ஒளவையார் - கோயில் இல்லா - 2

Sunday, November 14, 2010
ஆ- பசு எனப் பொருள்படும்.பசு என்றால் ஆன்மா. ஆன்மா லயப்படும் இடம் என்பதே ஆலயத்தின் பொருளாகும். கோ என்றால் அரசன். இல் என்றால் இருக்கும் இடம்.எனவே கோயில் என்பது பசுக்களின்(ஆன்மாகளின்) பதியாகிய இறைவன் சிவப்பரம்பொருள் எழுந்தருளியிருக்கும் இடம் என பொருள்படும்.

கற்பனைக் கடந்த சோதியாகிய சிவப்பரம்பொருள் ஆன்மாக்களை ஈடேற்றும் கருணையின் நிமித்தம் அற்புதக் கோலந்தாங்கி எழுந்தருளியுள்ள திருக்கோயிலுக்கு சைவ சமயிகள் யாவரும் நாள்தோறும் சென்று விதிப்படி பயபக்தியுடன் வழிபடுதல் வேண்டும்.
ஒவ்வொரு நாளும் ஆலயம் செல்ல இயலாதவர்கள் சோமாவாரம் , மங்கலவாரம், சுக்கிரவாரம்,பிரதோசம்,பௌர்ணமி,அமாவாசை,திருவாதிரை,கார்த்திகை,மாதப்பிறப்பு,சூரியகிரகணம்,சிவராத்திரி,நவராத்திரி,விநாயசதுர்த்தி,விநாயகசட்டி,கந்த சட்டி,போன்ற விசேடநாள்களில் தவறாது செல்லுதல் வேண்டும்.


திருக்கோயில் கோபுரம் தூலலிங்கம் எனப்படும்.கோபுர தரிசனம் கோடி புண்ணியம் என்பர்.


ஆதலால் திருக்கோயில் கோபுரத்தை கண்டதும் கைகூப்பித் தொழுது திருக்கோயிலுக்கு அருகில் உள்ள புண்ணியதீர்த்தத்தில் நீராடி தோய்த்துலர்ந்த ஆடைதரித்து (ஈர ஆடையுடன் ஆலயம் செல்லல் தவறு) பரிசுத்தமாக கோயிலுக்கு செல்லல் வேண்டும்.


ஆலய புண்ணிய தீர்த்தத்தில் குளிக்க முடியாதவர்கள் இல்லத்தில் நித்திய கருமங்களை முடித்து குளித்து தோய்த்துலர்ந்த ஆடையணிந்து ஆலயத்துக்கு வரவேண்டும். வரும்போது இயலுமானவரை அந்நியமான எவருடனும் முட்டாது அவர்களைத் தீண்டாது வரவேண்டும்.(அறிமுகம் இல்லாதவர் மரணவீட்டிற்குச் சென்றுவிட்டும் வரலாம்.எனவேதான் எவரும் தீண்டாதவண்ணம் இயன்றவரை வரவேண்டும்.) ஆலயம் வந்ததும் கேணியில் கால்களை கழுவுதல் வேண்டும்.

தேங்காய்,பழம்,பாக்கு,வெற்றிலை,கற்பூரம்,மலர்கள்,மாலை முதலியனவற்றை தட்டில் அல்லது பாத்திரத்தில் வைத்து அரைக்குக் கீழ்ப்படாது மேலே உயர்த்தப்பட்ட கையில் ஏந்திக் கொண்டு போதல் அவசியம்.
நாம் யாரேனும் பெரியவர் வீட்டுக்கோ அல்லது தெரிந்தவர் வீட்டுக்கோ செல்லும்போது ஏதேனும் அவர்களுக்கு கொண்டுசெல்வதை மரியாதையாக கருதுகிறோம். ஐந்தொழில்களையும் புரிகின்ற இறைவன் எழுந்தருளியுள்ள ஆலயத்திற்கு செல்லும்போது அன்பு என்ற ஒன்றே உண்மையில் போதுமானது.ஆனால்?
ஏதேனும் இறைவனுக்கு செய்யப்படும் பூசைக்கு உதவக்கூடிய பொருட்களில் ஒன்றையேனும் கொண்டுசெல்லாவிட்டால் அந்த அன்புக்கு மரியாதையை நாம் செய்யவில்லை என்றே அர்த்தமாகிறது.

கோயிலுக்குள் நுழைந்ததும் துவஜஸ்தம்பம் எனப்படும் கொடிமரத்தின் அருகில் நிலத்தில் விழுந்து ஆண்கள் அட்டாங்கமாகவும் பெண்கள் பஞ்சாங்கமாகவும் வணங்க வேண்டும்.


அட்டாங்க வணக்கம்:- தலை,கையிரண்டு,செவியிரண்டு,மேவாய்,புயங்களிரண்டு என்னும் எட்டு அங்கங்களும் நிலத்தில் தோயும்படி வணங்குதல் வேண்டும்.
பஞ்சாங்க வணக்கம்:-தலை,கையிரண்டு,முழந்தாளிரண்டு என்னும் ஐந்து அங்கங்கள் நிலத்தில் தோயும்படி வழிபடல் வேண்டும்.
திரயாங்க வணக்கம்:-சிரசிலே இரண்டு கைகளையுங் குவித்தல்


இவ்வணக்கமுறையை ஒரு தரம் இரண்டு தரம் பண்ணுதல் கூடாது. மூன்று தரம், ஐந்துதரம்,ஏழுதரம்,பன்னிரண்டு தரம் என பண்ணுதல் வேண்டும்.
விழுந்து வணங்கும்போது கிழக்கேயாயினும் வடக்கேயாயினும் தலைவைத்து வழிபடல் வேண்டும். நிலத்தில் விழுந்து வணங்க முடியாதவர்கள் (முதியவர்கள்,முழங்கால் என்பு இழையம், முழங்கால் மென்சவ்வு இழையம் தேய்வடையும் குறையுடையவர்கள்) திரியங்க வணங்கத்தை மேற்கொள்வதில் தவறில்லை.

பின்னர் பலிபீடத்தில் பாசங்களை பலியிட்டு பின் நந்திதேவரிடம் நின்று வணங்கி அவர் அனுமதி பெற்று துவாரபாலகர்களை வணங்கி உள்ளே செல்ல வேண்டும்.
"நந்தியெம்பெருமானே, பிறவா யாக்கைப் பெரியோனும் தனக்குவமை இல்லாதவனும் எல்லாம் வல்லவரும் முழுமுதற்பொருளுமாகிய சிவபெருமானை வழிபட அனுமதி வேண்டுகிறேன்.இறைவனின் திருவருள் கிட்ட அருள்பாலியும் ஐயனே" என்று வேண்டலாம்.



பிறகு ஆலய விநாயகர் சன்னிதியில் (வலப்புறமாக விநாயகர் சந்நிதி இருப்பது விதி) நின்று வழிபட்டு குட்டிக் கொண்டு தோப்புக்கரணம் போட்டு வழிபட்டு பின்னர் திருமூலட்டானத்தினை நோக்கி செல்ல வேண்டும். அதனையே கருவறை, மூலத்தானம் எனவும் அழைப்பர்.

No comments:

Post a Comment