திருப்பரங்குன்றம்
" உதிக்கின்ற செங்கதிர்போல் உருவம் தாங்கி
உள்ளத்தில் நினைப்போரின் துயர் களைந்து
மதி தடவும் வனம் சூழ்ந்த 'பரங்குன்றத்தில்'
மனங்கவரும் திருக்கோயில் கொண்டவனே ! "
திருச்செந்தூர்
"'திருச்செந்தூர்' திருத்தலத்தில் மயில் மீது நடனம்
தெளிவாக ஆடி மனம் குடிகொள்ளும் முருகா!
திருவள்ளி மனம் மேவும் திகழ் கந்த வேளே!
திரு குமபமுனி வணங்கும் செந்தூர் செவ்வேளே!"
பழநி
" தேவர்க்குத் தேவன் தலை வாழ்த்திப் போற்றும்
திருவாவினன்குடி திகழ்வோனே !
தவயோகி எல்லாம் தவறாமல் வந்து
தவம் செய்யும் "பழநி"ப் பதி வாழ்வே ! "
" ஸ்வாமிமலை"
" தினைப் புனத்து வள்ளியொடும் இந்திராணி மகளாம்
தெய்வயானை தன்னோடும் "குருமலை"யில் தங்கி
வினை களைய வேண்டி வரும் பக்தர் வினை களையும்
வெற்றி வடிவேலவனே ! தேவர் பெருமானே ! "
" அருள்மிகு பாலசுப்ரமணிய ஸ்வாமி, திருத்தணி"
" நின்னை வணங்கும் பக்தர் அனைவரும்
நன்றே தழைத்து நன்னெறி நின்றிட
முன்னைப் பழம்பதி 'திருத்தணி' மேவும்
முருகா ! முருகா ! முனைவேல் முருகா ! "
"அருள்மிகு சோலைமலை முருகன், பழமுதிர் சோலை"
" நஞ்சினை உண்டு நடமிடும் ஈசர்
நயந்திடும் நறுந்தமிழ் மொழி பேசி
கொஞ்சிடும் முருகா ! கூர்வடிவேலா!
"பழமுதிர் சோலை" பெருமாளே! "
No comments:
Post a Comment