இறைவன் கோயில்

Friday, November 5, 2010
உடலே இறைவன் கோயில்

சித்தர் மரபில் மனிதவுடல் என்பது பேரண்டத்தின் குறுவடிவமாகக் கொள்ளப்படுகின்றது. உடலை ஒப்புக்கொள்கின்றவன் உலகையே ஒப்புக் கொண்டவனாகின்றான் என்பதே சித்தர்களின் நிலைபாடு. உருவிலங்குமேனி எனும் புலன்களால் உணரத்தக்க மனித உடலின் தன்மை காலத்தால் அழிவதும், திருவிலங்குமேனி எனும் அகவுணர்வால் உணரத்தக்க உடல் அழியாமற் பாதுகாக்கப்பட வல்லதுமாகும் என்பது சிவவாக்கியர் கொள்கை.

உருவிலங்கு மேனியாகி யும்பராகி நின்றநீர்
திருவிலங்கு மேனியாகச் சென்றுகூட லாகுமே
என்று அவர் உறுதியளிக்கின்றார்.

சிவவாக்கியத்தின் ஆறாவது பாடல் முக்கியமாகக் கவனிக்கத்தக்கது.

வடிவுகண்டு கொண்டபெண்ணை மற்றொருவ னத்தினால்
விடுவனோவ வனையின்னம் வெட்டவேணு மென்பனே
நடுவன்வந் தழைத்தபோது நாறுமிந்த நல்லுடல்
சுடலைமட்டுங் கொண்டுபோய்த் தோட்டிகைக் கொடுப்பரே

இதன் பொருளாவது, யாக்கையே இறைவனை அறியவல்ல கருவியாக இருக்கும்போது, அதனைப் பேணாது புறக்கணித்து முடிவில் மரணமடைந்து சுடலையில் எரிபடக்கொடுக்கின்றனர். அடுத்ததாக சிவவாக்கியர் சொல்லணிமிக்க ஒரு கேள்வியைக் கேட்கின்றார்: இதே மனிதர்கள் அழகிய உடல்வடிவுள்ள பெண்ணைத் தேடிக்கண்டுபிடித்து திருமணம் செய்துகொண்ட பின், அப்பெண்ணை மற்றொருவன் கவர்ந்து கொண்டு போக எண்ணினால் அனுமதிப்பார்களா? ஆகவே மாந்தர் தங்கள் இல்லப் பெண்களைக் காப்பது போல யோகமுறைகளால் தத்தம் உடல்களையும் பேணிப் பாதுகாக்க வேண்டும் என மக்களுக்கு உணர்த்துகிறார்.

சருகருந்தி நீர்குடித்து சாரல்வாழ் தவசிகாள்
சருகருந்தில் தேகங்குன்றி சஞ்சலமுண் டாகுமே
என உதிர்ந்த இலைச்சருகுகளை மட்டும் தின்று, தண்ணீரையும் குடித்து மலைச்சாரல்களில் வாழும் தவசிகளிடமும் அவர் உடலைப் பேணிக்காக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்துகின்றார்.

இவ்வாறு, மனிதவுடலுக்கான முக்கியத்துவத்தையும், அதன் உள்ளார்ந்த பயனையும் சுட்டிக்காட்டுகின்றார் சிவவாக்கியர். உடலாகின்ற கோவிலில் இறைவனைக் காணலாம் என உறுதியாக நம்பிக்கையூட்டுகிறார் அவர். ஆனால், ஞானம் கொண்டு நல்லெண்ணத்துடன் வணங்கவேண்டியது அவசியம்.
ஞானமான பள்ளியில் நன்மையாய் வணங்கினால்
காயமான பள்ளியில் காணலா மிறையையே.

அதுமட்டுமன்று, எவ்வாறு குடமானது நீரில் அமிழ்த்தப்படும்போது வெள்ளத்தால் நிரம்பப் படுகின்றதோ, அவ்வாறே எங்கும் இறைமயமாக இருக்கின்ற இவ்வெளியிலுள்ள இவ்வுடலும் சிவத்தால் நிறைந்திருக்கின்றது என்பதனை,
அக்குடஞ் சலத்தைமொண் டமர்ந்திருந்த வாறுபோல்
இச்சடஞ் சிவத்தைமொண் டுகந்தமர்ந் திருப்பதே
என்று விளங்கக் கூறுகின்றார்.

மனிதவுடலுருவால் ஆன அரங்கமே இறைவனின் திருவரங்கம் என்ற உண்மையறியாது உழலும் மாந்தர்களைக்கண்டு அவர் வருந்துகிறார்.

உருவரங்க மாகிநின்ற வுண்மையொன்றை யோர்க்கிலீர்
கருவரங்க மாகிநின்ற கற்பனை கடந்துபின்
திருவரங்க மென்றுநீர் தெளிந்திருக்க வல்லீரே.

இங்ஙனம் இறைவனை மெய்யுள் காணும் பயிற்சி நாடாமல் வெளியேதேடி அலையும் மக்களை நோக்கி,
தூரந்தூரந் தூரமென்று சொல்லுவார்கள் சோம்பர்கள்
பாரும்விண்ணு மெங்குமாய்ப் பரந்த அப் பராபரம்
ஊருநாடு காடுமோடி யுழன்றுதேடு மூமைகாள்
நேரதாக வும்முளே யறிந்துணர்ந்து கொள்ளுமே
எனவும்,

காடுநாடு வீடுவிண் கலந்துநின்ற கள்வனை
நாடியோடி யும்முளே நயந்துணர்ந்து பாருமே
எனவும் கடிகிறார்.

அதுமட்டுமன்று,
உறியிலே தயிரிருக்க ஊர்புகுந்து வெண்ணெய்தேடும்
அறிவிலாத மாந்தரோ டணுகுமாற தெங்ஙனே
என்றும் வருந்துகிறார் சிவவாக்கியர்.

சிவவாக்கியர் மனிதவுடலைத் தனிமுதலான மெய்ப்பொருளை அடைவதற்கான புனித வழியின் வாயிற்படியாக அடையாளம் காட்டுகிறார். புண்ணிய நதிகளெனவும், கோயில்களெனவும், மலைகளெனவும் அநேகவாசல்களைத் தேடிப்போவானேன். ஏழையான மனிதனுக்குகந்த புனிதவாசல் உடலான இவ்வாசலே.
அண்டவாச லாயிரம்ப்ர சண்டவாச லாயிரம்
ஆறிரண்டு நூறுகோடி யானவாச லாயிரம்
இந்தவாச லேழைவாச லேகபோக மானவாசல்
எம்பிரான் இருக்கும்வாசல் யாவர்காண வல்லரே.
என்று அவர் பாடுகிறார்.

No comments:

Post a Comment