ஒன்றே தெய்வம்

Friday, November 5, 2010
ஒன்றே தெய்வம்:

தமிழ்ச்சித்தர்கள் கடைப்பிடித்த மெய்யுணர்வு நெறிமுறையில் தனிப்பட்ட தெய்வங்களுக்கு இடமில்லை. இறைவனைப்பற்றிய ஆத்திகக் கோட்பாடு தவறான இரண்டு கருத்துக்களை உருவாக்கியுள்ளது. தனிப்பட்ட தெய்வம் என்ற கருத்து ஒன்று; படைத்தவனான இறைவன் படைப்புக்களிலிருந்து நிரந்தரமாக வேறுபட்டிருப்பவன் என்பது மற்றொன்று. சிவவாக்கியரின் பார்வையில் எனக்கென்றொரு தனிக்கடவுள், உனக்கென்றொரு தனிக்கடவுள் என்று இருக்கமுடியாது. ஏனெனில் அதனால் இரண்டு கடவுளர் உருவாவர்.

எங்கள்தேவ ருங்கள்தேவ ரென்றிரண்டு தேவரோ
அங்குமிங்கு மாகிநின்ற வாதிமூர்த்தி யொன்றலோ
அங்குமிங்கு மாகிநின்ற வாதிமூர்த்தி யொன்றெனில்
வங்கவாரஞ் சொன்னபேர்கள் வாய்புழுத்து மாள்வரே.
--------- சிவவாக்கியர்.

இரண்டற விளங்கும் இறைவனை விட்டுணு எனவும் சிவன் எனவும் பாகுபடுத்தி வணங்குவது மடமை. பொன்னாற் செய்யப்படுகின்ற நகைகள் பல வடிவம் கொண்டவையாயிருப்பினும் ஆதாரமாயிருப்பது பொன் ஒன்றே.

தங்கமொன்று ரூபம்வேறு தன்மையான வாறுபோல்
செங்கண்மாலு மீசனுஞ் சிறந்திருந்த தெம்முளே

மற்றும்,
எங்கள்தெய்வ முங்கள்தெய்வ மென்றிரண்டு பேதமோ
உங்கள்பேத மன்றியே வுண்மைரெண்டு மில்லையே
என்று, கடவுளைப் கூறுபோட்டுக்கொள்வது மனிதர்களிடமுள்ள பேதமையாலும், பேதவுணர்வாலுமே என்பதனையும் வலியுறுத்துகிறார்.

அரியுமாகி யயனுமாகி அண்டமெங்கு மொன்றதாய்
பெரியதாகி யுலகுதன்னில் நின்றபாத மொன்றலோ
விரிவதென்று வேறுசெய்து வேடமிட்ட மூடரே
அறிவினோடு பாருமிங்கு மங்குமெங்கு மொன்றதே
எனவும் கூறி, ஒன்றே இறைவன் எனும் உண்மையை வலியுறுத்துகின்றார்.

No comments:

Post a Comment