பாம்பன் ஸ்வாமிகள்

Wednesday, September 15, 2010
அருள்மிகு "பாம்பன் ஸ்வாமிகள்" அருளிய

"பகை கடிதல்"

திருவளர் சுடர் உருவே, சிவைகரம் அமர் உருவே,
அருமறை புகழ் உருவே, அறவர்கள் தொழும் உருவே,
இருள் தபும் ஒளி உருவே, என நினை எனது எதிரே,
குருகுகண் முதன் மயிலே, கொணர்தி உன் இறைவனையே! [1]

மறை புகழ் இறை முனரே, மறை முதல் பகர் உருவே,
பொறை மலி யுலகுருவே, புனனடை தரும் உருவே,
இறையிள முகவுருவே, என நினை எனது எதிரே,
குறைவறு திருமயிலே, கொணர்தி உன் இறைவனையே! [2]



இதரர்கள் பலபொரவே, இவனுறை எனது எதிரே,
மதி ரவி பலவெனதேர், வளர் சரண் இடையெனமா,
சதுரொடு வரு மயிலே, தடவரை யசைவுறவே,
குதிதரும் ஒருமயிலே, கொணர்தி உன் இறைவனையே! [3]

பவநடை மனுடர் முனே, படர் உறும் எனது எதிரே,
நவமணி நுதல் அணியேர், நகை பல மிடறணிமால்,
சிவணிய திருமயிலே, திடனொடு நொடி வலமே,
குவலயம் வருமயிலே, கொணர்தி உன் இறைவனையே! [4]


அழகுறு மலர் முகனே, அமரர்கள் பணி குகனே,
மழவுரு உடையவனே, மதிநனி பெரியவனே,
இழவிலர் இறையவனே, என நினை எனது எதிரே,
குழகது மிளிர் மயிலே, கொணர்தி உன் இறைவனையே! [5]

இணையறும் அறுமுகனே, இதசசி மருமகனே,
இணர் அணி புரள் புயனே, என நினை எனது எதிரே,
கணபண மரவுரமே, கலைவுற வெழுதருமோர்
குணமுறு மணி மயிலே, கொணர்தி உன் இறைவனையே! [6]


எளியவ, என் இறைவ, குகா, என நினை எனது எதிரே,
வெளிநிகழ் திரள் களைமீன், மிளிர்சினை எனமிடைவான்,
பளபள வென மினுமா, பல சிறை விரி தரு நீள்,
குளிர்மணி விழி மயிலே, கொணர்தி உன் இறைவனையே! [7]

இலகயின் மயில் முருகா, என நினை எனது எதிரே,
பலபல களமணியே, பலபல பதமணியே,
கலகல கலவெனமா, கவினொடு வருமயிலே,
குலவிடு சிகை மயிலே, கொணர்தி உன் இறைவனையே! [8]


இகலறு சிவகுமரா, என நினை எனது எதிரே,
சுகமுனி வரர் எழிலார், சுரர் பலர் புகழ் செயவே,
தொகு தொகு தொகு வெனவே, சுர நடம் இடுமயிலே,
குகபதி அமர் மயிலே, கொணர்தி உன் இறைவனையே! [9]

கருணை பெய் கனமுகிலே, கடமுனி பணிமுதலே,
அருணையர் அரன் எனவே, அக நினை என எதிரே,
மருமலர் அணி பலவே, மருவிடு களமயிலே,
குரு பல அவிர் மயிலே, கொணர்தி உன் இறைவனையே! [10]


"சஷ்டிநாதன் அருள் சடுதியில் சித்திக்கட்டும்!"
"மயில்வாஹனனுக்கு ஹரோஹரா!!"
"வெற்றி வேல் முருகனுக்கு; ஹரோஹரா !!"

No comments:

Post a Comment