ஐயப்பன் கவசம்

Wednesday, September 15, 2010
"ஐயப்பன் கவசம்"

'மண்ணுலகெல்லாம் காத்தருள் செய்ய
மணிகண்ட தேவா வருக வருக !
மாயோன் மைந்தா வருக வருக !
ஐங்கரன் சோதரா ஐயப்பா வருக வருக !

புலிவாஹனனே வருக வருக !
புவியெல்லாம் காத்திட வருக வருக !
பூரணை நாதனே வருக வருக வருக !
புண்ணிய மூர்த்தியே வருக வருக !

பூதநாயகா வருக வருக !
புஷ்களை பதியே வருக வருக !
பொன்னம்பலத்துறை ஈசா வருக !
அடியாரைக் காக்க அன்புடன் வருக !

வருக வருக வாசவன் மைந்தா !
வருக வருக வீரமணிகண்டா !
வஞ்சனை நீக்கிட வருக வருக !
வல்வினை போக்கிட வருக வருக !

ஐயம் தவிர்த்திட ஐயப்பா வருக !
அச்சம் அகற்றிட அன்பனே வருக !
இருவினை களைந்தே எனையாட்கொள்ள
இருமூர்த்தி மைந்தா வருக வருக !

பதினெண் படியை மனதில் நினைக்கப்
பண்ணிய பாவம் பொடிப் பொடியாகும்.
ஐயப்பா சரணம் என்றே கூறிட
ஐம்பூதங்களும் அடி பணிந்திடுமே !

சபரிகிரீசனை நினைந்தே நீறிடத்
துன்பங்கள் யாவும் தூள் தூளாகும்
சரணம் சரணம் என்றே சொல்லிட
சித்திகள் யாவும் வந்தடைந்திடுமே !

பம்பையின் பாலன் பெயர் சொல்லிடவும்
பகைவர்கள் எல்லாம் பணிந்தே வணங்குவர்
ஐயப்பன் பாதம் அநுதினம் நினைக்க
அவனியில் உள்ளோர் அடி பணிந்தேத்துவர் !

சரணம் சரணம் ஐயப்பா !
சரணம் சரணம் சபரிகிரீசா !
சரணம் சரணம் சத்குரு நாதா !
சரணம் சரணம் ஸ்வாமியே சரணம் !

No comments:

Post a Comment