்படவில்லை. குதம்பை என்ற பெண்கள் அணியும் காதணியை அணிந்திருந்ததால் அவர் குதம்பைச்சித்தர் என்றும், கொக்கை எரித்த கொங்கணவர் என்று கொங்கணரும் அறியப்படுகின்றனர்.

கொங்கணரையும், திருவள்ளுவரையும் சமகாலத்தவர் என்று கூறும் புனைகதைகள் இன்றும் உண்டு. இதனால் திருவள்ளுவர் 2000ம் ஆண்டுகளுக்கு முற்பட்டவர் என்பதும் எவ்வளவு உண்மையானது என ஆராயப்பட வேண்டும். ஆசையை பாம்பு என உருவகப்படுத்திய சட்டைமுனியும் பாம்பாட்டிச் சித்தரும் சம காலத்தவர் என்ற கருத்து பல நூல்களில் காணப்படுகின்றது. அதேபோல் சிவவாக்கியரும்,கொங்கணரும் சமகாலத்தவர் என்ற கதைகளையும் சிவவாக்கியர் திரு மூலரின் பாடல்களை ஒத்து பலபாடல்களை எழுதியுள் ளதையும், அவரின் பாடல்களின் மூலம் அறியலாம். மேலும் சிவவாக்கியர் என்ற பெயர் அவரின் “சொல்லுவேன் சிவவாக்கியம்” என்ற காப்புப்பாடல் மூலமே அவருக்கு கிட்டியுள்ளது. பாம்பாட்டிச் சித்தரின் காலம் 10ம் நூற்றாண்டு எனவும்,அவர் பாண்டி அல்லது தொண்டை நாட்டவர் என்ற குறிப்பும் சித்தர் பாடல்களை தொகுத்த நூல்களிலிருந்து கிடைக்கும் செய்தி. பின்னால் வந்த சித்தர்கள் என்று அறியப்படும் பட்டினத்தார் பூம்புகாரை சேர்ந்தவர் என்றும் அவரை தொடர்ந்து வந்த பத்திரகியார் துளுவநாட்டு மன்னன் என்ற செய்தியும் அவர்கள் இருவரும் 14ம் நூற்றாண்டின் இறுதியில் வாழ்ந்தவர்கள் என்றும் அறியப்படுகிறது.

No comments:

Post a Comment