அறவழியின் சிறப்பு

Friday, November 5, 2010
அறவழியின் சிறப்பு

பூசை, நியமம், நிட்டை முதலானவற்றை வெளியார் மயங்கச் செய்தாலும், அறவழியில் செல்லாது அந்நியர் பொருள்களின் மேல் ஆசை வைத்துத் தினந்தோறும் அவற்றை மோசஞ்செய்து அபகரிப்பதற்காக எப்போதும் அலைந்து திரிபவர்களுக்கு எழுநரகங்களும் காத்துக்கொண்டிருக்கின்றன; இது உண்மையாகும்.

ஆசைகொண்டு அனுதினமு மன்னியர் பொருளினை
மோசஞ்செய்து அபகரிக்க முற்றிலும் மலைபவர்
பூசையோடு நேமநிட்டை பூரிக்கச்செய் பாதகர்
காசினியி லெழுநரகைக் காத்திருப்ப துண்மையே
என அதருமவழியைப் பின்பற்றினாலுண்டாகும் விளைவை எடுத்துக்கூறி எச்சரிக்கின்றார் சிவவாக்கியர்.

அறவழி பின்பற்றுவதற்கான மனோதிடமின்றிப் பிறர்பொருளை எதிர்நோக்கி அதன்பின்னே ஊரெல்லாம் சுற்றி அலைந்து சுற்றத்தாரால் இகழப்படுகின்ற அவலநிலயை அடைந்தவர்களை,

மனவுறுதி தானிலாத மட்டிப்பிண மாடுகள்
சினமுறப் பிறர்பொருளைச் சேகரித்து வைத்ததைத்
தினந்தினமூ ரெங்குஞ்சுற்றித் திண்டிக்கே யலைபவர்
இனமதிற் பலர்கள்வையும் இன்பமற்ற பாவிகள் என்றும் சாடுகின்றார்.

அளப்பரிய செல்வம் சேர்த்து வைப்பினும் எமனோலை வருகின்ற காலத்தில் குறுக்கே வந்து தடுக்க மாட்டா. பாத்திரமறிந்து ஓடிச்சென்று இட்ட பிச்சையும், மன உவப்போடு செய்த தருமச்செயல்களும் மட்டுமே வந்துதவும் என்பதை,

ஆடுநாடு தேடினும் ஆனைசேனை தேடினும்
கோடிவாசி தேடினுங் குறுக்கேவந்து நிற்குமோ
ஓடியிட்ட பிச்சையும் உகந்துசெய்த தருமமும்
சாடிவிட்ட குதிரைபோல் தருமம்வந்து நிற்குமே
என்ற பாடலால் விளக்குகிறார்.

அவாவொழித்தலே மனநிறைவுக்கான வழி என்பதே சித்தர்களின் பொதுவான கோட்பாடு. அறவழியில் நின்று முத்தி நாடுபவரும், முத்திக்கான ஆசையை நீப்பது அவசியம்.
ஆசையறுமின்கள் ஆசையறுமின்கள்
ஈசனோடாயினும் ஆசையறுமின்கள் என்பது திருமந்திரம்.

அவ்வழியிலேயே, சிவவாக்கியரும் ஆசையை ஒழிப்பீரானால் நாடும் அந்த தத்துவப்பொருள் தானேவந்து கைகூடும் என்பதனை

வேணும்வேணு மென்றுநீர் வீணுழன்று தேடுவீர்
வேணுமென்று தேடினாலு முள்ளதல்ல தில்லையே
வேணுமென்று தேடுகின்ற வேட்கையைத் திறந்தபின்
வேணுமென்ற வப்பொருள் விரைந்துகாண லாகுமே என்கின்றார்.

No comments:

Post a Comment