பிரம்மோத்தர காண்டம்

Saturday, September 25, 2010
இனி உருத்திராட்சத்தின் முகங்களையும் அதன் அதிதேவதைகளையும் காண்போம். இருமுக உருத்திராட்சம் பரத்துவ சொரூபம்.

இதை அணிந்தால் பரத்துவத்தை அடையலாம்.

இருமுக உருத்திராட்சம் அர்த்தநாரிஸ்வரன் உருவம் உடையது. இதனை அணிந்தால் எப்போதும் இன்பம் உண்டாகும்.

மும்முக உருத்திராட்சம் மூன்று அக்னியின் சொரூபம் கொண்டது. இதனை அணிவது அக்னி தேவர்க்கு இன்பமூட்டும்.

நான்கு முக உருத்திராட்சம் பிரம்மனின் சொரூபம். இதை அணிந்தால் பிரம்ம தேவன் இன்பமடைகிறான்.

ஐந்து முக உருத்திராட்சம் பிரம்ம சொரூபம் கொண்டது. இதனை அணிவதால் நரஹத்தி அழிகிறது.

ஆறுமுக உருத்திராட்சம் அதிதேவதை சுப்ரமண்யர். இதை அணிந்தால் அதிக செல்வமும் ஆரோக்கியமும் கிடைப்பதுடன், பக்தியும், அறிவும், செல்வமும், சுத்தியும் எய்தும்.

அறுமுக உருத்திராட்சத்திற்கு விநாயகரை அதிதேவதை என்றும் சொல்வார்கள்.

ஏழு முக உருத்திராட்சத்திற்கு அதிதேவதை சப்தமாதா. இதனை அணிந்தால் ஞானமும், ஆரோக்கியமும், செல்வமும் கிடைக்கும்.

எட்டு முக உருத்திராட்சம் அணிந்தால் அஷ்ட வசுக்களும், கங்கை பலனும் அடையும். அதிதேவதை அஷ்டவசு.

ஒன்பது முக உருத்திராட்சத்தை அணிந்தால் நவசக்திகளும் இன்பமடையும். இதன் அதிதேவதை நவசக்தி.

பத்துமுக உருத்திராட்சத்திற்கு அதிதேவதை எமன். இதனை அணிந்தால் பாவங்களுக்கெல்லாம் பரிகாரம் ஏற்படும்.

பதினொரு முக உருத்திராட்சத்திற்கு அதிதெய்வம் பதினொரு உருத்திரர். இது சகல செளபாக்கியங்களையும் விருத்தியடையச் செய்கிறது.

பன்னிரண்டு முக உருத்திராட்சம் மகாவிஷ்ணுவின் சொரூபம். இது பன்னிரு ஆதித்ய சொரூபம் என்று அழைக்கப்படுகிறது.

பதின்மூன்று உருத்திராட்சம் போகத்தையும், சித்தியையும், சுகத்தையும் கொடுக்கிறது. இதனை அணிந்தால் காமதேவன் மகிழ்ச்சியடைகிறான்.

உருத்திர நேத்திரத்தில் உண்டாகிய பதினான்கு முக உருத்திராட்சம் சகலவிதமான நோய்களையும் நீக்கி என்றும் ஆரோக்கியத்தைக் கொடுக்கிறது.

108 உருத்திராட்சம் கொண்ட மாலையை எப்போதும் மார்பில் அணிந்திருப்பவன் அடுத்தடுத்து செய்த அஸ்வமேதயாக பலத்தை அடைகிறான்.

உருத்திராட்சத்தின் அடி பிரம்மா. நாளம் விஷ்ணு. முகம் உருத்திரர். பிந்து சமஸ்தேவர்கள். அர்ச்சனை, ஹோமம் முதலியவற்றின்போது இதனை அணிந்தால் அஸ்வமேத யாகத்தின் பலனைக் கொடுப்பதோடு, எல்லா பாவங்களிலிருந்தும் விடுதலை கிடைக்கிறது.

உருத்திராட்ச மாலையைக்கொண்டு ஜெபித்தால் அதிக பலம், அதிக புண்ணியம். தலையில் அணிந்து குளித்தால் கங்கையில் நீராடிய பலன் கிட்டும். குறிப்பாகச் சிவனடியார்களால் போற்றப்படும் இரு முகம், ஐந்து முகம், பதினொரு முகம், பதினான்கு முகம் கொண்ட உருத்திராட்சங்களை அன்போடு பூசித்து அணிகின்ற மானிடர்கள் தரித்திரம் உடையவராய் இருந்தாலும் எல்லாரையும்விட அவரே செல்வம் நிரம்ப உடையவராகிறார்.

தீட்சை பெற்ற பெண்களும் உருத்திராட்சத்தை அணியலாம். உருத்திராட்ச தரிசனம் பாவத்தைப் போக்கும். தொட்டால் சகல வெற்றிகளையும் கொடுக்கும். குவிக்கும்.

பிறப்பு – இறப்பு தீட்டுக்காலங்களில் உருத்திராட்சம் அணியக்கூடாது. சிவன் நாமத்தை இடைவிடாமல் உச்சரிப்போரும், புனிதம் மிக்க உருத்திராட்சத்தை அணிந்திருப்போரும் சிவ பக்தர்களில் தலைசிறந்தோர் என்று கூறுகின்றனர்.

‘ஆயமாமணி ஆயிரம் புனைந்திடில் அவரை
மாலயன் நான்முகன் புரந்தரன் வானவர் முதலோர்
பாயுமால் விடைப் பரமெனப் பணிகுவர் என்றால்
தூயமாமணி மிலைந்தவர் மனிதரோ சொல்வீர்’

என்று உருத்திராட்சத்தின் மேன்மையைப் பிரம்மோத்தர காண்டம் சிறப்பித்துக் கூறுகின்றது.

No comments:

Post a Comment